கட்டுரைகள்

WhatsApp Image 2025 02 05 at 21.43.43 634a752e

 

ஆசிரியர்: ஜான் ப்ளேவெல் (1627 - 1691)

தமிழாக்கம்: ஆண்ரோ கிங்ஸ்லி ராஜ்

ஒலி வடிவில் கேட்பதற்கு,

 

"இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை." (மத்தேயு 9:12)

 நோயுற்ற ஆத்துமாக்களுக்கான ஒரே மருத்துவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான். இந்த உலகம் மிகப் பெரிய மருத்துவமனை. இதில் நோய் பாதிப்பு உள்ளவர்களாலும் மரித்துக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களாலும் நிரம்பி இருக்கிறது. பாவம் என்கிற ஆயுதத்தால் அனைவரும் காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள். சிலர் அவர்களுடைய வேதனைகளைப் பற்றி கவலைப்படாமல், அவர்களின் வலியைப் பற்றிய உணர்வு கூட இல்லாமல் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் உணர்வுகளையும், ஆபத்துக்களையும் அறிந்தவர்கள். தங்கள் நிலையைக் குறித்து அறிந்து முணுமுணுத்துக் கொண்டு மற்றும் வருத்தத்துடன் இருக்கிறார்கள். இரக்கம் நிறைந்த தேவன், அழிந்துக் கொண்டிருக்கும் உலகத்தின் மீது கொண்ட மிகுந்த மனதுருக்கத்தினால் பரலோகத்திலிருந்து ஒரு மருத்துவரை (மீட்பரை) அனுப்பினார். மருத்துவர் செய்ய வேண்டியவைகளைக் குறித்து எல்லாவற்றையும் விளக்கிக் கூறியிருந்தார். கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார். தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். "இருதயம் நறுங்குண்டவர்களை குணமாக்கவும் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடருக்கு பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்..." (ஏசாயா 61:1,2) (லூக்கா 4:18) அவர் ஜீவ விருட்சமாயிருக்கிறார். அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்களை குணப்படுத்துகின்றன. (வெளிப்படுத்தல் 22:2) "யெகோவா ராஃப்பா" அதாவது கர்த்தர் நம்மை குணமாக்குகிறவர். "யெகோவா சிட்கெனு" கர்த்தர் நம் நீதியாயிருக்கிறார். வனாந்திரத்திலே உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பமானது ஜனங்களை குணப்படுத்தியது அது, நமக்கு ஒரு மிக சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறது. நம்முடைய மிகப் பெரிய மருத்துவர் இயேசு கிறிஸ்து. சர்ப்பமானது மோசேயினால் வனாந்திரத்தில் உயர்த்தப்பட்டது போல மனுஷ குமாரனும் உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14) அவரிடம் வருகின்ற எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவரையும் அவர் குணமாக்குகிறார். முக்கியமாக இங்கு கிறிஸ்து சுகமாக்கும் நோயுற்ற ஆத்துமாக்களின் நோய்களை சுட்டிக்காட்டுகிறேன்...

