பாடல் பிறந்த கதைகள்

நான் நேசிக்கும் தேவன் இயேசு

பாடல் : கடையனோடை I. பாக்கிய நாதன்

பாடல் பிறந்த கதை

பல்லவி
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்;
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்.
 
அனு பல்லவி
நான் பாடி மகிழ்ந்திடுவேன்;
என் இயேசுவைத் துதித்திடுவேன்;
என் ஜீவிய காலமெல்லாம்
அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்.
 
சரணங்கள்
1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்;
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார். - நான் பாடி
 
2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்;
மயங்கிவிழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்.- நான் பாடி
 
3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட வந்திடுவார்;
கால் தளர ஊன்றுகோலாய்
காத்திட வந்திடுவார். - நான் பாடி
 
4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே;
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே. - நான் பாடி.

இப்பாடலை எழுதிய சகோதரன் கடையனோடை I. பாக்கியநாதன், 07.08.1945 அன்று, திரு. A.P.S. ஐயாத்துரைக்கும், எமி அம்மாளுக்கும் மைந்தனாகப் பிறந்தார்.  பக்தியுள்ள குடும்பமானதால், சிறுவயதிலேயே காலை மாலை ஆலய ஆராதனைக்கு ஒழுங்காகச் செல்வார்.  வேத பாடத் தேர்வுகளில் பரிசுகளும் பெற்றார்.  ஆரம்பக் கல்வியைத் தன் சொந்த ஊரான கடையனோடையிலும், உயர்நிலைக் கல்வியை நாசரேத் மர்காஷியஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.  பின்னர் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1951-1953 வரை படித்து முடித்தார்.

பாக்கியநாதன் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும்போதே, 'கடம்' வாசிக்கவும், பின்பு தபேலா வாசிக்கவும், ஆசிரியர் பயிற்சிக் காலத்தில் ஆர்மோனியம் வாசிக்கவும் தாமாகவே கற்றுக்கொண்டார்.

11.11.1970-அன்று கோகிலம் ஜேன் என்ற ஆசிரியையை மணம்புரிந்தார்.  ஒருமுறை அவர் மனைவி திடீரென சுகவீனமானார்.  காய்ச்சல் வந்தது.  மாத்திரைகள் கொடுத்து மூன்று நாளாகியும் காய்ச்சல் விடவேயில்லை.  மிகவும் மெலிந்து போனார்.  கடையனோடையிலிருந்த மருத்துவரிடம் சென்றார்கள். பரிசோதனை நடத்திய அவர், பாக்கிய நாதனைத் தனியாக அழைத்து, "சார், படித்தும் அறிவில்லாமல் இருந்திருக்கிறீர்களே! உங்கள் மனைவிக்கு T.B. வியாதி முற்றிவிட்டது. திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியிலுள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு உடனே அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.  பயங்கரமான அதிர்ச்சியில், செய்வதறியாது திகைத்துப்போன பாக்கியநாதன், தன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

பாக்கியநாதன் சோர்வுடன், சேகரகுருவான அருள்திரு.சாலமோன்  சைமனிடம் சென்றார். விபரத்தைச் சொல்லி, தூத்துக்குடிக்கு மனைவியை அழைத்துச் செல்ல, தனது சம்பளத்தில் முன்பணமாக, இருநூறு ரூபாய் கேட்டார். போதகரிடம் அப்போது பணமில்லாததால், "பாக்கியநாதன், நாம் இன்று இரவு நன்றாக ஜெபிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்" என்று கூறி, அவரை அனுப்பிவிட்டார்.

அன்றிரவு, ஜேன் காய்ச்சலின் அகோரத்தில், முனங்கிக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 10 மணிக்குமேல், பாக்கியநாதன் தன் மனைவி படுத்திருந்த கட்டிலின் அருகே முழங்கால்படியிட்டு, பரம தகப்பனை நோக்கி ஜெபிக்க ஆரம்பித்தார். "தகப்பனே, நான் உம்மைத் துதித்துப் பாடுகிற உம்முடைய பிள்ளை.  கதாகாலட்சேபம் மூலம் உம்முடைய நாமத்தை ஊர்ஊராகச் சென்று மகிமைப்படுத்தி வருகிறேன். எனக்கு இப்படி ஒரு சோதனையா? என் மனைவிக்கு இப்படியொரு கொடிய வியாதியா? ஆண்டவரே, நீர் நினைத்தால் ஒரு நொடியிலே இந்த வியாதியை நீக்க முடியும். என் வாழ்விலும் ஏன் நீர் அற்புதம் செய்யக் கூடாது?" என்று கண்ணீர்விட்டு ஜெபித்தார். இவ்வாறு இரவு 12 மணிவரை ஜெபித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றார். "இனி இயேசு பார்த்துக் கொள்ளுவார்," என்ற விசுவாசத்தோடு தூங்கிவிட்டார்.

