பாமாலைகள்
(What a friend we have)
பாடல்: ஜோசப் ஸ்கிரீவன்

பாடல் பிறந்த கதை

1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்தான் உண்டே!
பாவ பாரம் தீர்ந்து போக
மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே
நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும்
ஊக்கமான ஜெபத்தால்.
 
2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை சேருவோம்;
மோச நாசம் நேரிட்டாலும்
ஜெப தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே நெஞ்சின் நோவை
பலவீனம் தாங்குவார்;
நீக்குவாரே மனச் சோர்பை,
தீய குணம் மாற்றுவார்.
 
3. பலவீனமானபோதும்
கிருபாசனம் உண்டே;
பந்து ஜனம் சாகும்போதும்
புகலிடம் இதுவே:
ஒப்பில்லாத பிராண நேசா!
உம்மை நம்பி நேசிப்போம்;
அளவற்ற அருள் நாதா!
உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

 

இப்பாடலை எழுதிய ஜோசப் ஸ்கிரீவன், 1819-ம் ஆண்டு, அயர்லாந்தில் சீப்பாட்ரிக் என்னும் இடத்தில் பிறந்தார். தனது இளமைக் கல்வியைப் பிறந்த ஊரிலேயே முடித்து, பின்னர் டப்ளின் நகரின் திரித்துவக் கல்லுரியில் பட்டம் பெற்றார். படிப்பை முடித்தவுடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மண நாளுக்கு முன்தினம், மணப்பெண் குதிரையில் ஏறி, ஒரு ஆற்றைக் கடக்க முயன்றபோது, தவறி விழுந்து, ஆற்று நீரில் மூழ்கி, உயிரிழந்தாள். இதை ஆற்றின் மறுகரையில் நின்று பார்த்துக்கொண்டு, உதவி செய்யக் கூடாமல் திகைத்து நின்ற ஸ்கிரீவன், மிகவும் வேதனைப்பட்டார். அதினால், அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது.

இந்த துயர நிகழ்ச்சியை மறக்க, 1845-ம் ஆண்டு, தமது 25-ம் வயதில் கனடாவுக்குச் சென்றார். அங்கு, "நம்பிக்கைத் துறைமுகம்" என்ற ஊரில், ஆசிரியராகப் பணியாற்றினார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், ஸ்கிரீவன் தெய்வ பக்தி நிறைந்தவராகவும், பிறருக்காக வாழ்பவராகவும் விளங்கினார். தன்னிடமிருந்த பணம், பொருள் அனைத்தையும், ஏழை எளியவர், மற்றும் அனாதைகளுக்கென்றே செலவு செய்தார்.

மூடிப் பிரசங்கியாரின் பிரபல நற்செய்திப் பாடகரான சாங்கி, ஸ்கிரீவனைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்:

'ஸ்கிரீவன் ஒருமுறை, தாம் வாழ்ந்த ஊராகிய நம்பிக்கைத் துறைமுகத்தின் சாலையில், மர ரம்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அமைதியாக, கருமமே கண்ணாகச் சென்ற ஸ்கிரீவனைப் பார்த்த ஒருவர், தன் வேலையைச் செய்ய, அவரை வாடகைக் கூலிக்கு அமர்த்த எண்ணி, அழைத்தார். ஆனால், அருகே நின்றவர் அவரைப் பார்த்து, "அந்த மனிதனை நீர் வேலைக்கு அமர்த்த முடியாது. பணம் கொடுக்க முடியாத ஏழை விதவைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் மட்டுமே, அவர் இலவசமாக மரம் அறுத்துக் கொடுப்பார்" என்றார்.'