முதலாவது, குற்றம் என்கிற பாவம்: இது ஒரு ஆவிக்குறிய காயம். ஏழை பாவியாகிய ஒருவனுடைய இருதயத்தில் விழுந்த கத்திக்குத்து. ரோமன் கத்தோலிக்கர்கள் (மற்றும் பிரிவினை சபையை சேர்ந்தவர்கள்) தங்கள் இஷ்டத்திற்கு ஆதாரமின்றி மரணத்திற்குறிய பாவம் மரணத்திற்கேதுவல்லாத பாவம் என்று வகைப்படுத்துகிறார்கள். ஆனால், எல்லா பாவங்களும் அதனுடைய சொந்த இயல்பு மரணத்துக்குறியவையாக இருப்பதை மறந்து விடக்கூடாது. "பாவத்தின் சம்பளம் மரணம்." (ரோமர் 6:23) பாவம் அதன் தன்மையில் மரணத்திற்குறியதாயினும், கிறிஸ்து தன்னுடைய அதிகாரமுள்ள விஷேசித்த இரத்ததினாலே (நறுமனமுள்ள மருந்து) அதை குணமாக்க அவர் வல்லமையுள்ளவராகவும், குணமாக்குகிறவராகவும் இருக்கிறார்: “அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.” (எபேசியர் 1:17) உலகத்திலே மனிதனின் ஆத்துமா ஆழமாகவும், மரணத்துக்கேதுவாகவும் உணரக்கூடிய காயம் இதுவாகும். இந்த ஆத்துமா நித்திய தண்டனைக்கும் துயரத்துக்கும் ஏதுவாக இருக்கிறது என்ற குற்ற உணர்வு அது. ஆத்துமாக்களை தேவனின் நித்திய கோபத்தின் தண்டனைக்கு உட்பட்த்துகிறது. இந்த பெரிதும் பயங்கரமுமான தேவனின் ஆக்கினைத் தீர்ப்பைவிட கொடூரமானது வேறொன்றுமில்லை. இது தாங்க முடியாதது. இந்த தண்டனை என்கிற நோயை குணப்படுத்துவதற்கு சிறந்த மருத்துவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவர் குற்றங்களை மன்னிப்பதன்மூலம் குணப்படுத்துகிறார். அதாவது, நமக்கு வரவேண்டிய அந்த தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து, தேவனுடைய கோபத்திற்கும், கண்டனத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கிற நம்முடைய ஆத்துமாவை விடுவிக்கிறார். "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (கொலோசியர் 1:13,14), (எபிரேயர் 6:12), “அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.” (மீகா 7:17-19). மேற்குறிப்பிட்ட வசனப்பகுதியில் இவ்விதமான நிவாரணங்கள் செய்யப்படுவதால் ஆத்துமாவானது தண்டனைக்கான அனைத்துக் கடமைகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறது. "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருப்பவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1). அனைத்து பாவ கட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, பாவங்களின் நோயிலிருந்து குணமாக்கப்பட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் ஆத்துமாக்கள் மீது இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயை குணப்படுத்தக் கூடிய வல்லமை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்ததிற்கு மாத்திரமே ஒழிய வானத்திலும் பூமியிலும் எங்கும் காணப்படவில்லை. "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர் 9:22). கிறிஸ்துவின் காயங்களிலிருந்து விழுந்த இரத்தத்தைத் தவிர வேறு எந்த இரத்தமும் இந்த செயலை செய்ய முடியாது. "அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5) அவருடைய இரத்தம் மாத்திரமே குற்றமற்றதும் விலைமதிப்பற்றதுமாகும். "குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே." (1 பேதுது 1:19) அது தேவனுடைய இரத்தமாக இருப்பதால் எல்லையற்ற மதிப்புடையதாய் இருக்கிறது. (அப்போஸ்தலர் 20:28); இந்த நோக்கத்திற்காகவே அந்த விசேஷித்த இரத்தம் ஆயத்தம் செய்யப்பட்டது. (எபிரேயர் 10:5) இந்த இரத்தம்தான் நோயுற்ற ஆத்துமாமை குணப்படுத்தும். இது எவ்வளவு பெரிய சிகிச்சை! இந்த சிகிச்சைக்காக விசுவாசிகளின் ஆத்துமாக்கள் என்றென்றும் பரலோகத்தில் உள்ள தங்கள் சிறந்த ஒப்பற்ற மருத்துவரைப் புகழ்ந்து உயர்த்திக்கொண்டிருக்கும்; "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்." (வெளிப்படுத்தல் 1:6)

அடுத்து, நோயுற்ற பாவிகளின் ஆத்துமாவீற்கு ஒரே மருத்துவர் இயேசு கிறிஸ்துவே. அவரைத் தவிர வேறொருவரும் இல்லை என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன். இது பலவிதங்களில் அவருக்கு மதிப்பை கொண்டு வருகிறது.

