அத்தேனே பட்டணத்தில் பவுல்

அத்தேனே பட்டணத்தில் பவுல் எதைப் பார்த்தார்?

அதற்கான பதிலைத் தெளிவாக அப்பகுதியில் வாசிக்கிறோம். “முழுவதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்த ஒரு பட்டணத்தை” அவர் பார்த்தார். ஒவ்வொரு தெருவிலும் விக்கிரங்கள் அவருடைய கண்களுக்குத் தென்பட்டன. விக்கிரகக் கடவுள்களின் கோயில்கள் ஒவ்வொரு முக்கியப்பகுதியையும் ஆக்கிரமித்திருந்தன. பிளினியைப் (Plini) பொறுத்தவரை, அக்கோபோலிஸை (ஏதென்ஸ் நகரில் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண்) நோக்கி அமைந்துள்ள, குறைந்தது 40 அடி உயர மினெர்வாவின் (Minerva) சிலை, எப்பக்கத்திலிருந்தும் பார்ப்போரின் கண்களைக் கவர்ந்தது. பவுலைப்பொறுத்தவரை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை அமைப்பு அப்பகுதி முழுவதும் பரவியிருந்தது. “அத்தேனியர்கள் தங்கள் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி விக்கிரகக் கடவுள்களை வணங்கினார்கள்” என்று வரலாற்று ஆசிரியரான பாசானியா (Pausanias) சொல்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அந்தப் பட்டணம் முழுவதும் விக்கிரங்களால் நிறைந்திருந்தது.

இந்த பட்டணம், அனேகமாக, பவுல் பார்த்ததிலேயே புறஜாதியாரின் பட்டணத்திற்கு ஒரு மாதிரியாகவும் இருந்திருக்கலாம். அதன் அளவுடன் ஒப்பிடும்பொழுது, உலகத்திலேயே மிகவும் அதிகமான கற்றறிந்த வல்லுனர்களையும், நாகரிகமுள்ளவர்களையும், தத்துவஞானிகளையும், கலை மற்றும் அறிவியலில் சிறந்த அறிவுள்ளவர்களையும் அத்தேனே பட்டணம் தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால் சமயரீதியாக பாத்தால் அதன் நிலை என்ன? சாக்ரடீஸ், பிளாட்டோ போன்ற தத்துவஞானிகளின் பட்டணம் – அசிலுஸ், சோபோகிள், யூரிபிடெஸ் மற்றும் துசிடிடெஸின் பட்டணம் – மனம், அறிவு மற்றும் கலையின் பட்டணம் – பட்டணம் முழுதும் விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்தது.

அத்தேனேயில் உண்மையான தேவன் அறியப்படாதவராயிருந்தால் – பூமியின் இருளான பகுதிகளின் நிலை என்ன? கிரேகத்தின் ஆவிக்குறிய கண்கள் இருளடைந்திருந்தால், பாபிலோன், எபேசு, தீரு, அலெக்சாந்திரியா, கொரிந்து, ரோம் போன்ற பட்டணங்களின் நிலை என்ன? பச்சை மரத்திலுள்ள விளக்கிலிருந்து மனிதன் வெகுதூரம் சென்றிருப்பானென்றால், பட்ட மரத்தின் நிலை என்ன?

இந்த காரியங்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இவைகளால் நாம் எந்த மாதிரியான முடிவுக்கு கொண்டுவரப்படுகிறோம்?

1. தெய்வீக வெளிப்பாடு மற்றும் பரலோக வழி நடத்துதல் ஆகியவை மிக முக்கியமாக தேவை என்பதை நாம் அறிந்துக் கொள்கிறோமா? மனிதனை வேதம் இல்லாமல் விட்டுவிடு, மனிதத்தன்மையில் மிகவும் மோசமான ஒரு கடவுளைக்கொண்ட ஒரு வகையான சமயத்தை பின்பற்றுவான், ஆனால் அது வெளிச்சமில்லா, சமாதானமில்லா, நம்பிக்கையில்லா சமயமாக இருக்கும்.

“தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது” (1 கொரி 1:21). பண்டைய அத்தேனே பட்டணமானது நாம் மிகவும் கவனிக்க வேண்டிய நம்முன் நிற்கும் பாடம். வெளிப்பாடு இல்லாத இயற்கை தன்மை வீணானதே, அது வீழ்ந்துபோன மனிதனை இயற்கைக் கடவுளை நோக்கியே நடத்தும். வேதம் இல்லாமல் அத்தேனியர்கள் கல்லையும் மண்ணையும் தங்கள் கை வேலைகளையும் வணங்கினார்கள். ஸ்தோயிக்கர் அல்லது எப்பிகூரியராகிய ஒரு புறஜாதி தத்துவஞானியை ஒரு திறந்த கல்லரையின் அருகில் நிறுத்தி, வர இருக்கும் உலகத்தைக் குறித்து அவனிடம் கேளுங்கள், சமாதானம் தரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான எந்த ஒரு பதிலையும் அவனால் சொல்ல இயலாது.

2. சமயத்தின் இருளுக்கு எதிராக மிக உயர்ந்த அறிவுப்பூர்வமான பயிற்சி எந்த வகையிலும் பாதுகாப்பு தராது என்ற ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோமா? புறஜாதியாரின் உலகத்தில் வேறெங்கிலும் இருந்ததைவிட, அத்தேனே பட்டணத்தில் மிகவும் சிந்திக்கத்தக்க கற்றறிந்த ஞானிகள் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. கிரேக்கத் தத்துவ மாணவர்கள் ஒன்றுமறியா அறிவிலிகள் அல்ல. அவர்கள் தர்க்க நெறிமுறைகள், சொற்பொழிவு, வரலாறு மற்றும் கலை துறைகளில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் இந்த எல்லா மனக் கட்டுப்பாடும் அவர்களின் பட்டணம் “விக்கிரக ஆராதனையில் முழுவதுமாக மூழ்கியிப்பதிலிருந்து” தடுக்க முடியவில்லை.

இந்த 21ம் நூற்றாண்டில், வாசித்தல், எழுதுதல், கணிதம், வரலாறு, மொழியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவை வேத்ததின் அறிவு இல்லாமல் கல்வியை கொடுக்க போதுமானவை என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறதா? தேவன் மறுக்கிறார்! அப்படியானால் நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவில்லை. அறிவாற்றலை விக்கிரகமாக்குவது ஒரு சில மனிதர்களை திருப்திபடுத்தலாம், கிரேக்க சிந்தனைகளுக்கு முழு உலகமும் மிகவும் கடன் பட்டுள்ளது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. எபிரேய நாட்டுக்குப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின அந்த அறிவு இல்லாமல், பண்டைய கிரேக்கம் இருளான விக்கிரக உலத்தில் புதையுண்டிருக்கும். சாக்ரடீஸ் அல்லது பிளாட்டோவின் சீடர் பல காரியங்களில் அறிவுப்பூர்வமாக சொற்திறமைப் பெற்றிருக்கலாம், ஆனால் “இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” (அப் 16:30) என்ற சிறைச்சாலைத் தலைவனின் கேள்விக்கு அவனால் பதில் சொல்லியிருக்கவே முடியாது. “மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று அவனால் தன்னுடைய இறுதி நேரத்தில் சொல்லவே முடியாது.

