கேள்வி பதில்கள்

பெந்தேகோஸ்தே சபைகளில் சில பெலவீனங்கள் உண்டு. நீங்கள் பரிசுத்தாவியானவரின் நிறைவை பெற்றதற்கு அவர்களைப் பொருத்தவரை அந்நியபாஷை அடையாளம்தான் மிக முக்கியம். அந்த பாஷைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் பாஸ்டரின் பார்வையில், உங்கள் சபை விசுவாசிகளின் பார்வையில் நீங்கள் சரியாக அபிஷேகம் பெறவில்லை என்று முடிவு கட்டிவிடுவார்கள். நீங்கள் பெந்தேகோஸ்தே சபைகளில் கவனித்திருப்பீர்களே? சபையினர் ஜெபநேரத்தில் மிகுந்த சத்தத்துடன் அல்லேலுயா கூறுகிறதைக்கண்டிருப்பீர்கள், கைகளை வேகமாக தட்டி ஜன்னி வந்ததுபோல் உடலும், கைகளும் நடுங்கிக்கொண்டிருப்பவர்களை பார்த்திருப்பீர்களே? மேலும் பாம்பு சத்தம் இழுவதுபோல் அடிக்கடி ஸ்ஸ்ஸ் என்று ஜெபிப்பவர்கள் வாயிலிருந்து சத்தம் வரவேண்டும். அது ஸ்தோத்திரம் என்பதின் குருக்கெழுத்து அப்படி சிலர் சத்தம் இடுவதை பார்த்திருப்பீர்களே , டிவியில்கூட அதை பார்த்திருப்பீர்களே? சிலர் பற்களை கடித்து முகத்தை சுருக்கி, கண்களை இருக்கி மூல வியாதியஸ்தர்கள் காலையில் கஷ்டப்படுவதுபோல ஜெபவேளையில் அவர்கள் முகம் அப்படி மாறும். உங்கள் முகமும் அப்படி மாறினால்தான் நீங்கள் நிறைய அபிஷேகம் பெற்றுவீட்டீர்கள் என்று உங்கள் பாஸ்டரும் மற்றவரும் நம்புவார்கள் அடிக்கடி இரண்டு கைகளை உயர்த்தி சபையில் உள்ள மற்றவர்களை விட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அல்லேலுயா வார்த்தையை மிகச்சத்தமாக கூறுகிறீர்களோ அப்போதுதான் மற்றவர் பார்வையில் நீங்கள் கூடுதல் அபிஷேகம் பெற்றீர்கள் என்று நம்புவார்கள். பாஸ்டர்கள் பிரசங்கிக்கும்போது வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் இருக்கிறதோ, இல்லையோ கை உயர்த்தி எல்லாரும் அல்லேலுயா கூறுங்கள் என்று கூறும்போது நீங்கள் கைகளை உயர்த்தாவிட்டால் பாஸ்டர் உங்களை சரியாக அபிஷேகிக்கபடவில்லை என்று கூறுவார். சபையில் பெரும்பாலான விசுவாசிகளும் பாஸ்டர்களும் அப்படியேதான் நடிக்கிறார்கள். நீங்கள் நடிப்பை விரும்பவில்லை என்றால் ஒதுக்கப்படுவீர்கள்.

(விஷ்வவாணி )மறைந்த சகோ. எமில் ஜெபசிங் அவர்கள் தன் பாடலில் ஒரு வரி இப்படி எழுதினார்.