முதலாவது, ஆத்தும நோய்களின் தன்மை, அது எவ்வளவாக ஊடுருவி எவ்வளவு ஆழம் சென்று இருக்கிறது, மற்றும் அதனால் உண்டாகக்கூடிய ஆபத்து என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இயேசு கிறிஸ்துவைப் போல ஞானமும் விவேகமும் உள்ளவர்கள் யாரும் இல்லை. தங்களுடைய ஆத்துமா பாவத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற நிலையை அறியாமலிருப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல (அவர்) அறியும்படிக்கு, கிறிஸ்து கல்விமானின் நாவைக் கொண்டிருந்தார். (ஏசாயா 50:4). பாவத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளின் ஆழத்தை அவர் மட்டுமே புரிந்துகொள்கிறார்.

இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட ஆத்துமாக்களின் காயங்களை குணப்படுத்த கிறிஸ்துவைத் தவிர வேறெவராலும் முடியாது; நோய்வாய்ப்பட்ட ஆத்துமாவை குணப்படுத்தக் கூடிய மருந்துகள் அவரிடம் மட்டுமே உள்ளன. பரலோகத்திலோ பூமியிலோ கிறிஸ்துவின் இரத்தம் அல்லாமல் வேறு எதுவும் நடுங்கும் மனசாட்சியின் மீது குற்ற உணர்வு ஏற்படுத்தும் மரணக் காயங்களை குணப்படுத்த முடியாது. பிசாசினால் தயாரிக்கப்பட்ட மயக்க மருந்துகளால் மனசாட்சி மரத்துப்போகலாம். கிறிஸ்துவின் இரத்ததத்தினால் அன்றி வேறு எதினாலும் ஒருபோதும் சமாதானப்படுத்த முடியாது. "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபிரேயர் 9:22).

நோயுற்ற மரித்துக்கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக இந்த கிறிஸ்துவைப் போன்ற வைத்தியரை அருளிய தேவனுடைய கிருபையை எப்படி விவரிப்பது! "கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?" (எரேமியா 8:22); பிசாசுகள் தங்களுடைய சாபக் கேடுகளால் மாண்டுபோனதுபோல இவர்களின் பிரச்சனைகள், அவநம்பிக்கைகள், துரதிஷ்டமானவை பரிகாரமற்றதாய் இருப்பதில்லை! இவைகளுக்கு நிச்சயம் பரிகாரம் உண்டு. இருந்தாலும் குணப்படுத்தமுடியாத நோய் ஒன்று உள்ளது. "எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. (மத்தேயு 12:31) பாரத்தை சுமந்துகொண்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வந்து குணமடைய வேண்டும் என்ற விருப்பத்துடன் அவரிடம் வரும் எந்த ஆத்துமாவும் சுகமடையாமல் திரும்பிச்சென்றதில்லை. ஓ, விலைமதிக்கமுடியாத இரக்கம்! நோயுற்ற பாவி பூரண குணமடையக் கூடியவனாய் மாறியது. தங்களுடைய நிலையைவிட மிக ஆபாத்தானது, மிக நம்பிக்கையற்றது ஒன்றில்லை என்று ஒருகாலத்தில் சொல்லிய ஆத்துமாக்கள் இன்று பரலோகத்தில் ஆயிரங்கள் பதினாயிரங்கள் உண்டு. மிகப்பெரிய பாவிகள் கிறிஸ்துவால் பரிபூரணமாக மீட்கப்பட்டுள்ளனர். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோத்தேயு 1:15), "நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். (1 கொரிந்தியர் 6:11). ஓ, ஒருபோதும் குறைவாக மதிப்படமுடியா அவருடைய இரக்கத்தை!

