அந்நியபாஷை குழப்பம்

அந்நியபாஷை பேச ஆசைப்பட்ட என் முதல் அனுபவம். 1964ல் நான் மனந்திரும்புதலின் அனுபவத்தை பெற்றேன். ஒரு வருடம் டேனிஷ்பேட்டை பெத்தேல் ஐக்கியத்திலும், சேலத்திலும் எனக்கு ஜெபிக்கும் ஐக்கியம் நான்கு அல்லது ஐந்து ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்களின் மூலமாக கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை பள்ளி கால்பந்து மைதானத்தின் ஒரத்தில் நாங்கள் இணைந்து ஜெபிப்பது வழக்கம். எங்கள் ஐக்கியத்தில் உள்ள இரண்டு பேர்கள் மட்டும் ஜெபிக்கும்போது அந்நியபாஷை பேசுவார்கள். நாங்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆனால் எனக்குள் அந்த நண்பர்களிடம் அந்நியபாஷையைப்பற்றி அறியவேண்டும் என்ற ஆசை வந்தது. ஒருநாள் நான் அதைப்பற்றி கேட்டுவிட்டேன். இது ஒரு தனி அனுபவம் நீங்களும் இதை பெறவேண்டும் என்று ஆசிக்கிறேன் என்றார்கள். ஆனால் நான் அவர்கள் பேசிய அந்நியபாஷைக்கு வேத வசன ஆதாரத்தை கேட்டேன். அதற்கு நேரிடையாக பதில் கூறாமல் நீங்கள் எங்கள் சபைக்கு வாருங்கள். அப்போது நீங்களும் அந்நியபாஷை பேசுவதின் இன்பத்தை பெருவீர்கள் என்றனர். உங்கள் சபை எது என்றேன். இலங்கை பெந்தேகோஸ்தே சபை(CPM) என்றனர். இப்போது அந்த சபை The Penticostel Mission (TPM) என்று அழைக்கப்படுகிறது.

நானும் அந்த காலத்தில் எப்போதாவது TPM சபைக்கு போவது உண்டு. பல CSI ஆயர்களின் செய்திகளைவிட அந்த சபை பாஸ்டர்களின் செய்தி சுமாராக இருக்கும். அந்த காலத்திலும் சரி-இப்போதும் சரி கட்டுபாடு, ஒழுங்கு, பணவிஷயத்தில் நேர்மை, பாஸ்டர்களின் சாட்சி, தியாகம் இவைகள் மற்ற எல்லா பெந்தேகோஸ்தே சபைகளை காட்டிலும் சிறந்தது என்பேன். ஆனால் அந்த TPM சபையினரை ஆவிக்குரிய தீவிரவாதிகள் எனலாம். குடும்பத்தையே பிரிக்கும் உபதேசம் புருஷன்-மனைவியை விவாகரத்து செய்யாமல் வீட்டிலேயே பிரிந்து வாழும்படி செய்துவிடுவார்கள். இரட்சிக்கப்படாத பெற்றவர்களையும், உறவினர்களையும் ஊPஆ சபையின் விசுவாசிகள் நெருக்கவிடாதபடி வாழ உபதேசிப்பார்கள்.

இவர்களின் இப்படிப்பட்ட தறவான சபை உபதேசத்தை அறிந்து அந்த பயத்தின் அடிப்படையில் இந்த TPM சபையோடு அதிகம் நான் நெருங்காதபடி பார்த்துக்கொண்டேன். ஆனால் இந்த அந்நியபாஷை,அபிஷேகம், அக்கினி அபிஷேகம், பிரதிஷ்டை ஜீவியம் போன்ற இவற்றைக்குறித்து அறிய ஆவல் எனக்கு உண்டு. அதே சமயம் அவர்கள் என்னை மூளை சலவை செய்துவிடுவார்களோ என்ற பயமும் எனக்குள் இருந்தது. எப்போதும் TPM சபைக்கு சென்றால் பிரசங்கம் முடிந்தவுடன் வெளியேறிவிடுவேன். அன்று என் நண்பர் அழைத்ததால் பிரசங்கம் முடிந்தவுடன் உடனே வெளியேறாமல் அன்று முழு ஆராதனையும் முடியும்வரை காத்திருந்தேன். ஆராதனை முடிந்தவுடன் எனக்கு பழக்கப்பட்டவர்கள், உறவினர்கள் சிலர், நண்பர்கள் ஆகியவர்களுடன் பேசி முடிந்தவுடன் பாஸ்டரை காண சென்றேன். பாஸ்டர் அவர்கள் என்னை கண்டவுடன் அவரே என்னை நோக்கி ஓடிவந்தார். டாக்டர் எங்கள் சபைக்கு வந்துவிட்டீர்கள் மிகவும் சந்தோஷம். செத்த அந்த CSI சபையை இனி விட்டுவிடுங்கள் என்றார்.