ஸ்கிரீவன், "ப்ளைமவுத் சகோதரர்" என்ற சீர்திருத்த சபையில் சேர்ந்தார். அச்சமயம் ஒரு பெண்ணை மணக்க விரும்பினார். மண நாளும் குறிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன், அந்த சபையில் சேர விரும்பிய அவளுக்கு, ஒரு ஏரியில் ஞானஸ்நானம் கொடுத்தனர். தண்ணீர் மிகவும் குளிர்ந்திருந்ததால், ஜலதோஷம் பிடித்து, அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல் வந்து, அவள் மரித்துப் போனாள்.

இந்தத் திருமணத்தின் மூலமாவது, தன் மகன் சந்தோஷ வாழ்வு பெறுவான், என்று நம்பியிருந்த ஸ்கிரீவனின் தாயார், தாங்க முடியாத துயரத்திற்குள்ளானார். தன்னுடைய வேதனையின் மத்தியிலும், பிறர் நலன் கருதும் ஸ்கிரீவன், அயர்லாந்தில், தனிமையில், தன்னை எண்ணி வருந்தும் தன் தாயாரை ஆறுதல்படுத்த, 1855-ம் ஆண்டு, இந்த அருமையான பாடலை எழுதினார்.

இப்பாடலுக்கு, ஸ்கிரீவன் கொடுத்த தலைப்பு, "இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்", என்பதே. அவரைப் பராமரிக்க வந்த நண்பர், இப்பாடலின் கைப்பிரதியைப் பார்த்தார். அதை வாசித்து, மனம் நெகிழ்ந்தவராக, ஆச்சரியத்துடன், "இப்பாடலை இயற்றியது யார்?" என்று வினவினார். அதற்கு ஸ்கிரீவன், "ஆண்டவரும் நானும் சேர்ந்தே இயற்றினோம்". என்று தாழ்மையாகப் பதிலளித்தார்.

இவ்வாறு மனோவியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனால் எழுதப்பட்ட இப்பாடல், சாங்கியின் முதல் தர நற்செய்திப்பாடல் தொகுப்பில் இடம் பெற்று, உலகெங்கும் பல உயிர்மீட்சிக் கூட்டங்களிலும், ஜெபக்கூட்டங்களிலும், இன்றும் பாடப்பட்டு வருகிறது. படிப்பறிவில்லாத பாமர மக்களும், எளிதில் புரிந்துக்கொள்ளும் அமைப்புக் கொண்ட இப்பாடல், உலகிலுள்ள 4,00,000 கிறிஸ்தவப் பாடல்களில், மிகவும் விரும்பிப் பாடப்படும் பாடலெனப் புகழ்பெற்றது. மிஷனெரிகள் தங்கள் பணித்தளங்களில், புது விசுவாசிகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முன்னோடிப் பாடலாகவும் இது விளங்குகிறது.

இப்பாடலுக்கு, ஜெர்மனியில் சங்கீதப் பயிற்சி பெற்று, பென்சில்வேனியாவிலுள்ள ஈரி என்ற ஊரில் வாழ்ந்த வழக்கறிஞரான சார்லஸ் கான்வர்ஸ், அருமையான ராகம் அமைத்துக் கொடுத்தார். அதை இயற்றிய ஸ்கிரீவனோ, தன் வாழ்வின் கடைசி நாட்களை சுகவீனம், வறுமை, மற்றும் மனவியாகுலத்துடன் கழித்தார். இறுதியில், 1886-ம் ஆண்டு, தமது 66-வது வயதில், "நைஸ்லேக்" என்னும் ஊரில், ஒரு சிற்றாற்றில் தவறி விழுந்து, மூழ்கி மரித்தார்.

மனோவியாதியுற்ற ஒரு நோயாளியின் மூலம், கர்த்தர் உலகெங்குமுள்ள மக்களுக்கு ஆறுதல் தரும் பாடலை அளித்தாரென்றால், தாலந்து படைத்த உன்னை, இன்னும் மேன்மையாக பயன்படுத்துவாரே!

ஆண்டவர் கரத்தில் உன்னை இன்றே அர்ப்பணம் செய்வாயா?

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.