பாவத்திலிருந்து விடுதலை பெற்று குணமடைய தேவன் எவ்வளவு அற்புதமான வழியை நிர்ணயம் செய்திருக்கிறார்! "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5). நோயாளி பிழைக்க வேண்டுமானால் மருத்துவர் மரிக்க வேண்டும். கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் வானத்திலோ பூமியிலோ நம்மை குணப்படுத்தக்கூடியதாக காணப்படவில்லை. "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்." (எபிரேயர் 9:22,26). நம்முடைய ஆத்துமாவின்மீது உண்டாகும் ஒவ்வொரு புதிய காயத்தின்மீதும் கிறிஸ்துவுன் இரத்தம் புதிதாக தடவப்பட வேண்டும். "ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." (1 யோவான் 2:1,2) ஓ..! சாத்தானின் வேண்டுகோளுக்கு எளிதில் இணங்குகிறீர்களே. இதை மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். நீங்கள் நினைப்பதுபோல பாவம் செய்வது அவ்வளவு எளிதானதா? மலிவானதா? ஆத்துமாக்களின் சுகப்படுத்தலுக்கு எந்த செலவும் ஆகாதா? ஆம், நமக்கு அது இலவசம் தான். ஆனால் கிறிஸ்துவுக்கு அப்படியா என்றால் இல்லை. நீங்கள் அறியாவிட்டாலும் அதின் விலை என்ன என்பதை அவர் அறிவார். நீங்கள் உங்கள் பாவங்களிலிருந்தது கழுவப்பட்டு புதுப்பிக்கப்படுகிறீர்கள் என்றால் உங்கள் மனந்திரும்புதலும் பாவத்தின் மீதான வருத்தமும் தொடர வேண்டும். "என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்." (சங்கீதம் 51:2) "அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்." (2 சாமுவேல் 12:13) உங்கள் கலங்கின ஆவியின் வலியையும், வேதனையையும் நீங்கள் மீண்டும்  உணர வேண்டும். அப்படித்தான் பரிசுத்தவான்கள் உணர்ந்து வாழ்ந்தார்கள். அதையே அவர்கள் சபையாக இப்படி சொன்னார்கள், "எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது." (புலம்பல் 3:19-20). ஆம், உங்கள் கண்கானிப்பில் நீங்கள் தவறி புதிய பாவத்தில் விழுந்துவிட்டால் கிறிஸ்துவின் இரத்தத்திலுள்ள மன்னிப்பு உங்கள் ஆத்துமாக்களை குணப்படுத்தினாலும், பிதாவின் கரத்தில் உள்ள தடியினாலே உங்கள் சரீரத்திலோ அல்லது உங்கள் வெளிப்புற சுகபோகத்திலோ சில சிட்ச்சைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். (சங்கீதம் 89:23).

பிணியாளியான ஆத்துமாவிற்கு ஒரே மருத்துவர் கிறிஸ்து என்றால், மனிதர்கள் கிறிஸ்துவின் வேலையை அவருடைய கைகளிலிருந்து எடுத்துக்கொண்டு தாங்கள் மருத்துவராக முயற்சிப்பது எவ்வளவு பாவமும் முட்டாள்தனமானதுமாக இருக்கிறது! இவ்வாறு மூட நம்பிக்கையுடன் தங்கள் சரீரத்தை துன்புறுத்திக் கொள்வதின்மூலம் தங்களை குணப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்; கிறிஸ்துவின் வழியாக அல்லாமல் அவர்களது சொந்த (அழுக்குபடிந்த) துணியால் காயத்தைக்கட்ட முயற்ச்சிக்கிறார்கள். குருடான ரோமன் கத்தோலிக்கர்களைப்போல் அறியாமையிலிருக்கும் அநேக மாம்சீக பிரிவினை சபையினர் கூட அறிக்கையிடுவதன் மூலமாகவோ, மறுசீரமைப்பதன் மூலமாகவோ, சீர்திருத்துவதன் மூலமாகவோ, கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதன் மூலமாகவோ பாவம் அவர்கள் ஆத்துமாவில் ஏற்படுத்திய காயங்களை ஆற்றிவிடலாம் என நினைத்து போராடுகிறார்கள். ஆனால், அவர்கள் கிறிஸ்துவின் விசேஷமான இரத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்படி செய்வதால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இவை ஒருவேளை சிறிது காலம் பாவத்திலிருந்து உங்களை திசை திருப்பும். ஆனால், பாவத்தினால் உண்டாகிற காயங்கள் அப்படியேதான் இருக்கும்: தோலோடு ஒட்டிப்போன காயங்கள் மறுபடி வெடித்து இரத்தத்தைக் கசியச்செய்யும். மெய்யான ஒரே பரிகாரியாகிய மெய்யான தேவனிடம் நெருங்கும்போது அவர் தரும் சுகம் இப்படி இல்லாமல் பூரணமாக குணப்படுத்தும்.

