தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்

இப்பொழுது நாம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக்குறித்து 5 காரியங்களைப் பார்த்திருக்கிறோம். இரட்சிக்கப்படுதல், ஆவியில் நிறைந்திருத்தல், பரிசுத்தமுள்ள வாழ்க்கை, சாட்சியுள்ள வாழ்க்கை மற்றும் உங்கள் இருதயத்தின் மனப்போக்கு. இவைகள் வேதவசனத்தில் அடிப்படையில் சரியாக இருக்குமென்றால் நீங்கள் தேவனுடைய சித்தத்தின் படி வாழ்கிறீர்கள். இதெல்லாம் சரிதான். இவைகளெல்லாம் மற்றவர்கள் சொன்னதுதான். ஆனால் என்னைப்பற்றி நீங்கள் பேசவே இல்லையே. என்னுடைய கேள்வியான யாரை திருமணம் செய்வது, எந்த கல்லூரியில் எந்த படிப்பை படிப்பது, எந்த நிறுவனத்தில் எந்த வேலையில் சேருவது போன்ற கேள்விகளுக்கு இது பதில் தரவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதைத்தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம். இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள்.

நீங்கள் உண்மையாகவே இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே ஆவியில் நிறைந்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே பரிசுத்தமாய் வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையாகவே சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்றால், தேவனைக்குறித்த உங்கள் இருதயத்தின் போக்கு உண்மையாகவே சரியாக இருக்கிறது என்றால் (இவைகளில் உண்மையாக என்ற வார்த்தையை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்), இப்பொழுது உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது பரிசுத்த ஆவியானவர். வாழ்வது நீங்களல்ல, கிறிஸ்துவே உங்களில் வாழ்கிறார். அப்படியானால் உங்கள் விருப்பங்களும் தெரிந்தெடுப்புகளும் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏனென்றால் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக உள்ள எந்த ஒன்றையும் நீங்கள் விரும்பப்போவதில்லை! அப்புறம் என்ன? நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கிறீர்கள்! இந்த 5 காரியங்களும் உங்கள் வாழ்க்கையில் உண்மை என்றால், எதையெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளே தேவனுடைய சித்தம்!

இங்கே உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். எதை யார் விரும்பினாலும் அதுவே தேவனுடைய சித்தம் என்று நான் சொல்லவில்லை. இந்த 5 வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தின் மீதும் உங்கள் கண்களை வையுங்கள். அவைகள் உங்கள் வாழ்க்கையில் செயல்பாட்டில் இருக்கும்பொழுது, உங்கள் விருப்பங்கள் உண்மையாகவே இந்த 5 காரியங்களின் அடிப்படையில் இருக்கும்பொழுது, உங்களுடைய அந்த மனதின் விருப்பங்களே தேவனுடைய சித்தம். இது என்னுடைய வேத விளக்கமா? இல்லை. சங்கீதம் 37:4 மற்றும் 5 ஐ வாசியுங்கள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்றால் என்ன? நாம் குறிப்பிட்ட இந்த 5 காரியங்களுமே கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருத்தல் என்பதின் விளக்கம். இந்த 5 காரியங்களிலேயும் நீங்கள் உறுதியாயும் உண்மையாயும் இருப்பீர்கள் என்றால், உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம், அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச்செய்வார் என்பதே! தேவன் தன்னுடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த தேவனுடைய வார்த்தையின்படி நீங்கள் தேவனிடத்தில் மன மகிழ்ச்சியாயிருப்பீர்களென்றால், அவர் தன்னுடைய விருப்பத்தையே உங்கள் மனதில் வைக்கிறார். அதையே அவர் நிறைவேற்றுகிறார். தேவனுடைய சித்தத்தை அறிய இதுவே உறுதியான மற்றும் சரியான வழி.

இப்பொழுது சில உதாரணங்களை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

உதாரணம் 1: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த 5 அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாக் சொல்கிறார். ஆனால் தான் ஒரு அவிசுவாசியை நேசிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும் சொல்கிறார். இந்த நபரைக்குறித்து நாம் என்ன சொல்லாம்? தேவனிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க தேவையான அந்த 5 அம்சங்களும் உண்மையாகவே அவரிடத்தில் இல்லை. அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள், ஒரு விசுவாசி, அவிசுவாசியை எந்த சூழ்நிலையிலும் திருமணம் செய்யக் கூடாது என்ற தேவனுடைய நியமத்திற்கு அவர் கீழ்ப்படிய வில்லை. அவருடைய இந்த விருப்பம் தேவனுடைய சித்தத்தின்படி அமைந்ததல்ல.

