தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளுதல்

நாம் எவ்வாறு தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முயற்சி செய்யக்கூடாது என்பதை முதலில் சிந்தித்துவிட்டு, சரியான வழிமுறைகள் என்ன என்பதை சிந்திதால் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

காலையில் அமைதிவேளையின்போது நமது மனதில் வருகிற சிந்தனைகள் தேவனுடைய சித்தமல்ல! நீங்கள் கிறிஸ்தவராக இருந்து, அமைதிவேளைய சில காலங்களாக கடைபிடிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இது தெரிந்திருக்கும். உங்கள் அமைதிவேளையின்போது பல தெளிவற்ற சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடும். இவைகளை நீங்கள் தேவனுடைய சித்தம் என்று சொல்ல முடியுமா? உங்கள் மனதில் எழுகின்ற ஆழ்ந்த அல்லது அழுத்தமான சிந்தனை தேவனுடைய சித்தம் என்று சொல்ல இயலாது. ஏனென்றால் உங்கள் மனதில் எழுகின்ற உறுதியான சிந்தனை தேவனுடைய சித்தம் என்று வேத வாக்கியங்களில் எங்குமே சொல்லப்படவில்லை. சற்று நீங்கள் கவனிப்பீர்களென்றால், அவிசுவாசிகளுக்கும் மனசாட்சி உண்டு. தன்னுடைய விக்கிரகங்களுக்கு எதையாகிலும் நேர்ந்துக்கொண்டால் அதை மனசாட்சியின் படி சரியாக நிறைவேற்றிவிடுகிறார்கள். ஆகவே நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபித்துவிட்ட படியினால் உங்கள் மனசாட்சி ஏற்படுத்திய சிந்தனை எல்லாம் தேவனுடைய சித்தம் ஆகிவிடாது.

சிலர் சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்! அவர்கள் என்ன தெரிந்தெடுப்புகளை தங்கள் மனதில் வைத்திருக்கிறார்களோ அவைகளை தனித்தனி துண்டு சீட்டுகளில் எழுதி, ஜெபம் செய்துவிட்டு கண்ணை மூடி ஏதேனும் ஒன்றை எடுப்பார்கள். அது என்ன வருகிறதோ அது தேவனுடைய சித்தம் என்று முடிவு செய்துவிடுவார்கள். நீங்கள் வேதவாக்கியங்களை கவனித்துப்பார்த்தால், சீஷர்கள் மத்தியாஸ் என்பவரை சீட்டுப்போட்டு அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்தெடுதார்கள். ஆனால் உண்மையில் தேவன் பவுலையே அப்போஸ்தல ஊழியத்திற்கு தெரிந்தெடுத்தார். ஆகவே சீட்டுப்போடுதலைவிட, தேவனை அண்டிக்கொள்ளுவதே சிறந்ததல்லவா!

சிலர் இப்படிச் சொல்ல கேட்டிருக்கிறேன், நான் வேத புத்தகத்தை திறக்கும்பொழுது எந்த வசனம் என் கண்முன் வருகிறதோ, அந்த வசனம் மூலம் தேவன் என்னோடு பேசுகிறார், அது தான் தேவனுடைய சித்தம். வேதப்புத்தகம் அந்த நோக்கத்துடன் ஒருபோதும் எழுதப்படவில்லை. அது தோல் சுருள்களில் எழுதப்பட்டது, வசனங்கள் கூட பிரிக்கப்பட்டிருக்க வில்லை. ஆகவே இந்த விதம் தேவனுடைய சித்தத்தை அறிய சரியான முறை என்று விசுவாசிக்கிறீர்களோ? அப்படியானால் நாம் பின்வரும் கருத்தை நம்ப வேண்டும். அச்சு இயந்திரங்களும், தாள்களும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தேவன் இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். இந்த முறைகளெல்லாம் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள சரியான முறைகள் அல்ல.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.