அப்போது நான் அவரிடம் என் ஜெப நண்பர்கள் கூறிய ஆலோசனையின்படி உங்களோடு பேசமட்டும் இன்று இங்கு வந்துள்ளேன். எனக்கு அபிஷேகம் வேண்டும், அந்நியபாஷை பேசவேண்டும். அதற்காகவே வந்தேன் என்றேன். அப்போது அந்த பாஸ்டர் பரிசுத்த ஆவியானவரின் அந்த அனுபவம் பெறவேண்டும் என்றால் நீங்கள் சனிக்கிழமை (டேரிங் மீட்டிங்க்கு) காத்திருப்பு கூட்டத்துக்கு வரவேண்டும். நீங்கள் விரும்பியது உங்களுக்கு அங்கு கிடைக்கும் என்றார். அப்போது நான் ஏன் ஞாயிறு காலை ஆராதனைக்கு ஆவியானவர் வரமாட்டாரா? அந்த அனுபவம் ஞாயிறு ஆராதனையில் கிடைக்காதா? என்றேன். அப்படியல்ல, அந்த சனிக்கிழமை காத்திருப்பு கூட்டம் இதுவரை அபிஷேகம் பெறாதவர்களுக்கென்றே நடத்துகிறோம். இது எங்கள் சபையின் ஒழுங்கு என்றார். சரி அவர்கூறியபடி சனிக்கிழமை மாலை காத்திருப்பு கூட்டத்துக்கு போய் பார்ப்போம் என்று தீர்மானித்து என் ஆஸ்பத்திரிக்கு அரைநாள் விடுமுறைவிட்டு TPM சபைக்கு போனேன்.

அந்த காலத்தில் சேலத்தில் கோட்டை பெருமாள் கோயில் பின்புறம் ஒரு லேடி டாக்டர் வீட்டில் TPM ஆராதனை நடத்தப்பட்டது. சனிக்கிழமை என் வாகனத்தை TPM சபையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். அங்கு இரண்டு வரிசையில் நிறைய நபர்கள் பெண்களும், ஆண்களும் ஸ்தோத்திரம்,ஸ்தோத்திரம் என்று கூறிக்கொண்டே கைகளை தட்டி, உடலைக்குலுக்கி கத்திக்கொண்டே இருந்தார்கள். இரண்டு பாஸ்டர்மார் முன்னும் பின்னும் அந்த வரிசையின் ஊடாக நடந்து இந்த வேகம் போதாது ஸ்தோத்திரத்தை இன்னும் வேகமாக கூறவேண்டும் என்று அவர் சத்தமாக தானும் அந்நியபாஷை பேசிக்கொண்டே இப்படியும், அப்படியும் நடந்துக்கொண்டிருந்தார்கள். ஸ்தோத்திரத்தை இன்னும் வேகப்படுத்தியபோது உடனே சிலர் த்தத்தோ-த்தத்தோ-தோ-தோ-தோ என்று கதறினர். உடனே பாஸ்டர்கள் அவர்களிடம் வந்து அபிஷேகம் கிடைத்துவிட்டது. Praise the Lord என்று கூறி அவர்களை வேறு பக்கம் கூட்டி சென்று ஜெபிக்க வைத்தார்.

