தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆதாயம் பெறுதல்

வேதவாக்கியங்களும் நற்கிரியைகளும்

 

தேவனின் சத்தியமானது இருபுறமும் ஆபத்தான மற்றும் செங்குத்தான மலைச்சரிவைக் கொண்டிருக்கும் குறுகலான பாதையுடன் சிறப்பாக இணைத்துக்கூற முடியும்: வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இரண்டு தவறான வளைகுடாக்களுக்கு இடையில் இருக்கிறது. இந்த ஓவியம் எந்த அளவிற்கு சிறந்தது என்பதை நாம் ஒரு உச்சியிலிருந்து மறு உச்சிக்கு நகரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதிலிருந்து கண்டுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவரின் உதவி மட்டுமே நாம் இதில் சமநிலையில் இருக்கவைக்க முடியும், அப்படி செய்யத் தவறும்பட்சத்தில் நாம் தவறிழைப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, தவறு என்பது சத்தியத்தை புரட்டி அதை மறுதலிப்பதே, சத்தியத்தின் ஒரு பகுதிக்கு எதிராக அடுத்த பகுதியில் குழிபறிப்பது என்று சொல்லலாம்.

இறையியல் வரலாறு இந்த உண்மையை வலுக்கட்டாயமாக அதே நேரத்தில் மகிழ்ச்சியற்ற தோற்றத்துடன் எடுத்துரைக்கிறது. ஒரு சந்ததியினர் சரியாகவும் சிரத்தையுடனும் அவர்கள் நாட்களில் மிகவும் தேவைப்பட்ட சத்தியத்தின் இந்த அம்சத்திற்காக வழக்காடினார்கள். அடுத்த சந்ததியினர் அதிலே நடந்து முன் செல்வதற்குப்பதிலாக, தங்கள் தரப்பு தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள அறிவுப்பூர்வமாக போரிட்டனர், வழக்கமாக, தாக்கப்பட்ட சத்தியத்தை பாதுகாப்பதில், அவர்களுடைய எதிர்த்தரப்பினர் எடுத்துரைத்த சமநிலையான சத்தியத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்; அதன் தொடர்ச்சியாக, அடுத்த சந்ததியில், உண்மையான தேவனுடைய ஊழியக்காரன் அவர்களுடைய (சத்தியத்தை மறுதலித்தவர்களுடைய) கண்களுக்கு எது மிகவும் மதிப்புமிக்கதாகத் (தவறான சத்தியங்கள்) தெரிந்ததோ, அதைப் புறந்தள்ளவும், அவர்கள் எதை மறந்துபோனார்களோ (சரியான சத்தியம்), அதை முக்கியத்துவப்படுத்தவும் அழைக்கப்படுகிறான்.

‘ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்தோ, நட்சத்திரங்களிலிருந்தோ அல்லது மெழுகுவர்த்தியிலிருந்தோ, எதிலிருந்து வந்தாலும் அது நேர் கோட்டில் பயனிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது; மனிதனுடைய நடுக்கமற்ற கைக்கூட ஒரு நெளிவில்லாத நேர்க்கோட்டை வரைய முடியாததுபோல, தேவனுக்கான நம்முடைய செயல்கள் மிகவும் குறைவுள்ளதாகவே உள்ளன’ (டி. குத்திரி 1867). இது உண்மையோ இல்லையோ, நிச்சயமாக ஒரு மனிதன் தானாகவே இந்த இரு முரண்பாடான போதனைகளுக்கிடையில் நேர் கோடான சத்தியத்தில் நடப்பது இயலாத காரியம்: தேவனுடைய அநாதி சித்தம் மற்றும் மனிதனுடைய பொறுப்பு; கிருபையின் தெரிந்தெடுப்பு மற்றும் உலகலாவிய நற்செய்தி அறிவிப்பு; பவுலின் கூற்றுப்படி கிருபையினால் நீதிமானாக்கப்படுதல் மற்றும் யாக்கோபுவின் கூற்றுப்படி கிரியையினால் நீதிமானாக்கப்படுதல். பல தருணங்களில், தேவனுடைய முழுமையான சித்தம் வலியுறுத்தப்படுமிடத்திலே, மனிதனுடைய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படிருக்கிறது; நிபந்தனையில்லா தெரிந்தெடுப்பு பற்றிப்பிடிக்கப்பட்ட இடத்தில், இரட்சிக்கப்படாதவர்களுக்கு தடையின்றி இரட்சிப்பை பிரசங்கித்தல் கைவிடப்பட்டது. மற்றொருவகையில், மனிதனுடைய பொறுப்பு உறுதிபடுத்தப்பட்டு நற்செய்தி ஊழியம் தொடர்ந்த இடத்தில், தேவனுடைய அநாதி சித்தமும், தெரிந்தெடுப்பின் சத்தியமும் துண்டாடப்பட்டது அல்லது முற்றிலும் மறக்கப்பட்டது.

