தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்

இப்பொழுது வேதவாக்கியங்கள் மூலம் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி என்பதைக்குறித்து சொல்லப்போகிறேன். நீங்கள் யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்பதைக்குறித்து நேரடியாக சொல்லாவிட்டாலும், அவைகளைக்குறித்தும் நீங்கள் எப்படி தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முடியும் என்பதை முடிவில் கண்டுக்கொள்ளுவீர்கள்.

முதலாவது பொதுவான, வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்துப் பார்ப்போம். 2பேதுரு 3:9ல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்பதே தேவனுடைய சித்தம் என்று வாசிக்கிறோம். ஆகவே ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் முதன்மையான தேவனுடைய சித்தம், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே. நாம் அழிந்துபோகாமல் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். ஆகவே தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முற்படுமுன் உங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி, நான் இரட்சிக்கப்பட்டிருகிறேனா? என்பதே. ஏனெனில் தேவனுடனான உறவில் இது முதல் படி. இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் தேவனுக்கு பகைஞராயிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் நீங்கள் சமாதானமாகவில்லை என்றால், உங்களுக்கும் தேவனுக்கும் எந்த உறவும் இல்லை, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளத் தேவையும் இல்லை. அது ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சொந்தமானது, இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனின் ஆளுகைக்கு முழுமையாக அற்பணிக்கவில்லை என்றால், அவருடைய சித்தத்தை கேட்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே நீங்கள் உங்களைக் கேட்க வேண்டிய முதலாவது கேள்வி, இரட்சிக்கப்படவேண்டும் என்ற தேவனுடைய சித்தத்திற்கு நீங்கள் கீழ்படிந்திருக்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், அந்த பதில் வேதவாக்கியங்களின் அடிப்படையில் இருக்குமென்றால், உங்கள் கனிகளினால் அது உறுதிப்படுமென்றால், இரட்சிப்பை பொறுத்தமட்டில் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் பொதுவான தேவனுடைய சித்தம் என்னவென்றால், ஆவியில் நிறைந்திருப்பது. எபே 5:17-18 வசனங்களில், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்தவர்களாயிருங்கள் என்று வாசிக்கிறோம். எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளவில்லை என்றால் வேதப்புத்தகம் உங்களை மதியற்றவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே ஒரு தேவனுடைய பிள்ளை, இயல்பாகவே தேவனுடைய சித்தத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தேவனுடைய சித்தம் 18ம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவியில் நிறைந்திருங்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்று பெந்தேக்கோஸ்தே வட்டாரங்களில் சொல்லப்படுவதுபோல், ஆவியில் நிறைதல் என்றால், அந்நியபாஷை என்ற பெயரில் கத்தி உருண்டு பிரண்டு அமர்களப்படுத்துவதல்ல! ஏனென்றால் நீங்கள் விசுவாசிகளானபோதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் முத்திரைபோடப்பட்டீர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறார் என்றும் நீங்களே பரிசுத்த ஆலயம் என்றும் வேத வசனம் சொல்லுகிறது. அப்படியானால் ஏற்கனவே விசுவாசிகளாயிருக்கிற எபேசியர்களுக்கு பவுல் ஏன் ஆவியில் நிறைந்தவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார்? எபேசியர்கள் அவிசுவாசிகளாயிருந்த நாட்களில் குடித்து வெறித்து மதுபான வெறிக்கொண்டிருக்கையில் தங்கள் தேவதையான டயானாவில் ஆலயத்தில் பிரவேசித்து, தங்கள் தேவதையை ஆராதித்தார்கள். அப்பொழுது அவர்கள் மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இப்பொழுது இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். குடித்து வெறிகாமல் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பட்டின் கீழ் வாருங்கள் என்று சொல்லுகிறார். ஆவியில் நிறைதல் என்றால் முழுமையாக பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதைக் குறிக்கிறது.

அப்படியானால் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுதல் அல்லது வழி நடத்தப்படுதல் என்றால் என்ன? வேதவாக்கியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் அல்லது பரிசுத்த ஆவியால் நிறைதல் என்பது தேவனுடைய வார்த்தையினால், வேதவசனத்தினால் நடத்தப்படுதல் என்பதையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிறைந்திருக்கும்பொழுது என்ன நடக்கிறது? அதே அதிகாரத்தை தொடர்ந்து வாசித்தால், ஆவியின் கனிகள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்களும் காணலாம் மற்றவர்களும் காண்பார்கள். மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்படும், உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உறவு மேம்படும். தேவனுடனான உங்கள் உறவு புதிய பரிமாணத்தை பெறும். உங்கள் கனிகளினால் அநேகரை ஆத்தும ஆதாயம் செய்வீர்கள். இவைகளெல்லாம் ஆவியில் நிறைந்திருப்பதற்கான ஆதாரங்கள். ஆவியின் கனிகளை கொலோ 3:16ம் வசனமுதல், கலாத் 5:22,23ம் வசனங்களில் காணலாம். இதுவே உங்களைக்குறித்த தேவனின் வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தமாயிருக்கிறது. ஆகவே இத்தருணத்தில் நீங்கள் கெட்க வேண்டிய முக்கியமான கேள்வி, உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது எது? தேவனுடைய வார்த்தையா அல்லது உங்கள் சொந்த விருப்பங்களா? நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வேத வசனத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்த்து, இதை தேவன் அனுமதிக்கிறாரா என்பதை உறுதி செய்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேவனின் வார்த்தைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அது தேவனுடைய சித்தமல்ல. இந்தக் கேள்விகள் நீங்கள் மற்றவர்களுக்கு பதிலளிக்க வேண்டியவைகல்ல. உங்களுக்கு நீங்களே பதிலளித்துக்கொள்ள வேண்டியவை. நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின் அடிப்படையில் வாழ்கிறீர்கள்.