அந்நியபாஷை பேசாத மற்றவர்களிடம் இனி நீங்கள் ஸ்தோத்திரம் சொல்ல வேண்டாம் இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று வேகமாக கூறி பாருங்கள் என்றார். அப்படியே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப வேக வேகமாக கூறியபோதோ பலர் உளர ஆரம்பித்தார்கள். நாக்கு குழைய ஆரம்பித்தது. உடனே Praise the Lord என்ற பெரிய சத்தத்தில் பாஸ்டர்கள் ஓடிவந்து ஒவ்வொருவர் தலையிலும் கை வைத்து தானும் உளரி அவர்களையும் உளரவைத்து உனக்கு அந்நியபாஷை அபிஷேகம் கிடைத்து விட்டது என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

இது எத்தனை ஏமாற்று வழி - அந்நியபாஷையை கற்றுக்கொடுப்பதை என் வாழ்நாளில் அன்றைக்கு தான் நேரில் கண்டேன். அன்று பலர் உருண்டு புரண்டு கத்தினார்கள்.இதை பார்த்த எனக்கு கர்த்தாவே ஆரம்பத்திலேயே இவர்கள் போலிதனத்தை காண கிருபை செய்திரே இந்த பைத்தியக்கார கும்பலிலிருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறி என் வாகனத்தை எடுத்து பிடித்தேன் ஓட்டம். இப்படிப்பட்ட கூத்துக்களை நேரில் கண்டபோது அபிஷேகம், அந்நியபாஷை,வல்லமை இவைகளைப்பற்றிய ஆசையே என்னைவிட்டு நீங்கியது. ஆனால் பிசாசு என்னை விடவில்லை என்றாலும் என் இரட்சிப்பின் அனுபவம் வசனத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதால் இந்த பிழையான கிரியைகள் என்னை சிரமேற்கொள்ளவில்லை. காலங்கள் கடந்தது. என் ஊழியத்தில் லட்சக்கணக்கானவர்கள் இயேசுவை கிறிஸ்துவாக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டார்கள். மிகப் பெரிய ஆத்தும அறுவடையை என் ஊழியத்தில் கர்த்தர் தந்தார்.

அபிஷேகம், அந்நியபாஷை பெற என் இரண்டாம் கட்ட முயற்சி:

சகோ. DGS. தினகரனோடு ஏற்பட்ட நட்பு:

1970ம் வருடம் சகோ. DGS. தினகரன் அவர்கள் மேட்டூர் டேம் என்ற சிறு ஊரில் State Bank of India (SBI) வங்கியில் Bank Manager ஆக கோயமுத்தூரிலிருந்து மாற்றலாகி மேட்டூரில் குடியேறினார். மேட்டூரில் அன்று இரண்டு பிராட்டஸ்டன்ட் சபைகள் இருந்தன.
1). CIGM - Cylone and India Genaral Mission.
2). CSI - Church of South India என்ற சபைகள் இருந்தன. கத்தோலிக்க சபை ஒன்றும் இருந்தது. ஆனால் பெந்தேகோஸ்தே சபைகள் ஒன்றுகூட இல்லை. மேட்டூர் CSI Good Sheperd Churchy; Rev.Royan (Trichy-Tanjore CSI Diocese-ன் பிஷப்.சீனிவாசன் அவர்களின் மனைவி Rev.Royan அவர்களின் மகள் ஆவார்.