நம்முடைய வாசகர்களில் பலர் மேலே சொல்லப்பட்ட உண்மைகளை விளக்கும் உதாரணங்களை வாசித்திருக்கிறார்கள், ஆனால் சிலரே அதை சரியாக புரித்திருப்பார்கள், சரியாக அதேஅளவு கடினத்தை விசுவாசத்திற்கும் நற்கிரியைகளுக்குமிடையேயான சரியான தொடர்பை விளக்க முற்படும்பொழுதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் சிலர் நற்கிரியைகளுக்கு வேதவாக்கியங்கள் அனுமதிக்காதவிதத்தில் இடம் கொடுத்து தவறு செய்கிறார்களென்றால், மற்றொருவகையில், சிலர் நற்காரியங்களுக்கு வேதவாக்கியங்கள் கொடுத்திருக்கும் அளவுக்கு முக்கியமான இடத்தைக் கொடுக்க தவறிவிடுகிறார்கள். ஒரு பக்கத்தில், நம்முடைய செயல்களை தேவனுக்கு முன்பாக நியாயப்படுத்துவது மாபெரும் தவறாக இருத்தாலும், மற்றொரு பக்கத்தில், நாம் பரலோகம் செல்வதற்கு நம்முடைய நற்செயல்களும் முக்கியம், மேலும் நம்மை நியாயப்படுத்துவதற்கு அவைகள் வெறும் ஆதாரம் மற்றும் கனிகள் மட்டுமே என்பதை மறுப்பவர்களும் சமஅளவு குற்றம்செய்கிறார்கள். நாம் இப்பொழுது மெல்லிய பனிக்கட்டி படலத்தின் மீது நடந்துகொண்டிருக்கிறோமென்பதையும், கள்ளபோதனை செய்கிறோம் என்று மோசமாக குற்றம்சாட்டப்படும் ஆபத்திலிருக்கிறோமென்பதையும் நாம் அறிவோம்; இருப்பினும், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நாங்கள் தெய்வீக உதவியையே நாடி, தேவனிடமே இந்த காரியங்களை விட்டுவிடுகிறோம்.

ஒரு சில சதுக்கங்களில் விசுவாசத்தின் முக்கியத்துவம், முழுவதும் நிராகரிக்கப்படாவிட்டாலும், நற்காரியங்கள் மிகைப்படுத்தப்பட வேண்டுமென்கிற வைராக்கியத்தால் மட்டம் தட்டப்படுகிறது. மற்ற வட்டங்களில், சமயரீதியாக மிகவும் ஆச்சாரமானவர்கள் (Orthodox) என்று அறியப்படுபவர்கள் (அவர்களைத்தான் இபொழுது மனதிலே பிரதானமாகவைத்து குறிப்பிடுகிறோம்), மிக அரிதாகவே நற்கிரியைகளுக்கு அவர்கள் சரியான இடத்தைக் கொடுக்கிறார்கள், மிகமிக அரிதாகவே அப்போஸ்தல சிந்தையுடன் அவைகளில் தொடர்ந்து ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிலசமயங்களிலே இது விசுவாசத்தைக் குறைத்து மதிப்பிட்டு, பாவிகள் கிறிஸ்துவின் நீதியின்மேல் நம்பிக்கையை வைப்பதற்குப்பதிலாக தங்கள் சொந்த நற்கிரியைகளின் மேல் நம்பிக்கை வைக்க அவர்களை உற்சாகப்படுத்திவிடுமோ என்ற ஐயம் வரப்போவதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அப்படி எந்த ஒரு அச்சமும் ஒரு பிரசங்கியை ‘தேவனுடைய முழு ஆலோசனையையும்’ பிரசங்கிப்பதிலிருந்து தடுக்கக்கூடாது. இழந்துபோனவர்களின் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே அவனது கருப்பொருளானால், அவன் அந்த உண்மையில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னோக்கிச் செல்லக்கடவன், பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரனுக்கு பவுல் கொடுத்த பிரதியுத்தரத்தின் (அப் 16:31) அளவிற்கு இந்த நற்பண்புக்கு அவன் இடமளிக்கக்கடவன். ஆனால் அவனுடைய பொருள் நற்கிரியைகளென்றால், அதைப்பற்றி வேதவாக்கியங்கள் சொல்வதைத்தவிர வேறு எதையும் கைக்கொள்ளாதிருக்கக்கடவன்; ‘தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்து திட்டமாய் போதிக்க வேண்டும்’ (தீத்து 3:8) என்ற தெய்வீகக் கட்டளையை அவன் மறவாதிருக்கக்கடவன்.