மறுநாள் அதிகாலை சுமார் 5 மணி இருக்கும்.  பாக்கியநாதனின் வீட்டின் கதவு தட்டப்பட்டது.  சத்தம் கேட்டு விழித்த பாக்கியநாதன் கதவைத் திறந்தார். போதகர் சாலமோன் சைமன் நின்றுகொண்டிருந்தார்.  "பாக்கியநாதன், டீச்சர் எப்படியிருக்காங்க?" என்றார். "ஐயா, காய்ச்சல் விடவேயில்லை" என்றார் பாக்கியநாதன். போதகர், "சுகமாகிவிடும், நேற்று இரவு பத்து மணிக்கு நெல்விற்ற காணிக்கைப் பணம் வந்தது, இந்தாங்க" என்று கூறி, இருநூறு ரூபாயைப் பாக்கியநாதனிடம் கொடுத்தார். மீண்டும், "நான் இரவு வெகுநேரம் ஜெபித்திருக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதம் செய்வார்," என்று கூறி ஜெபித்துவிட்டுச் சென்றார்.

காலை சுமார் 11 மணியளவில் தூத்துக்குடிக்குச் சென்றனர். அவர்களுக்குப் பழக்கமான டாக்டர். திருமதி. பிரேமா பாலச்சந்திரனிடம் விபரத்தைக் கூறினார். டாக்டர் அவர்களை ஆறுதல் படுத்தி, ரத்த சோதனை, எக்ஸ்ரே முதலியவை எடுக்க ஏற்பாடு செய்தார். "சோதனைகளின் முடிவுகள் வர, காலதாமதமாகும்.  ஆகவே, நீங்கள் சாப்பிட்டுவிட்டு , மதியம் 3 மணிக்கு வாருங்கள்" என்றார். அதன்படி, மாலை 3 மணிக்கு மீண்டும் டாக்டரிடம் வந்தனர்.

எல்லாச் சோதனைகளின் முடிவுகளையும் பார்த்த டாக்டர், பாக்கியநாதனைப் பார்த்து, Mr. பாக்கிய நாதன், உங்கள் மனைவிக்கு T.B. வியாதியென்று யார் கூறியது? அந்த வியாதிக்கான எந்த அடையாளமும் இல்லையே! இது வெறும் சளிக்காய்ச்சல் தான், வேறொன்றுமில்லை" என்று கூறி ஊசி போட்டு மாத்திரை தந்தார். பாக்கிய நாதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை!

"நேற்று ஒரு மருத்துவர் T.B. வியாதி முற்றிவிட்டது என்றார். இன்று ஒரு மருத்துவர், அந்த வியாதிக்கான எந்த அடையாளமுமில்லை என்கிறார். அப்படியானால், இடையில் நடந்தது என்ன?" என்று சிந்தித்தார். "என் தேவன் இயேசு கிறிஸ்து தான், என் ஜெபத்தைக் கேட்டு, அற்புதம் செய்திருக்கிறார்" என்று விசுவாசத்துடன் வீடு திரும்பினார். ஊர் திரும்புவதற்குள் ஜேனின் காய்ச்சல் மாயமாய் மறைந்தது. பாக்கிய நாதன் போதகரிடம் சென்று, "ஐயா, இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்பதை என் வாழ்க்கையில் நிரூபித்து விட்டார்!"  என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார்.

இரவு பத்து மணிக்குமேல் பாக்கிய நாதனின் வீட்டில் அனைவரும் தூங்கியபின், தன் வாழ்விலே அற்புதம் செய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்த பாக்கிய நாதன் விரும்பினார். "காணிக்கை செலுத்தப் பொன்னுமில்லை, பொருளுமில்லை. ஆனால், அவர் தந்த தாலந்தாகிய பாட்டெழுதி, ராகம் அமைக்கும் வரமிருக்கிறதே"  என எண்ணியவராய், வழக்கம் போல சமையலறைக்குச் சென்றார். பாடலும், ராகமும் மளமளவென மடைதிறந்த வெள்ளம்போல வர ஆரம்பித்தன; எழுதினார்,

"நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

 அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்"

இப்பாடல் சகோதரன் பாக்கிய நாதனுக்கு மட்டுமல்ல, அநேகருக்குச் சாட்சிப் பாடலாக அமைந்து, அநேகரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இப்பாடல், சகோதரன் A.J. சத்தியாவின் இன்ப இசையில், சகோதரி திருமதி. ஹெலன் சத்தியாவின் பசுமையான மென்குரலில், இசைத் தட்டில் முதன்முறையாக வெளிவந்தது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.