அப்போது மேட்டூர் CSI சபை கன்வென்ஷனில் பிரசங்கிக்க நான் அழைக்கப்பட்டேன். அன்று சகோ. DGS. தினகரன் அந்த CSI சபை கமிட்டியில் பிரசங்கம் செய்யவரும் டாக்டர்.புஷ்பராஜ் அவர்களை நான் என் வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறேன் என்றுகூறி நான் தங்க ஏற்பாடு செய்தார். நான் டேனிஷ்பேட்டை பெத்தேல் கிளினிக் முடித்து காடையம்பட்டி என்ற கிராமத்த்pல் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்கியிருந்தேன். அவைகளையும் முடித்து அங்கிருந்து எனது புல்லட் (Royal Enfield) மோட்டார் வாகனத்தில் நேராக மேட்டூர் டேம் வந்து சகோ.தினகரன் வீட்டில் குளித்து கன்வென்ஷன் கூட்டத்துக்கு அவர்களின் குடும்பத்தோடு வாடகை காரில் ஆலயத்துக்கு செல்வோம் கூட்டம் முடிந்தவுடன் இரவு சகோ.தினகரன் வீட்டில் தங்கி மறுநாள் காலை சேலம் என் வீட்டுக்கு வராமலே டேனிஷ்பேட்டைக்கு சென்றுவிடுவேன். இப்படித்தான் எங்கள் நட்பு உருவானது. அவர் வீட்டில் தங்கிய நாட்களில் சகோ.தினகரன் அவர்களின் குடும்ப ஜெபத்தில் ஒவ்வொரு இரவும் நானும் இணைந்து கொள்வேன். அவர்களின் ஒவ்வொரு நாள் குடும்ப ஜெபமும் மிக நல்ல அனுபவமாக என் ஆத்துமாவை பெலப்படுத்தக்கூடியதாக இருந்தது. ஆனால் அவர்கள் ஜெபத்தில் சகோ.தினகரன் அவர் மனைவி இருவரும் அந்நியபாஷை பேசுவார்கள். அதோடு சகோ.தினகரனோ ஜெபத்தில் அந்நியபாஷையில் பாட்டுபாடுவார். அவருக்கே உரிய தனித்தன்மை கொண்ட குரலில் பாடுவார். பாட்டு விளங்காவிட்டாலும் நான் வெகுவாய் ரசித்தேன். அந்நியபாஷை பாட்டு எனக்கு புதுமையாக இருந்தது.

அவர் மேட்டூரில்தான் தன் முதல் ஊழியத்தை தொடங்கினார். அவர் செய்த ஜெபகூட்ட ஊழியத்துக்கு ஊளுஐ சபையினர் ஆலயத்தில் இடம் கொடுக்க மறுத்தனர். ஆனால் CIGM சபையினர் சகோ.தினகரனுக்கு தங்கள் சபையில் முழு சுதந்திரத்தை கொடுத்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். தேவநாமம் மகிமைப்பட்டது. மேட்டூரே சகோ.தினகரன் ஊழியத்தில் அசைந்தது. கத்தோலிக்கர்கள் பலர் வந்தார்கள். கத்தோலிக்க சபையில் பெரும்பாலானவர்கள் சகோ.தினகரன் நடத்திய புதன்கிழமை கூட்டத்துக்கு தவறாமல் கலந்துக்கொண்டனர். மேட்டூர் அருகே குறிச்சி, அம்மாபேட்டை, பவானி, கொளத்தூர், ஈரோடு ஆகிய இடங்களிலிருந்தெல்லாம் ஏராளமான மக்கள் ஒவ்வொரு புதன்கிழமை மாலை நேரத்தில் திருவிழாபோல பஸ் பிரயாணம் செய்து புதன்கூட்டத்தில் வந்து கலந்துகொண்டு போவார்கள். பலருடைய குடும்பங்கள் அப்படியே குடும்பதோடு மனந்திரும்பினார்கள். மாதத்தில் இரண்டு புதன்கிழமைகளில் நான் பிரசங்கம் செய்வேன். மற்ற இரண்டு புதன்கிழமைகளில் அவர் பேசுவார். அவர் பிரசங்கத்துக்கு ஆட்கள் மிக அதிகம் கூடுவார்கள். கர்த்தர் மேட்டூரில் சகோ.தினகரனின் ஆரம்ப நாட்களில் வசனத்தின்படி அற்புதமான ஊழியத்தை நிறைவேற்றினார்.

அந்நியபாஷை கற்க பெங்களுர் பயணம்:

இப்படி எனக்கும் சகோ.தினகரனுக்கும் நெருக்கம் அதிகமாக ஒரு நாள் என்னை தொலைபேசியில் அழைத்தார். தன் நண்பர் ஒருவர் கனடாவிலிருந்து பெங்களுர் வருவதாகவும் பெரிய அற்புதங்கள் அவர் மூலமாக நடைபெறுவதாகவும், நாம் இருவரும் பெங்களுர் போகலாமா? என்று கேட்டார். பிரசங்கம் கேட்க அவ்வளவு தூரம் போகவேண்டுமா? மேலும் ஆஸ்பத்திரியில் சில முக்கியமான நோயாளிகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களின் ஆபத்தான கட்டத்தில் அவர்களை விட்டுவிட்டு வர இயலாது என்றேன்.