மூன்றாவதாக, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும் என்று 1தெச 4:3-5ல் வாசிக்கிறோம். நீங்கள் உலகத்திலுள்ள எல்லாவிதமான துன்மார்க்க இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் விலகி தேவனை உண்மையும் உத்தமமும், பரிசுத்ததுடன் ஆராதிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உண்மையாகவே நீங்கள் தேவனுடைய சித்தம் செய்ய வாஞ்சிப்பீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்திற்காக நீங்கள் சிரத்தையுடன் முயற்சி செய்வீர்கள். நீங்கள் தேவனின் பரிசுத்த ஆலயமாயிருக்கிறீர்கள். எங்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறாரோ, அங்கெல்லாம் அவர் பரிசுத்தத்தை ஏற்படுத்துகிறார். நீதியின் மீது வாஞ்சையையும், பாவத்தின் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் இந்த செயல் உங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் இருக்கிறதா? நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்றால், அந்த விசுவாசம் உண்மையானது என்றால், அது செத்த விசுவாசமாயிருக்காது. அது தொடர்ந்து தன்னுடைய பணியை செய்யும். அது உங்கள் வாழ்க்கையை பரிசுத்தத்திற்கு நேராய் மாற்றும். இது உங்கள் வாழ்க்கையின் அனுபவமாயிராவிட்டால் உங்கள் அடிப்படை இரட்சிப்பிலேயே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால் பணி செய்யாத விசுவாசம் செத்த விசுவாசம். ஆகவே உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்தைக்குறித்து இதுவே தேவனுடைய சித்தம்.

நான்காவது, உங்கள் சொந்த சாட்சியுள்ள வாழ்க்கை. நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று1பேது 2:15ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘நன்மை செய்தல்’ என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள 12ம் வசனத்தில் இருந்து நீங்கள் படிக்க வேண்டும். அவிசுவாசிகளுக்கு முன்பாக பரிசுத்தமாக பேசுங்கள், அரசாங்கத்திற்கு கீழ்ப்படியுங்கள், அரசு அதிகாரிகளுக்கு கீழ்ப்படியுங்கள், மற்றவர்களை கனம்பண்ணுங்கள், சகோதரரை சினேகியுங்கள், இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய மன்னிப்பு, உங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்பட வேண்டும். இவைகளெல்லாம் மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் சாட்சியுடன் சம்மந்தப்பட்டது. இந்த நற்செயல்களினால் நீங்கள் புத்தியீன மனிதருடைய அறியாமையை அடக்க வேண்டும். இது உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்கள் வாழ்க்கையைப்பார்த்து மற்றவர்கள் தேவனை தூஷிக்கிறார்களா? அல்லது துதிக்கிறார்களா?

ஐந்தாவது, உங்கள் இருதயத்தின் எண்ணப்போக்கு. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (2தெச 5:16-18). எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்பது, தேவனுடைய கரத்திலிருந்து வரும் எந்த ஒன்றையும் நீங்கள் மகிழ்ச்சியாய் பெற்றுக்கொள்ளுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்கள் வெளிபுற சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவனுடனான உறவில் உங்கள் இருதயம் மகிழும். இது உங்கள் இருதயத்தின் மனப்போக்குடன் நேரடியாக தொடர்புள்ளது. இடைவிடாமல் ஜெபம்பண்ணுதல் என்பது என் சுய புத்தியின் மேல் சாராமல், என் முழு இருதயத்தோடும் நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதைக் குறிக்கிறது. என் வழிகள் எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் ஒப்புவிக்கிறேன், அவர் என் பாதைகளை செவ்வைப்படுத்துவார். எல்லாவற்றிலும் ஸ்தோதிரம் செய்தல் என்பதும் தேவனுடனான உங்கள் இருதயத்தின் மனப்போக்கை குறிக்கிறது. ஏனென்றால் சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும்பொழுது, நீங்கள் விரும்பியவை கிடைக்காமல் இருக்கும்பொழுது, உங்களுக்கு பிரியமானவர்கள் தேவனுடைய சித்தத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, முறுமுறுப்பதும் தேவனிடத்தில் கோபித்துக்கொள்ளுவதும் இயற்கையானதே. ஆனால் கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்; என்று சொல்லுவது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் இதுவே உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.