இறுதியாகக் குறிப்பிட்ட வசனமானது இக்காலத்தின் அலட்சியப்போக்கிற்கும், விழிப்பில்லாத்தன்மைக்கும், பிரயோஜனமில்லா வேலைக்கும் வெற்று தம்பட்டதிற்கும் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். ‘நற்கிரியைகள்’ என்ற வெளிப்பாடானது புதியஏற்பாட்டில் ஒருமையிலோ அல்லது பன்மையிலோ முப்பதுக்கும் அதிகமான இடங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது; ஆயினும், அவைகளின் மீது விசுவாசம்வைத்து, உபயோகித்து, வலியுறுத்தி, விளக்கமளிப்பவர்கள் என்று மதிக்கப்படும் பிரசங்கிமார்கள்கூட, அவர்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் வேதப்புத்தகத்தில் இந்த வார்த்தை ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று முடிவுசெய்யுமளவிற்கு மிக அரிதாகவே அதைப்பற்றி பேசுகிறார்கள். மற்றொரு காரியத்தைக்குறித்து யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கர்த்தர் சொன்னார், ‘தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்’ (மாற் 10:9). இப்பொழுது எபேசியர் 2:8-10ல் தேவன் இரண்டு மிக முக்கியமான ஆசீர்வதிக்கப்பட்ட காரியங்களை இணைத்திருக்கிறார், அவைகளை நாம் நம்முடைய இருதயத்திலும் மனதிலும் பிரிக்கக்கூடாது, ஆனாலும் அவைகள் இந்த நவீன பிரசங்கபீடத்திலே அடிக்கடி பிரிக்கப்படுகின்றன.

இரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தினால் வருகிறது, இது நற்கிரியைகளினால் உண்டானதல்ல என்பதை தெளிவாக சொல்லும் முதல் இரண்டு வசனங்களிலிருந்து (எபே 2:8,9) எத்தனைமுறை பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறோம். கிருபை மற்றும் விசுவாசம் என்பவைகளுடன் துவங்கும் வாக்கியமானது 10ம் வசனத்திலேதான் நிறைவுறுகிறது, அங்கே ‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம், அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்’ என்று நமக்கு சொல்லப்பட்டிருப்பது, எத்தனை முறை நமக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது!

தேவனுடைய வார்த்தையை சுட்டிக்காடி நாம் இந்தத் தொடரைத் துவங்குகிறோம், இது பலவிதமான எண்ணங்களிலும், வித்தியாசமான வடிவமைப்புகளிலும் வாசிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படலாம், இந்த வேதவாக்கியங்கள் உண்மையாகவே எப்படி ‘ஆதாயம் தரக்கூடியவை’ என்பதை 2தீமோத்தேயு 3:16,17ம் வசனங்கள், ‘தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ என்று வெளிப்படுத்துகின்றன. தேவன் மற்றும் கிறிஸ்துவைக்குறித்தும், பாவத்தின்மீதான கடிந்துகொள்ளுதல் மற்றும் சீர்திருத்தலைக்குறித்தும், ஜெபம் தொடர்பான அறிவுரைகளைக்குறித்தும், இதன் போதனைகளில் தங்கியிருந்த நாம், இப்பொழுது இவைகள் எப்படி ‘எல்லா நற்காரியங்களையும்’ குறித்து விளக்குகிறது என்பதை கவனிப்போம். உண்மையான ஒரு ஆத்துமா, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் உண்மையாகவே அவனது வேதவாசிப்பும் வேதஆராய்சியும் அவனுக்கு பலனளிக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள மற்றுமொரு அடிப்படை இங்கே இருக்கிறது.