அப்போதுதான் அவர் எதற்காக என்னை பெங்களுர் அழைக்கிறார் என்பதை விளங்கிக்கொண்டேன். நீங்கள் வெகுநாளாக ஆசைப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் அந்நியபாஷை அடையாளத்தோடு கிடைக்கவேண்டும் என்பது எனக்கும், என் மனைவிக்கும் உண்டான பெரும் பாரம் ஆகும். இந்த குறிப்பிட்ட கனடா நாட்டு ஊழியருக்கு ஒரு விசேஷ வரம் உண்டு. இவர் யார் மீது கை வைக்கிறாரோ அவர்களை அந்நியபாஷை அடையாளத்துடன் ஆவியானவர் நிரப்புவார் என்றார். எனது நீண்ட நாளைய ஆசை நிச்சயம் நிறைவேறும் என்ற ஆசையில் நானும் பெங்களுர்போக சம்மதித்து சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நாம் போவோம் என்றேன். அப்படியே சனி மாலை பெங்களுர் சென்றடைந்தோம். சகோ.தினகரனை பொதுகூட்டத்தில் முதன்முதல் அறிமுகப்படுத்தின அவரின் குடும்ப நண்பர் பாஸ்டர்.மு.சு.பால் பெங்களுர் கன்டோன்மென்ட்டில் சபை நடத்துகிறார். அவர் வீட்டுக்கு சென்றோம். அங்கிருந்து கூட்டம் நடக்கும் மைதானதுக்கு சென்று பிரசங்கம் முடிந்தவுடன் அந்த கனடா ஊழியர் தங்கும் ஸ்டார் ஓட்டலில், சனி இரவு 10மணிக்குமேல் ஓட்டலின் மேல்மாடியில் ஊழியர்களின் ஜெபகூட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அங்கு சகோ.தினகரன் என்னை திருமதி.ஸ்டெல்லாதினகரன் அழைத்து சென்றார்.கனடா ஊழியரிடம்என்னை அறிமுகம் செய்து வைத்தார். டாக்டர்.புஷ்பராஜ் தென்னிந்திய பிரபல பிரசங்கியார் ஆவார். ஆனால் அந்நியபாஷை அபிஷேகம் இவருக்கு இல்லை. இவர் விரும்புகிறார், ஆனால் கிடைக்கவில்லை. நானும் பல பெந்தேகோஸ்தே பாஸ்டர்களான சென்னை பாஸ்டர்.சுந்தரம், பாஸ்டர்.வாசு, பாஸ்டர்.மத்தியஸ் இன்னும் பிரபல பாஸ்டர்கள் இவர் தலையில் கை வைத்து ஜெபித்தனர். ஆனால் அந்நியபாஷை கிடைக்கவில்லை என்றார்.

உடனே அவர் கை குலுக்கி மற்ற ஊழியர்களுடன் என்னையும் அமரச் செய்தார். 15நிமிடம் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி சுருக்கமாக செய்தி கொடுத்தார். செய்தி முடிந்தவுடன் எல்லாரும் ஜெபிக்கலாம் என்றார். எல்லாரும் முழங்கால் இட்டு ஜெபித்தோம். உடனே கனடா ஊழியர் எல்லாரும் கர்த்தரை வாய் திறந்து துதியுங்கள் என்றார். எல்லாரும் சத்தமாக தோத்திரம் தோத்திரம் என்று சத்தம் உயர்த்தி கூவினார். உடனே கனடா ஊழியர்கூறினார். இப்போது பரிசுத்த ஆவியானவர் இறங்கப்போகிறார். எல்லாரும் அந்நியபாஷையில் கர்த்தரை துதியுங்கள் என்றார். உடனே அங்கு கூடியிருந்தவர்களின் சத்தம் அதிகமானது சிலர் குதித்தார்கள். சிலர் பாஷைகளை பேசினார்கள். நானோ ஆடாமல் அசையாமல் முழங்காலில் நின்று ஆவியானவரின் அந்த வித்தியாச அனுபவத்தை பெறவேண்டும் என்று ஜெபத்தில் கெஞ்சினேன். ஆனால் அந்த கூட்டத்தில் நான் மட்டும் அந்நியபாஷை பேசவில்லை. அதனால் எனக்கு அழுகை வந்தது. இத்தனை வருடம் ஊழியக்காரனாக கன்வென்ஷன் பிரசங்கியாக பல ஆயிர மக்களை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தினேன். ஆனால் எனக்கு மட்டும் ஏன் பாஷை வரவில்லை?. நான் சோர்வோடு ஜெபிப்பதை பார்த்த கனடா ஊழியர் கலங்காதீர்கள் இப்போது நான் உங்கள் தலைமீது என் கைகளை வைப்பேன் நீங்கள் சத்தமாக பாஷையில் பேச முயலுங்கள் என்று கூறி என் அருகே வந்து என் தலைமீது மட்டும் தன் கைகளை வைத்தார். அவர்தான் நடுங்கினார், பாஷையில் பேசினார். ஆனால் எனக்கு ஒரு அசைவும் நடுக்கமும் வரவில்லை.

