பாடல் பிறந்த கதைகள்

இன்று கிறிஸ்து எழுந்தார்

(Christ the Lord is risen today)

பாடல் : சார்லெஸ் வெஸ்லி

பாடல் பிறந்த கதை

1. இன்று கிறிஸ்து எழுந்தார்
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்
அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்
அல்லேலூயா!

2. ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்
அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்
அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே
அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே
அல்லேலூயா!

3. பாடனுபவித்தவர்
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்
அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்
அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்
அல்லேலூயா!
 

லண்டன் நகரத்தில் வெஸ்லியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முதல் ஆலய ஆராதனையை, ஒரு பாழடைந்த இரும்பு ஆலையில் ஆரம்பித்தனர். சார்லெஸ் வெஸ்லியின் ஆல்டெர்கேட் ரட்சிப்பு அனுபவத்திற்குப் பின் ஓராண்டுக்குள்ளாகவே, 1739-ல் இவ்வாலயம் செயல்படத் துவங்கியது. இவ்வாலயத்தின் முதல் ஆராதனைக்கென்று, சிறப்புப் பாடலாக சார்லெஸ் இப்பாடலை எழுதினார்.

இந்த இரும்பு ஆலை ஆலயத்தில் வெஸ்லியினர் கூடிய நாட்களில், சார்லெஸ் பல புதுப்பாடல்களை எழுத, அனைவரும் அவ்வாராதனைகளில் உற்சாகமாகப் பாடினார்கள்.

இவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு பாடல் புத்தகமாக, "இரும்பு ஆலைப் பாடல்கள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இப்புத்தகத்தில் இப்பாடலும் "உயிர்த்தெழுந்த நாள் பண்டிகைப் பாடல்", என்ற தலைப்புடன் சேர்க்கப்பட்டது. அதில் நான்கு வரிச் சரணங்கள் இருந்தன.

இப்பாடலை எழுதினபோது, இதில் வரிகளுக்கு இடையிடையே வரும், "அல்லேலூயா" என்ற வார்த்தை இல்லை. ஆனால், பின்னர் வெளிவந்த ஒரு பாடல் தொகுப்பில், அதின் நூலாசிரியர், உற்சாக தொனியோடு கர்த்தரைத் துதித்துப் பாட, இதைச் சேர்த்தார்.

இந்தப் பாடலுக்கு "ஈஸ்டர் பாடல்", என்ற ராகம் இணைக்கப்பட்டது. இதை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.

சார்லெஸ் வெஸ்லி எழுதிய மற்றொரு பண்டிகைப் பாடல், "கேள் ஜென்மித்த ராயர்க்கே" என்ற கிறிஸ்மஸ் பாடலாகும். இப்பாடலின் இசையும், நாம் தூதருடன் சேர்ந்து செம்பீரித்துப் பாடும் தொனியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.