1. நற்கிரியைகளின் உண்மையான இடம் நமக்கு போதிக்கப்படும்போழுது நாம் வேதவக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘பலர் கிறிஸ்தவ சமயவழி மரபுகளை ஒரு அமைப்பாக ஆதரிக்க தங்களுக்குள்ள ஆர்வத்தினால், பரிசுத்தத்தையும் தேவனுக்கு அற்பணிக்க்கப்பட்ட வாழ்க்கையையும் குறைத்து மதிப்பிடும்விதத்தில் கிருபையினாலே இரட்சிப்பு என்பதைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பரிசுத்த வேதவாக்கியங்களில் இதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கிறிஸ்துவின் இரத்தத்தினால் விசுவாசத்தின் மூலம் தேவனுடைய கிருபையினாலே இரட்சிப்பு இலவசமாய் கிடைக்கிறது என்பதை அறிவிக்கும் அதே நற்செய்தியானது, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் அவரில் பாவிகள் விசுவாசம் வைப்பதின்மூலம் இரட்சகரின் நீதியால் அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதியாக வலியுறுத்தி, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்பதையும் உறுதியாகக் கூறுகிறது; அதாவது விசுவாசிகள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தினால் கழுவப்படுகிறார்கள்; அவர்களுடைய இருதயம் விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுகிறது, அன்பினால் கிரியைசெய்து, உலகத்தை மேற்கொள்ளுகிறது; எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் அந்த கிருபையானது, அதைப் பெற்றுக்கொள்பவர்கள், தேவபக்தியற்றவைகளையும் உலகப்பிரகாரமான இச்சைகளையும் மறுதலித்து, தெளிந்தபுத்தியுள்ளவர்களாய், நீதியுள்ள மற்றும் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் போதிக்கிறது. வேதவாக்கியங்களின் அடிப்படையில் நற்கிரியையை விடாப்பிடியாக பதியவைப்பதில் கிருபையின் போதனைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்குமென்றால், அது தெய்வீக சத்தியத்தில் பற்றாக்குறையான, மிகவும் குறைவான அறிவுமட்டுமே அவர்களுக்கு உள்ளது என்பதைக் காட்டிக்கொடுக்கிறது, அவர்களுடைய சாட்சியைக் காத்துக்கொள்ளுவதற்காக நீதியின் கனிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு முழுமையாகத் தேவை என்பதற்கு சாதகமாக உள்ள வேதவாக்கியங்களை சேதப்படுத்துவது, தேவனுடைய வார்த்தையை புரட்டி மோசடியில் ஈடுபடுவதாகும்’ (அலெக்சாண்டர் கார்சன்).

நற்கிரியைகளைச் செய்யும்படி தேவனுடைய கட்டளை இருந்தாலும், அதற்கு நாம் உண்மையாகக் கீழ்ப்படிவதில் தோல்விகண்டாலும், நம்மீது வைக்கப்பட்ட கிறிஸ்துவின் நீதியினால் நாம் நீதிமான்களாக்கப்படுவதினால், அவைகளில்லாமல் நாம் இரட்சிக்கப்படக்கூடுமாகையால், அந்த கட்டளைக்கு என்ன வல்லமையிருக்கிறது? இதைப்போன்ற உணர்வற்ற ஆட்சேபம், விசுவாசியின் தற்பொழுதைய நிலை மற்றும் தேவனுடன் அவனுக்குள்ள தொடர்பைப்பற்றிய அறியாமையிலிருந்து வருகிறது. மறுபிறப்படைந்தவர்களின் இருதயங்கள் தேவனுடைய கட்டளைகளுக்கும் அதிகாரத்திற்கும் கீழ்ப்படியும்படி வல்லமையான தாக்கத்திற்குட்பட்டதல்ல என்று எண்ணுவது, அவர்களை நீதிமான்களாக்குவதற்குத் தேவையான உண்மையான விசுவாசமற்றதாயும், கிறிஸ்தவர்களின் சிந்தை அப்படிப்பட்ட வாதங்களால் பாழடைந்து போயிருப்பதற்கும் ஒப்பாகும். மேலும், நம்முடைய நீதிமானாக்கப்படுதலுக்கும், நம்முடைய பரிசுத்தமாக்கப்படுதலுக்கும் இடையில் தேவன் ஏற்படுத்தியுள்ள பிரிக்க இயலாத் தொடர்பை கவனிக்கத் தவறுவதாகும். இவைகளில் ஒன்று மற்றொன்றில்லாமல் தொடர முடியுமென்று கருதுவது ஒட்டுமொத்த நற்செய்தியையே கவிழ்ப்பதற்கொப்பாகும். இந்த ஆட்சேபனையைப்பற்றி அப்போஸ்தலன் ரோமர் 6:1-3 வசனங்களில் கையாளுகிறார்.

2. நற்கிரியைகளின் உண்மையானத் தேவையைப்பற்றி நாம் கற்பிக்கப்படும்பொழுது வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

‘இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்புண்டாகாது’ (எபி 9:22) மேலும், ‘விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்’ (எபி 11:6) என்று எழுதி, ‘யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே’ (எபி 12:14) என்றும் உண்மையின் வேதவாக்கியங்கள் அறிவிக்கிறது. பரலோகத்தில் பரிசுத்தர்கள் வாழப்போகிற வாழ்க்கையானது, அவர்களுடைய மறுபிறப்பிற்குப்பின் இந்த பூமியிலே அவர்கள் வாழ்கிற வாழ்க்கையின் நிறைவு மற்றும் முழுமையாகும். இரண்டு வாழ்க்கைகளும் முற்றிலும் வேறுபட்டதல்ல, மாறாக பரிபூரணத்தின் அளவுமட்டுமே மாறுபடும். ‘நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கும் சூரியபிரகாசம்போலிருக்கும்’ (நீதி 4:18). இங்கே கீழே தேவனுடன் நடத்தல் இல்லையென்றால், அங்கே மேலேயும் தேவனுடன் வாழுதல் என்பதுமில்லை. இக்காலத்தில் அவருடன் உண்மையான ஐக்கியமில்லையென்றால், அங்கே நித்தியத்திலும் அவருடன் ஒன்றுமில்லை. மரணம் இருதயத்தில் எந்த முக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மரணத்தில் பரிசுத்தரின் மிச்சமீதியான பாவங்களெல்லாம் காலாகாலத்திற்கும் இங்கே விட்டுச்செல்லப்படுகிறது, புதிதான எந்தஒரு தன்மையும் கொடுக்கப்படுகிறதில்லை என்பது உண்மையே. அப்படியானால் அவன் மரணத்திற்கு முன்னால் பாவத்தை வெறுத்து பரிசுத்தத்தை சிநேகிக்கவில்லையென்றால், அவன் மரணத்திற்குப்பிறகும் அப்படிச்செய்யப்போவதில்லை.