உடனே கனடா ஊழியர் தன் கைகளை எடுத்துவிட்டு கூறினார் இதுவரை நான் யார் மீதும் இரண்டாம் முறை கைகளை வைத்ததில்லை. முதல்முறையாக இப்போது உங்கள் தலைமீது இரண்டாம் முறை என் கைகளை வைக்கபோகிறேன். பாஷை பேச நீங்களாக ஒன்று முயற்சி செய்து கஷ்டப்படவேண்டாம். நான் பேசுவதை கவனியுங்கள். நான் பேசுவதைப்போலவே பேச முயலுங்கள் என்று கூறி என் பதிலுக்கு காத்திராமல் உடனே கைகளை வைத்து பாஷைகளைப்போல அவர் எதையோ பேச ஆரம்பித்துவிட்டார். நானோ தாமதமில்லாமல் அவர் கைகளை என் கையால் என் தலையிலிருந்து நீக்கி அவர் கைகளை என் கைகளால் பிடித்து அவரை நோக்கி நீங்கள் கூறுவது Wrong Teaching என்று கூறி எழுந்து நின்றேன். அவர் அதிர்ந்துபோனார். பிறகு சமாளித்து இப்போது நான் எல்லாருக்காகவும் Mass பொது ஜெபம் ஏறெடுக்கப்போகிறேன் என்று கூறி சுருக்கமாக ஜெபித்து முடித்தார். எல்லாரும் அவ்விடத்திலிருந்து கலைந்துபோனார்கள். சகோ.தினகரனை அவர் அழைத்து நீங்கள் அழைத்து வந்த டாக்டரின் இருதயம் மிகவும் கடினம். அவர் இன்னும் உபவாசத்தில் கர்த்தரிடம் காத்திருக்கவேண்டும் என்று கூறி எங்களை வழி அனுப்பினார்.

கனடா ஊழியர் சகோ.தினகரனிடம் என்னை சுட்டிக்காட்டி பேசியது டாக்டர்கள் சில நோயாளிகளைப்பார்த்து இந்த கேஸ் பிழைக்காதுய்யா தூக்கிக்கொண்டு போங்கள் என்று கூறுவதுபோல் இருந்தது. நானும், சகோ.தினகரனும் அன்று இரவே திருவள்ளுவர் துரித பஸ் வண்டியில் சேலம் நோக்கி பயணமானோம். பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சகோ.தினகரனிடம் பிரதர் இனி யாரும் என் தலையில் கைவைக்க நான் அனுமதிக்கபோவதில்லை. இனி அந்நியபாஷைக்காக என்னை எங்கேயும் என்னை அழைத்து செல்லவேண்டாம். நானும் இனி கர்த்தரிடம் அந்நியபாஷையைப்பற்றி கேட்கப்போவதில்லை. என் ஊழியத்துக்கு அந்நியபாஷை அவசியமானால் அவராகவே என்னை பேச வைக்கட்டும். இனிமேல் இதற்காக ஜெபிக்கவே மாட்டேன் என்று கூறினேன். அவரோ பதில் ஏதும் கூறாமல் மௌனமாக தூங்க முயற்சித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவத்துக்குபின் அந்நிய பாஷையைக்குறித்து யாரிடமும் நான் பேசுவதையே நிறுத்திவிட்டேன்.