குணப்படும்படி கிறிஸ்துவின் கரத்தின்கீழும் அவரது பராமரிப்பிலும் இருக்கும் மக்கள் தங்களை பரிசோதித்துப் பார்க்கையில் தங்கள் காயங்களும் நோய்களும் குணப்படுகிறது என்பதை அறிந்து பூரண குணத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கியவர்களாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! சாதாரன உடல்நலக் குறைவு குணமாகிவிட்டால் நமக்கு எவ்வளவு பெலனும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. இயற்கையானது அதன் வழியிலேயே சுகத்தைத் தருகிறது. அப்படியானால், நம்முடைய ஆத்துமாக்களும் தங்களை சீர்படுத்திக்கொண்டு எல்லவிதங்களிலும் சௌகரியமாகவும் பெலனுள்ளதாகவும் இருக்கும்போது நாம் மகிழ்ச்சி அடையமாட்டோமா? இது எப்போது நடக்கும் என்றால், அறியாமையிலும், இருளிலும் இருக்கும் புரிதலில் ஜீவ வெளிச்சம் உதிக்கும்போது நடக்கும். (1 யோவான் 2:27) -ல் இதைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது. உன் சித்தம் தேவனுடைய சித்தத்திற்கெதிராக முரட்டாட்டமுள்ளதாகவும், கடினமானதாகவும் இருக்குமானால் அதனை மாற்ற "தேவனே, நான் என்ன செய்ய சித்தம் கொண்டிருக்கிறீர்?" (அப்போஸ்தலர் 9:6) என்று தேவனிடம் கேள்.

தன்னுடைய நேசத்திற்குறிய ஒரேபேரான குமாரனுக்காக ஒரு தகப்பன் துக்கிப்பதுப் போல கடினமானதும், பிடிவாத குணமுடையதாகவும் இருந்த இதயமானது இப்போது பாவத்தைக்குறித்த உணர்வடைந்து, தன்னுடைய பாவநிலையைக் குறித்த மனமார்ந்த துக்கமுடையதாக மாறும். தேவனைப் புரக்கணித்த அது தேவனைப்பற்றிய மனநிலையால் நிறைந்து காணப்படும். அது ஆத்துமாவுக்கு இனிமையானதாக காணப்படும். செயல்படுத்த வேண்டிய காலம் வந்தபோதும், இதைவிட மேலாக ஒருபோதும் மகிழ்ச்சி அடைந்திருக்காது; இருதயத்தில் இருந்த மாய்மாலங்கள் வெளியேற்றப்பட்டு தூய்மையடைகிறது. இனி மனிதனுக்காக அல்ல, ஆண்டவருக்காக எல்லவற்றையும் செய்வதற்கு நம்முடைய இருதயம் ஆரம்பிக்கும். "நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து," (கொலோசியர் 3:23), (1 தெசலோனிக்கியர் 2:4); இரகசியமான பாவங்களைக் குறித்து மனதில் குத்தப்பட்டு, "வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்." (சங்கீதம் 119:113), கடமைகளில் மாய்மாலக்காரரைப் போல் இருப்பதை விரும்பாமல் இருக்கும் (மத்தேயு 6:5,6);  "உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்;" (சங்கீதம் 119:8) அவருடைய பரிசுத்தமும் பயங்கரமுமான கண்ணின் முன் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். "நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. (ஆதியாகமம் 17:1) ஓ! குணமாகும் ஆத்துமாக்களின் இனிமையான அடையாளங்கள் இவைகள் எல்லாம். நிச்சயமாக, இப்படிப்பட்டோர் சிறந்த மருத்துவரின் கரங்களில் உள்ளனர் மேலும் அவர்கள் இன்னும் அடைய வேண்டிய பரிபூரணத்தை நோக்கி சென்றடைவர்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.