பாமாலைகள்
(I want to be an angel)
 பாடல் : சிட்னி P. ஜில்

பாடல் பிறந்த கதை

1. நான் தூதனாக வேண்டும்
விண் தூதரோடேயும்;
பொற்கிரீடம் தலைமேலும்
நல் வீணை கையிலும்
நான் வைத்துப் பேரானந்தம்
அடைந்து வாழுவேன்;
என் மீட்பரின் சமுகம்
நான் கண்டு களிப்பேன்.
 
2. அப்போது சோர்வதில்லை,
கண்ணீரும் சொரியேன்;
நோய், துக்கம், பாவம், தொல்லை
பயமும் அறியேன்;
மாசற்ற சுத்தத்தோடும்
விண் வீட்டில் தங்குவேன்;
துதிக்கும் தூதரோடும்
நான் என்றும் பாடுவேன்.
 
3. பிரகாசமுள்ள தூதர்
நான் சாகும் நேரத்தில்
என்னைச் சுமந்து போவார்
என் இயேசுவண்டையில்;
நான் பாவியாயிருந்தும்
என் மீட்பர் மன்னித்தார்;
எண்ணில்லாச் சிறியோரும்
என்னோடு வாழுவார்.
 
4. மேலான தூதரோடும்
நான் தூதன் ஆகுவேன்;
பொற்கிரீடம் தலை மேலும்
தரித்து வாழுவேன்;
என் மீட்பர்முன் ஆனந்தம்
நான் பெற்று வாழ்வதே
வாக்குக் கெட்டாத இன்பம்
அநந்த பாக்கியமே.

''அக்கா ! நானும் ஆண்டவருக்குப் பணிசெய்யும் தூதனாக மாற வேண்டும்!'' 

என உற்சாகத்துடன் கூச்சலிட்டாள் ஒரு அழகிய சிறுபெண்.  ஞாயிறு பள்ளியின் வகுப்பு நேரத்தில், தேவ தூதர்களைப் பற்றி, வேதபாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியை, சிட்னி ட. ஜில், மகிழ்வுடன் சத்தமிட்ட மாணவியைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.  அவள் அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள, டாக்டர் ஜோயல் பார்க்கர்  ஆலய ஞாயிறு பள்ளி ஆசிரியையாக, உத்தமமாய் ஊழியம் செய்து வந்தாள்.

சில நாட்கள் சென்றபின், தேவதூதனாக மாற விரும்பிய அச்சிறுமி, வியாதிப்பட்டு மரித்துப்போனாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத சிட்னியின் உள்ளத்தில், அன்று அந்த மாணவி உற்சாகமாய்க் கூறிய வார்த்தைகள், மறக்கமுடியாமல் தொனித்துக் கொண்டேயிருந்தன.  அச்சிறுமியின் வாஞ்சை, சிட்னியின் உள்ளத்தில் பாடலாக உருவெடுத்தது.

இப்பாடலைத் தன் ஞாயிறுபள்ளிப் பிள்ளைகள் பாடுவதற்கென்றே, சிட்னி எழுதினாள்.  ஆனால், நாளடைவில், பெரியவர்களும் கூட விரும்பிப் பாடும் பாடலாக அது மாறியது.  பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பல நாடுகளில் இன்றும் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.