சில வருடங்கள் கடந்தது, குழப்பமான அனுபவம் வந்தது: சகோ.DGS.தினகரனுக்கு மேட்டூரிலிருந்து சென்னை கிண்டி அருகே ITI வளாகத்தில் உள்ள SBI வங்கியில் மேட்டூரிலிருந்து பதவி உயர்வும், மாற்றலும் கிடைத்தது. சென்னை ITI வங்கிக்கு மேல் உள்ள வீட்டில் அவர் குடியேறினார். ஊழியத்துக்காக உபவாசிக்க நாங்கள் இருவரும் எங்காவது அடிக்கடி கூடி ஜெபிப்பது வழக்கம். பல முறை சேலம் ஐந்துரோடு என்ற இடத்தில் கட்டப்பட்ட துவாரகா ஓட்டலில் இணைந்து அடிக்கடி ஜெபிப்போம். அன்று சென்னைக்கு என்னை உபவாச ஜெபத்துக்கு அழைத்திருந்தார். அறையில் நானும், திருமதி.ஸ்டெல்லாதினகரும், சகோ.தினகரனும் இணைந்து காலையிலிருந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஜெபம் முடிந்தது. மாலை சிற்றுண்டி முடித்து உபவாச ஜெபத்தை முடித்தோம்.

நான் அவர் வீட்டிலிருந்து புறப்படும்முன் பயணத்துக்காக அறைக்குள் சென்று நாங்கள் மூவரும் சிறு ஜெபம் மட்டும் செய்தோம். அந்த சமயம் அன்றைய பகல் ஜெப தியானத்தில் சிந்தித்த சில ஆவிக்குரிய காரியங்களை நான் நினைத்ததாலோ-என்னவோ நான் வசனத்தின் ஆழத்தின் இன்பத்தை மனதிற்க்குள் அனுபவித்ததாலோ என்னவோ அந்த பிரயாண நேர ஜெபத்தில் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு என்னமோ ஜெபத்தில் உளறியிருக்கிறேன். அதை கேட்ட சகோதரனும், சகோதரி ஸ்டெல்லா அவர்களும் மிகவும் சத்தமாக Praise the Lord, அல்லேலுயா என்று துதித்தார்கள். சற்றுநேரம் என்ன நடந்தது என்று விளங்கவில்லை. ஜெபம்முடித்து நான் காரில் ஏறும்போது கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் அபிஷேகிக்கபட்டுவிட்டீர்கள் என்று சகோ.தினகரன் அவர்கள் என்னிடம் கூறி சந்தோஷத்தோடு வழி அனுப்பினார்கள்.

அந்த காலத்தில் சில இடங்களில் என் சாட்சியில் இந்த குறிப்பிட்ட அனுபவத்தைகூறியிருக்கிறேன். ஜெர்மனி தேசத்தில் இலங்கை அகதிகளாக அன்று ஜெர்மனிக்கு வந்த தம்பிமார்களிடமிருந்து என் ஜாமக்காரனை வாங்கி அதை அங்குள்ள டொச் பாஷை பேசும் ஜெர்மனி சபை பாஸ்டர்கள் டொச் பாஷையில் மொழி பெயர்த்து தொடர்ந்து அவர்களும் ஜாமக்காரனை வாசித்து வருகிறார்கள். அவர்களுக்கு என்மேல் நல்ல மரியாதையும், பண விஷயத்தில் நான் நடந்துக்கொள்ளும்முறையை அறிந்து என்மேல் பெரும் மதிப்பும் கொண்டவர்களாகும். அந்த பாஸ்டர்களும்,அவர்கள் சபை மூப்பர்களும் ஒருநாள் இந்தியாவுக்கு அரசாங்க அலுவல் காரணமாக டெல்லி வந்தபோது என்னை நேரில் சந்திக்க விரும்பினார்கள். என்னை சந்திக்கும்போது என் ஊழியத்தைப்பற்றியும்- என் சாட்சியைப்பற்றியும் கேட்டறிந்தார்கள். அவர்கள் என்னை பேட்டிக்கண்டு புறப்படும்போது கேட்ட கேள்வி என்னை மிகவும் குழப்பியது. இத்தனை நல்ல வேத ஞானம் உள்ள நீங்கள் உங்கள் சாட்சியில் கூறிய சம்பவத்தில் சென்னையில் அந்த குறிப்பிட்ட சகோதரனின் குடும்பத்தோடு ஜெபிக்கும்போது நீங்கள் பேசினது அந்நியபாஷையா? அந்நிய பாஷையானால் அதன் அர்த்தம் உங்களுக்கு தெரிந்ததா? உங்கள் சொந்த தாய் பாஷையில் கடவுளிடம் பேசினால் அவருக்கு அது விளங்காதா? ஆவியானவர்தான் உங்களை பேசவைத்தார் என்று நீங்கள் கூறுவீர்களோயானால், அவர் ஏன் உங்களுக்காக பேச வேண்டும்? இந்த கேள்விக்கு நீங்களே ஜெபித்து நீங்களே பதில் பெற்றுக்கொண்டு தெளிவு பெறுங்கள். வேதத்தில் இல்லாத எந்த புது அனுபவமும் உங்களில் ஏற்பட்டால் அதை வெளியே சொல்ல முயலாதீர்கள் என்ற அற்புதமாக ஆலோசனையை கூறி சென்றுவிட்டார்கள்.