ஒருவரும் உண்மையில் நரகத்திற்குப்போக விரும்புவதில்லை, சிலர் உண்மையில் அங்கே தவறாமல் அழைத்துச்செல்லும் அகலமான பாதையை உண்மையில் கைவிட விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள். எல்லாரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால், தங்களைக் கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்ளும் திரளானவர்களில் எத்தனை பேர் அவர்களை அங்கே அழைத்துசெல்லும் அந்த ஒரே குறுகலான பாதையில் நடக்க உண்மையில் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறார்கள்? நற்கிரியைகள் இரட்சிப்புடன் கொண்டிருக்கும் தொடர்பின் சரியான இடத்தை நாம் இந்த பகுதியில் நிதானிக்க முடியும். அவைகள் எந்த தகுதியையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவைகளிலிருந்து அது பிரிக்கப்படமுடியாதது. அவைகள் பரலோகத்திற்கென்று எந்த பட்டத்தையும் பெற்றுத்தருவதில்லை, ஆனாலும் அவைகள் தன்னுடைய பிள்ளைகள் அங்கே வருவதற்கென்று தேவன் நியமித்திருக்கிற நியமங்களில் ஒன்று. எந்த வகையிலும் நற்கிரியைகள் நித்தியவாழ்க்கையை பெற்றுத்தருவதில்லை, ஆனால் அதைப்பெற்றுக்கொள்ள (பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் மனந்திரும்புதல், விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவைகளைப்போல) உதவுபவைகளில் அதுவும் ஒன்று. கிறிஸ்துவால் நமக்கென்று வாங்கப்பட்டிருக்கும் சுதந்தரத்திற்கு வந்து சேரவேண்டியதற்கென்று நாம் நடக்கவேண்டிய வழியை தேவன் நியமித்திருக்கிறார். தேவனுக்கு அனுதினம் கீழ்ப்படிந்து நடக்கும் வாழ்க்கை மட்டுமே கிறிஸ்து தன்னுடைய ஜனங்களுக்காக வாங்கியிருப்பதில் மகிழுவதற்கான உண்மையான அனுமதியை அளிக்கிறது – விசுவாசத்தினாலே கிடைக்கும் அந்த அனுமதி, நம்முடைய மரணத்திலோ அல்லது அவருடைய வருகையிலோ உண்மையாகிறது.

3. நற்கிரியைகளின் வடிவமைப்பு நமக்குப் போதிக்கபடும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

இது தெளிவாக மத்தேயு 5:16ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது’. இந்த வெளிப்பாடு (நற்கிரியைகள்) இங்கேதான் முதலாவது காணப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்க ஒன்று, மேலும், வேதவாக்கியங்களில் ஒரு காரியம் முதன்முதலில் குறிப்பிடப்படும்பொழுது அது அதன் தொடர்ச்சியான நோக்கத்தையும் பயன்பாட்டையும் சேர்த்தே வெளிப்படுத்தும் என்பது பொதுவான விதி. கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய கிறிஸ்தவ சார்பை அவர்களுடைய வாழ்க்கையின் நிசப்தமான சாட்சியின்மூலம் (‘ஒளி’ ‘பிரகாசிக்கும்பொழுது’ ஒலியெழுப்புவதில்லை) உறுதிபடுத்த வேண்டியவர்களாயிருக்கிறார்கள், அவர்களுடைய நற்கிரியைகளை மனுஷர் பார்த்து (அதைப்பற்றி தம்பட்டம் அடிப்பதைக் கேட்டு அல்ல), பரலோகத்திலிருக்கிற அவர்கள் பிதா மகிமைப்படுத்தப்படுவார் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்கிறோம். இங்கே அவைகளின் அடிப்படையான வடிவமைப்பும் இருக்கிறது: அது தேவனுடைய மகிமைக்காகவே.