உதாரணம் 2: ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்று சொல்லுகிறார். நாம் குறிப்பிட்ட அந்த 5 அம்சங்களும் தன்னிடம் உண்மையாகவே இருப்பதாக் சொல்கிறார். தனக்கு அமெரிக்க தேசத்தில் ஒரு நல்ல வேலைக் கிடைத்திருப்பதாகவும், அதற்காக தனது மனைவி மற்றும் பிள்ளைகளைவிட்டு அமெரிக்காவிற்கு 5 ஆண்டுகள் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார். இதுவும் தேவனுடைய சித்தமல்ல. தேவன் குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது கணவனும் மனைவியும் இணைந்து பிள்ளைகளை கர்த்தருக்கு பயப்படும் பயத்தில் வளர்த்தெடுத்து சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காகவே. கணவன் மட்டும் தனியாக வெளி நாட்டிற்கு சென்று பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. 1 கொரி 7ம் அதிகாரத்தை வாசியுங்கள், கணவனும் மனைவியும் எத்தனை நாட்கள் அதிகபட்சம் பிரிந்திருக்கலாம் என்பதைக் கண்டுக்கொள்ளுவீர்கள்.

உதாரணம் 3: நீங்கள் ஒரு நல்ல வேலையில் இருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு சொந்தவீடு இருக்கிறது. இன்னுமொரு வீடோ அல்லது இடமோ குறைந்த விலைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது நல்ல விலைக்குபோகும் என்று நினைக்கிறீர்கள். இப்பொழுது அந்த வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குவது தேவனுடைய சித்தமல்ல. ஏனென்றால் உங்கள் அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட்ட பிறகு, உங்கள் சக கிறிஸ்தவ சகோதரனுடைய தேவையை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். உங்கள் எதிர்காலத்திற்காக எதையுமே சேர்த்து வைக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. மாறாக, பூமியில் சொத்துக்களை சேர்த்து வைப்பது தேவனுடைய சித்தமல்ல என்று சொல்லுகிறேன். அந்த பணத்தை ஆத்தும ஆதாயம் செய்யவும், சக விசுவாசியினுடைய தேவைகளை சந்த்திக்கவும் செலவிடுங்கள். ஆதித் திருச்சபை விசுவாசிகள் எப்படி தங்களுடையதை பகிர்ந்துக்கொண்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

இதேப்போன்று உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலேயும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தை மீறாமல், அது தேவனைப் பிரியப்படுத்துகிறதாக இருக்கிறதா என்பதில் கவனத்தை செலுத்துங்கள். உங்களுக்காக ஜெபம்பண்ணி தேவனுடைய சித்தத்தை அறிய வேறொரு (கள்ள) தீர்க்கதரிசியை நாடி ஓட அவசியமில்லை. உங்கள் தெரிந்தெடுப்புகளைக் குறித்து சீட்டுப்போட வேண்டிய அவசியமில்லை. வேதப்புத்தகத்தை குலுக்கு சீட்டுபோல பயன்படுத்த அவசியமில்லை. நீங்கள் வலது இடதுபுறம் சாயும்பொழுது வழி இதுவே, இதில் நடவுங்கள் என்று சொல்லும் தேவனுடைய சத்தத்தை உங்கள் காதுகள் கேட்கும். நீ நடக்க வேண்டிய வழியில் உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே என்று அவர் சொல்லியிருக்கிறார். மறைவானவைகள் தேவனுக்கே உரியவைகள், அதை அவர் ஏற்ற நேரத்தில் சரியாக செயல்படுத்துவார்.

பிரியமானவர்களே, இந்த உண்மையை நான் தெரிந்துக்கொண்டபொழுது ஒரு மிகப்பெரும் விடுதலையை அடைந்தேன். வேத வாக்கியங்கள் சொல்லுகிறது, சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். தேவனுடைய சித்தத்தை அறிவதில் இதுவே சத்தியமாகும். உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை செய்ய, கர்த்தர்தாமே கிருபையளிப்பாராக.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.