கடைசியாக அவர்கள் கூறியது: நாங்களும் பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவர்கள்தான். ஆனால் வசனத்தின்படி வாழ எங்கள் சபையின் தவறான உபதேசங்களை மட்டும் நாங்கள் விட்டுவிட்டோம் என்றனர். அவர்கள்போனவுடன் என் குழப்பம் இன்னும் அதிகமாயின. இரண்டு நாட்கள் என்னால் ஜெபிக்கமுடியவில்லை. சகோ.தினகரன் வீட்டில் அன்று எனக்குண்டான அந்த அனுபவம் என்ன? அது அசுத்தஆவியின் கிரியையா? பரிசுத்த ஆவியானவரின் கிரியையா? அல்லது உணர்ச்சிவசப்பட்ட (Emotional Spirit) கிரியையா? பரவச அனுபவமா? என்றெல்லாம் பெரும் குழப்பத்துக்குள்ளானேன். உடனே ஏற்காடு மலைக்கு சென்று இரண்டு நாட்கள் ஜெபத்தில் கர்த்தரிடம் விவரம் கேட்டேன். பதில் ஏதும் இல்லை.

அந்த இரண்டு நாட்களும், அப்போஸ்தல நடபடிகளும்,கொரிந்தியர் நிருபங்களையும் மனப்பாடம் ஆகுமளவு திரும்பதிரும்ப வாசித்தேன். தியானித்தேன். அதன்பின் வசன அடிப்படையில் என் உள்ளத்தில் உண்டான தெளிவு என் ஜெபத்தில் உண்டான சந்தோஷத்தின் மூலம் உணர்ந்தேன். அன்றுதான் முதன்முதல் ஆவியை பகுத்தறியும் Discerning Spirit வரம் எனக்குள் கிரியை செய்ய ஆரம்பித்தது. அதன் பிறகுதான் பரிசுத்த ஆவியானவர்பற்றியும்-அந்நியபாஷையைப்பற்றியும் ஆவியானவரின் வரங்களைப்பற்றியும் தெளிவாக அறியலானேன். அதன்பின்தான் ஊழியர்களைப்பற்றியும், ஊழியர்கள் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறார்கள் என்பதைப்பற்றியும், எந்த உபதேசம் கள்ள உபதேசம் என்பதையும் குறித்து வெளியரங்கமாக தைரியமாக குற்றமற்ற மனசாட்சியுடன் பிரசங்கிக்கவும், எழுதவும் தொடங்கினேன்.

ஒரு ஊழியனைப்பற்றி அறிய வேண்டுமானால் அந்த ஊழியனை ஜெபிக்க சொல்லி அவர் ஜெபத்தை கேட்டால்போதும். அவர் செய்த ஜெபமே அந்த ஊழியன் எந்த ஆவியினால் நடத்தப்படுகிறான் என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ளமுடியும். அதன்மூலம் அவன் உண்மையுள்ள ஊழியனா?- கபடதாரியா? கள்ளதீர்க்கதரிசியா? கள்ள ஊழியனா? என்பதெல்லாம் அறிய எனக்குள் உள்ள அந்நியபாஷை பேசாத பரிசுத்தஆவியானவர் எனக்கு உதவி செய்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.