மத்தேயு 5:16-ன் உள்ளடக்கம் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, புரட்டப்படுகிறது, அங்கே நாம் மேலும் சில கருத்துக்களைப் பார்க்கலாம். பல தருணங்களில் ‘நற்கிரியைகள்’ ‘வெளிச்சத்துடன்’ ஒப்பிடப்பட்டு குழப்பிக்கொள்ளப்படுகிறது, அவைகள் பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருந்தாலும், அவைகள் தனித்துவம் வாய்ந்தது. ‘வெளிச்சம்’ என்பது கிறிஸ்துவுக்காக நம்முடைய சாட்சியாகும், நம்முடைய வாழ்க்கை அதை நிரூபிக்காவிட்டால் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது? ‘நற்கிரியைகள்’ மற்றவர்களுடைய கவனத்தை, அவைகளை நம்மீது ஏற்படுத்தினவரை நோக்கித் திருப்புவதற்காக, நம்பக்கம் திருப்புவதற்காக அல்ல. தேவனற்றவர்கள்கூட விழுந்துபோன மனிதத் தன்மையிலிருந்து அவைகள் வரவில்லை, அதைவிட மேலான ஒன்றிலிருந்து அவைகள் வருகின்றன என்பதை அறிந்துகொள்ளும்விதத்தில் அதன் பண்புகளும் தனித்திறமும் அமைய வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட கனிக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட வேர் தேவைப்படுகிறது, அது கண்டுகொள்ளப்படும்பொழுது, அதினால் உழவன் மகிமைப்படுத்தப்படுகிறார். வேதவாக்கியங்களில் ‘நற்கிரியைகளைக்’ குறித்த கடைசி குறிப்பும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தது: ‘புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி, நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’ (1பேது 2:12). ஆகவே முதல் மற்றும் இறுதிக்குறிப்புகள் அவைகளுடைய வடிவமைப்பை வலியுறுத்துகிறது: அவருடைய ஜனங்களின் மூலமாக தேவன் இந்த உலகத்தில் செய்யும் கிரியைகளின் மூலம் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டுமென்பதே.

4. நற்கிரியைகளின் உண்மையான தன்மை நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

மறுபடியும் பிறவாதவர்கள் முற்றிலும் ஒன்றுமறியாமலிருப்பவைகளில் இதுவும் ஒன்று. வெறும் வெளிப்பிரகாரமானவைகளிலிருந்து தீர்ப்பளித்தல், மனிதத் தரத்தின்படி மட்டுமே காரியங்களை மதிப்பிடுதல் ஆகியவை தேவனுடைய மதிப்பில் எவைகள் நல்லவை, எவைகள் நல்லவைகளல்ல என்பதைத் தீர்மானிக்க தகுதியற்றவை. மனிதன் எவைகள் நற்காரியங்களென்று மதிப்பிடுகிறானோ அவைகளை தேவனும் ஏற்றுக்கொள்ளுவார் என்றெண்ணுவது, அவர்கள் இன்னும் இருளாகிய தங்கள் பாவம் குருடாக்கிய புரிந்துகொள்ளுதலில் தொடர்கிறார்கள்; பரிசுத்த ஆவியானவர் அவர்களை வாழ்க்கையின் புதியதன்மைக்குள் உயிர்ப்பித்து, அவர்களை இருளிலிருந்து தேவனுடைய அதிசயமான ஒளியினிடத்தில் அழைத்து வரும்வரை, ஒருவரும் அவர்களுடைய தவறை அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது. அதன்பிறகு, தேவனுடைய சித்தத்திற்கு அடிபணிந்து (ரோம 6:16), அவர்மீது அன்பு என்ற கொள்கையின்படி (எபி 10:24), கிறிஸ்துவின் நாமத்தினாலே (கொலோ 3:17), அவராலே தேவனுடைய நாமம் மகிமைப்படும்படி (1 கொரி 10:31) செய்யப்பட்டவைகளே நற்கிரியைகள் என்று காணப்படும்.

‘நற்கிரியைகளின்’ உண்மையான தன்மை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே பரிபூரணமாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. அவர் செய்த எல்லாவற்றையும் அவருடைய பிதாவின் சித்தத்திற்குட்பட்டே செய்தார். அவர் ‘தமக்கே பிரியமாய் நடவாமல்’ (ரோம 15:3), அவரை அனுப்பினவர் சொன்னதையே எப்பொழுதும் செய்தார் (யோவா 6:38). ‘அவருக்குப் பிரியமானவைகளையே நான் எப்பொழுதும் செய்கிறேன்’ (யோவா 8: 29) என்று அவர் சொல்ல முடியும். பிதாவின் சித்தத்திற்கு கிறிஸ்து கீழ்ப்படிந்ததற்கு எந்த எல்லையும் இல்லை: அவர் ‘மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்’ (பிலி 2:8). ஆகவே அவர் செய்த எல்லாம் அவர் பிதாவின்மீதும் தன்னுடைய அயலகத்தாரின்மீதும் கொண்டிருந்த அன்பின் மூலமே வந்தது. அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது; அன்பில்லாமல், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிவதென்பது கொத்தடிமைத்தனமேயல்லாமல் வேறல்ல, அது அன்பாகவே இருக்கிறவரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கிறிஸ்துவினுடைய எல்லாக் கீழ்ப்படிதலும் அவருடைய வார்த்தைகளில் காணப்படும் அன்பிலிருந்தே பாய்ந்தோடியது என்பதற்கு ஆதாரம்: ‘என் தேவனே, உமக்குப் பிரியமானதை செய்ய விரும்புகிறேன்’ (சங் 40:8) என்பதே. ஆகவே கிறிஸ்து செய்ததெல்லாம் தேவனுக்கு மகிமை சேரவேண்டும் என்பதற்காகவே இருந்தது: ‘பிதவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்’ (யோவா 12:28) என்பது எப்பொழுதும் அவருக்கு முன்னால் இருந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