3. கலைப் புலமை படுமோசமான மூட நம்பிக்கைக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் தருவதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்கிறோமா? அத்தேனியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்ப நுண்ணறிவு மிகப்பெரிய மறுக்க இயலா உண்மை. அத்தேனே பட்டணத்தில் பவுலின் கண்கள் பல “அழகிய சிற்பங்களைக்” கண்டது, அது இன்றும் கலையை விரும்பும் மனதுக்கு “எல்லையில்லா மகிழ்ச்சி தரக்கூடியவை”. ஆனாலும் அத்தேனே பட்டணத்தின் உன்னத கட்டிடங்களை வடிவமைத்துக் கட்டின மனிதர்கள் ஒரே உண்மையான கடவுளைப்பற்றி அறிவற்றவர்களாயிருந்தார்கள். நம்முடைய கலை மற்றும் அறிவியல் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் இன்றைய உலகம் தற்பெருமையில் நிறைந்திருக்கிறது. மனிதன் இயந்திரங்களைப்பற்றியும் புது கண்டுபிடிப்புகளைப்பற்றியும், ஏதோ மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதுபோல் எழுதுகிறான், பேசுகிறான். ஆனால், மிக உயர்ந்த கலை அறிவு மற்றும் இயந்திரவியல் அறிவு ஆவிக்குறிய மரணத்துடன் இணைந்துள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். பிடியாஸின் (Phidias) (சிற்பி) பட்டணமாகிய அத்தேனே “முழுவதும் விக்கிரகத்தால் நிறைந்திருந்தது”. ஒரு அத்தேனிய சிற்பி ஒரு கவர்ச்சியான கல்லரையைக் கட்டலாம், ஆனால் பாவத்தால் துக்கப்படுபவனின் கண்ணீரின் ஒரு துளியைக் கூட அவனால் துடைக்க இயலாது.

இந்த செய்தியை மறந்துவிடக்கூடாது. இது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும். நாம் வாழும் இந்தக் காலத்துக்கும் இவை பொருத்தமானவை. நாம் சந்தேகம் நிறைந்த அவிசுவாசமான நாட்களில் விழுந்திருக்கிறோம். நாம் திரும்பும் ஒவ்வொரு பக்கத்திலும் சத்தியத்தையும், தெய்வீக வெளிப்பாட்டின் மதிப்பையும் குறித்த சந்தேகத்தையும் கேள்வியையுமே எதிர்க்கொள்கிறோம். “இந்த காரணம் மட்டுமே போதாதா?” “இரட்சிப்புக்கேதுவான அறிவை மனிதன்பெற வேதம் உண்மையாகவே தேவையா?” “சத்தியத்திற்கும் தேவனுக்கும் நேராக வழி நடத்தப்படும்படியாக, மனிதன் தன்னகத்தே ஒளியைக் கொண்டிருக்க வில்லையா? இப்படிப்பட்ட கேள்விகள் சூறாவளிப்போல் நம்மைச் சுற்றி அடிக்கின்றன. இந்த சந்தேகங்கள் பல நிலையில்லா மனதுகளை அமைதியிழக்கச் செய்கின்றன.

உண்மைகளை எடுத்துரைப்பதே ஒரு வெளிப்படையான பதிலாகும். புறஜாதியாரின் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமின் எச்சங்கள் நமக்காக பேசும். அறிவுக்கூர்மையும் தர்க அறிவும் தேவ வெளிப்பாடு இல்லாமல் என்ன செய்ய முடியும் என்பதற்கு நினைவிடங்களாக அந்த எச்சங்கள் இன்றுவரை தேவனால் பாதுகாக்கப்பட்டுள்ளன. பார்தினன் மற்றும் கொலீசிய கோவில்களை கட்சிய சிந்தனையாளர்கள் முட்டாள்கள் அல்ல. அந்த சிந்தனையாளர்களின் கட்டிடங்களைக் கட்டியவர்கள், தற்காலத்து கட்டிட ஒப்பந்த்தாரர்களைவிட மிகச்சிறந்த வகையில் நீண்ட நாட்களுக்கு நிலைக்கும் வகையில் கட்டியிருக்கிறார்கள். இந்நாட்களில் நாம் அறிந்திருக்கிற எல்கின் சலவைக் கற்கள் (Elgin Marbles), அலங்கார வளைவுகளை வடிவமைத்த மனிதர்கள், மிக உயர்ந்த அறிவுக்கூர்மை பெற்றவர்கள். ஆனால் சமயம் சார்ந்த அறிவில் அவர்கள் இருளில் இருந்தார்கள் (எபே 5:8). தேவ வெளிப்பாடு இன்றி மனிதன் தன்னுடைய ஆத்துமாவிற்கு நன்மையைக் கண்டடைய முடியாது என்ற ஆதாரத்தையே பவுல் அன்று அத்தேனே பட்டணத்தில் பார்த்தார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.