தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்

தேவன் என்னைக்குறித்து ஒரு சித்தம் வைத்திருப்பாரென்றால் அதை அவர் நிச்சயமாக ஒளித்து வைக்கப்போவதில்லை! நான் அதை எளிதாகக் கண்டுக்கொள்ளும் வகையில் அவரே வழிகளை ஏற்படுத்தி வைத்திருப்பார். 2பேது 1:19ம் வசனத்திற்கு உங்கள் கவனத்தை திருப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். இங்கே பேதுரு குறிப்பிடும் தீர்க்கதரிசனம் எது? அவர் முழு வேத வாக்கியங்களைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் (இந்நாட்களில் கள்ள தீர்க்கதரிசிகள் சொல்லும் கள்ள தீர்க்கதரிசனத்தைப்பற்றி அல்ல!) ஆகவே வேதத்தை முழுமையாக ஆராய்ந்தால் மட்டுமே நீங்கள் அதைக் கண்டுக்கொள்ள முடியும்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள இதுவே மிகச்சரியான வழி. நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் அதை எங்கே வெளிப்படுத்தியிருக்கிறாரோ அங்கே தான் நீங்கள் அதைக் கண்டுக்கொள்ள வேண்டும். தேவன் தன்னுடைய வார்த்தையைவிட வேறு எங்கும் அவருடைய சித்தத்தை வெளிப்படையாக, தெளிவாக வெளிப்படுத்தவில்லை! இப்பொழுது நீங்கள் சொல்லலாம், வேதப்புத்தகத்தில் என்னைப்பற்றி தனியாக ஒரு அதிகாரம் இல்லை. நான் யாரை திருமணம் செய்ய வேண்டும், கல்லூரியில் எந்த படிப்பை படிக்க வேண்டும், எந்த நிறுவனத்தில் அல்லது எந்த வேலையில் நான் சேரவேண்டும் என்பதைப்பற்றி வேதப்புத்தகம் எதுவுமே எனக்கு சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். இவைகளைக் குறித்து நான் வேதப்புத்தகத்தில் எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து வாசியுங்கள், அதை நீங்கள் சீக்கிரம் கண்டுக்கொள்ளுவீர்கள்.

நாம் மேலும் தொடர்வதற்கு முன்பாக, உபாகமம் 29:29ஐ வாசிக்கலாம். மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். இந்த வசனத்தை நீங்கள் கவனித்தால் தேவனுடைய சித்தம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது மறைவான தேவனுடைய சித்தம், இரண்டாவது வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தம். முதல் பகுதியானது தேவனுக்கு சொந்தமானது, அதை அறிந்துக்கொள்ள முயற்சிப்பதும் செய்வதும் என்னுடைய வேலை அல்ல. அது தேவன் செய்ய வேண்டிய பணி. என்னுடைய வேலையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தத்தை ஒழுங்காக செய்வது தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற வேண்டிய தேவனுடைய சித்தம் இதுவே. நாம் அடிக்கடி செய்யும் தவறு என்னவென்றால், வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தத்தை செய்யாமல், மறைக்கப்பட்டிருக்கும் தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுக்கொள்ள நாம் ஆர்வம் காட்டுகிறோம். நம்முடைய பணியை நாம் செய்யாமல், தேவன் செய்ய வேண்டிய பணியில் கவனம் செலுத்துகிறோம். தேவன் வெளிப்படுத்தியிருக்கிற அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யவில்லை என்றால், தேவன் அவருடைய பணியை செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே நமக்கு சொந்தமானது என்ன என்றால் வேதப்புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய சித்தமே.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.