5. நற்கிரியைகளின் உண்மையான ஆரம்ப இடம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

மறுபடியும் பிறவாத மனிதர்கள் செய்யும் கிரியை, ஆவிக்குறிய தன்மையில் இல்லாவிட்டாலும், இயற்கையாக மற்றும் நன்றியை வெளிப்படுத்தும்விதமாக நல்லவைகளாக இருக்கும். வேதத்தை வாசித்தல், தேவனுடைய ஊழியத்தில் பங்குபெறுதல், ஏழைகளுக்கு பிச்சை கொடுத்தல் போன்றவை, வெளிப்பிரகாரமாக, அவைகளின் பொருள் நல்லவைகளாக இருப்பதால், அவைகளை அவர்கள் செய்யலாம்; ஆனால் அவைகளின் பிரதான ஊற்று, தேவனுடைய சிந்தையற்றவைகளாயிருப்பதினால், திரியேக ஒரே பரிசுத்த தேவனின் பார்வையில் அவைகள் கந்தையான குப்பையாயிருக்கிறது. மறுபடியும் பிறவாதவர்கள் ஆவிக்குறிய கிரியைசெய்ய எந்த வல்லமையும் இல்லாதவர்களாயிருக்கிறார்கள், ஆகவேதான் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, ‘நன்மைசெய்கிறவன் இல்லை; ஒருவனாகிலும் இல்லை’ (ரோம 3:12). அவர்கள் ‘தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது’ (ரோம 8:7). எனவே, ‘துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே’ (நீதி 21:4). விசுவாசிகள் தாங்களாகவே நல்ல ஒன்றை சிந்திக்கவோ அல்லது நற்கிரியையை செய்யவோ முடியுமென்று சிந்திக்கக்கூட முடிகிறதில்லை (2கொரி 3:5). ‘தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும்’ (பிலி 2:13) அவர்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப் பழகின அவர்களும் நன்மைசெய்யக் கூடும் (எரே 13:23). மனிதன் விரைவாக முற்செடிகளிலிருந்து திராட்சைப்பழங்களையும், களைகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்க முடியாததுபோல, மறுபடியும் பிறவாதவர்கள் வளரும்படிக்கு நற்கனிகளும், செய்யும்படிக்கு நற்கிரியைகளும் இருக்கிறது. நற்கிரியைகளைச் செய்ய முன்னதாக நம்மில் பெலனிருக்கும்படியாக, முதலாவதாக ‘நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு’ (எபி 2:10), அவருடைய ஆவி நம்மில் வைக்கப்பட்டவர்களாய் (கலா 4:6), அவருடைய கிருபை நம்முடைய இருதயங்களிலே நாட்டப்பட (எபே 4:7, 1கொரி 15:10) வேண்டும். அப்பொழுதும் கூட கிறிஸ்துவில்லாமல் நம்மால் ஒன்றுஞ்செய்யக்கூடாது (யோவா 15:5). அடிக்கடி நன்மையானதை செய்யும்படி நமக்கு விருப்பமிருக்கிறது, ஆனால் அவைகளை எப்படிச்செய்ய வேண்டுமென்று நமக்குத் தெரியாது (ரோம 7:18). இது நம்மை ‘சகல நற்கிரியைகளிலும் சீர்பொருந்தினவர்களாக்கி’, நம்மில் ‘இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாக பிரியமானதை நடப்பிக்க’ (எபி 13:22) நாம் தேவனை வேண்டிக்கொள்ளும்படியாக, நம்மை நம்முடைய முழங்கால்களுக்கு நடத்துகிறது. ஆகவே நாம் நம்முடைய சுயபோதுமானத்தன்மையை வெறுமையாக்கி, நம்முடைய ஊற்றுகளெல்லாம் தேவனில் இருக்கிறது என்ற உணர்வுக்கு (சங் 87:7) கொண்டுவரப்படுகிறோம்; அதன்பிறகு, நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய நமக்கு பெலனுண்டு (பிலி 4:13) என்பதைக் கண்டுகொள்ளுகிறோம்.

6. நற்கிரியைகளின் மாபெரும் முக்கியத்துவம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

முடிந்த அளவுக்கு சுருக்கமாக: ‘நற்கிரியைகள்’ மூலம் தேவன் மகிமைப்படுத்தப்படுவதால் அவைகள் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை (மத் 5:16), அவைகளின் மூலம் நமக்கெதிராக பேசுபவர்களின் வாய் அடைபடுகிறது (1 பேது 2:12), அவைகளின் மூலம் நாம் சார்ந்துள்ள விசுவாசத்தின் உண்மைத்தன்மையை ஆதாரப்படுத்துகிறோம் (யாக் 2:13-17). நாம் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்பதை’ (தீத் 2:9) வெளிக்காட்ட வசதியாயிருக்கிறது. அவருடைய நாமத்தை தரித்திருப்பவர்கள், அவருடைய செய்கையினால் கிறிஸ்துவின் வழியிலேயும் ஆவியிலேயும் தொடர்ச்சியாக நடக்கிறார்கள் என்பதைத்தவிர வேறு எதுவும் கிறிஸ்துவின் நாமத்திற்கு மதிப்பைக் கொண்டுவராது. அதே ஆவி, அப்போஸ்தலனும் இந்த உலகத்தில் கிறிஸ்துவின் வருகையைக்குறித்த தன்னுடைய வாக்கியத்தில் ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது’ என்று முகவுரைப்படுத்தசெய்ததற்கு காரணமில்லாமலில்லை, மேலும், ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச்செய்ய ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்’ (தீத் 3:8) என்றும் எழுத உந்தித்தள்ளியது. நாம் உண்மையில் ‘நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்’ (தீத் 2:14) இருக்கக்கடவோம்.

7. நற்கிரியைகளின் உண்மையான நோக்கம் நமக்கு போதிக்கப்படும்பொழுது நாம் வேதவாக்கியங்களிலிருந்து ஆதாயம்பெறுகிறோம்.

தேவன் நம்மை வைத்திருக்கிற ஒவ்வொரு தொடர்பிலும் நம்முடைய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாயிருக்கிறோம். பெத்தானியா ஊராளாகிய மரியாள் இரட்சகரை அபிஷேகம் பண்ணினதே (மத் 26:10, மாற் 14:6) வேதாகமத்தில் ‘நற்கிரியை’ என்று முதன்முதலில் குறிப்பிடப்பட்டிருப்பது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், குறித்துக்கொள்ளுவதற்கு பயனுள்ளதாயும் இருக்கிறது. மனிதரால் தூற்றப்பட்டாலும், புகழப்பட்டாலும் இரண்டையும் ஒன்றாகவே கருதி, ‘பதினாயிரங்களில் சிறந்தவர் மேலேயே’ கண்ணைவைத்து, அவளுடைய விலையுயர்ந்த தைலத்தை அவர்மேல் ஊற்றினாள். மற்றுமொரு ஸ்திரீ, தொற்காள் (அப் 9:36), ‘நற்கிரியைகளை மிகுதியாய் செய்தாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது; மனிதர்களிடையே தேவன் மகிமைப்படும்படி மற்றவர்களுக்கு பிரயோஜனமாக, ஆராதனைக்குப்பின் ஊழியம் வருகிறது.

‘சகலவித நற்கிரியைகளுமான கனிகளையும் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு பாத்திரமாய் நடந்துகொள்ள வேண்டும்’ (கொலோ 1:10). பிள்ளைகளை வளர்த்தல் (இழுத்தலல்ல!), (ஆவிக்குறிய) அந்நியரை உபசரித்தல், பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவுதல் (அவர்களுடைய உலகப்பிரகாரமான தேவைகளை சந்தித்தல்), உபத்திரவப்படுபவர்களுக்கு உதவிசெய்தல் (1தீமோ 5:10) ஆகியவை ‘நற்கிரியைகளாக’ சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய வேதவாசிப்பும் வேதஆராய்ச்சியும் நம்மை கிறிஸ்துவுக்கென்று நல்ல போர்வீரர்களாக, நாம் வாழும் நாட்டிற்கு நல்ல குடிமகன்களாக, பூமியிலுள்ள நம்முடைய குடும்பத்திற்கு நல்ல அங்கத்தினர்களாக (தாழ்மையானவர்களாக, கனிவுள்ளவர்களாக, சுயனலமற்றவர்களாக) மாற்றாவிட்டால், ‘எல்லா நற்கிரியைகளையும் முழுமையாக செய்தாலும்’ அதினால் நமக்கு எந்த ஆதாயமுமில்லை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.