பாவி என்றென்னைப் பலர் தள்ளினர்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
ராஜா உம் அன்பு என்னை கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை
(கர்த்தனே எம் துணையானீர்)

நல்ல அர்த்தம் நிறைந்த பாடல் வரிகளுக்காக தேவனைதுதிக்கிறேன்

உண்மையாய் இரட்சிக்கப்பட்டவர்களை ஆவியில்லை என்று ஒதுக்கும் ஒரு கூட்டம் உண்டு. ஜெபத்தில் சத்தம்போடுபவர்கள், சத்தம் போடட்டும், பாஷை பேசுபவர்கள் பாஷை பேசட்டும். அவைகளை கண்டு ஏமார்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் ஆவியானவர் உண்டா? இல்லையா? என்பதற்கு எந்த மனுஷனுடைய சான்றிதழும் தேவையில்லை. ரோமர் 8ம் அதிகாரத்தில் கூறப்பட்டதைப்போல் உங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை நீங்களே அறிவீர்களே என்று பவுல் கூறியதைப்போல் நீங்கள் அதை உணர்ந்து செயலில் காட்டினாலே போதும்.

அந்நியபாஷையில் பிசாசை துரத்தும் பாஸ்டர்: சகோ.ஆல்வின் தாமஸ் அவர்கள் டிவி நிகழ்ச்சியில் தன் சபையில் நடக்கும் ஆராதனையை காட்டுகிறார். ஒரு சகோதரியின் கேன்சர் சுகமானது என்று சாட்சி கூற வைக்கிறார்கள். அந்த பெண்ணின் தாயும் சாட்சி கூறுகிறார். மகள் கேன்சர் வியாதியால் ஆஸ்பத்திரியில் தூங்கமுடியாமல் தவிக்கிறாள். நான் பாஸ்டர் தாமஸ் அவர்களின் சபைக்கு அவளை அழைத்து சென்றேன். உன் கேன்சர் சுகமாவதை காண்கிறேன் என்றார். அன்று மாலை ஆஸ்பத்திரியில் என் மகளை அந்நியபாஷை பேசி மனநோய் பிடித்தவளைப்போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். எல்லாரும் அவளை பிடித்து படுக்கவைத்தார்கள். அன்று இரவு அவள் நிம்மதியாக தூங்கினாள். ஆகவே இன்று சபைக்கு வந்து சாட்சி கூறுகின்றேன் என்றாள். அப்போது பிளாஷ்பேக்காக பாஸ்டர் ஆல்வின் தாமஸ் ஜெபிக்கும்போது அவர் ஒவ்வொரு வியாதியின் பெயரை வரிசையாக கூறி முடிவில் கேன்சர் வியாதிக்காக ஜெபிக்கிறேன் என்றார். அதை டிவியில் காட்டுகிறார்கள். அதன்பின் எல்லாரும் அந்நியபாஷையில் சத்தமாக ஜெபியுங்கள் என்றார். அந்நியபாஷை பேசி பிசாசை விரட்டுங்கள் என்று கூறி பெரும் கூக்குரலோடு ஜெபித்தார். அன்று பாஸ்டர் ஆல்வின் தாமஸ் செய்த அந்த ஜெபத்தைத்தான் இந்த பெண் டிவியில் சாட்சி கூறினார். பொதுவாக எல்லா வியாதி பெயர்களையும் பாஸ்டர் கூறி ஜெபித்த போது கேன்சர் வியாதி சுகமாகட்டும் என்று அவர் கூறியது இவளுக்காக மட்டும் அவர் அப்படி கூறி ஜெபித்தாக மிகைப்படுத்தி அந்த பெண் சாட்சி கூறினார். அவளின் கேன்சர் சுகமானதாக எந்த பயாப்சி ரிப்போர்ட்டும் கூறவில்லை. இப்படித்தான் பல பொய் சாட்சிகள் டிவியிலும்,சபையிலும் கூறப்படுகின்றன. இதில் தமாஷ் என்னவென்றால் பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் பிசாசை விரட்ட அந்நியபாஷையை பயன்படுத்தியதுதான்.

பொதுவாக பெந்தேகோஸ்தே சபையினர் கூறுவது என்ன? அந்நியபாஷை பிசாசுக்கு புரியாது. அதனால்தான் கர்த்தர் அந்நியபாஷையில் ஜெபிக்க சொன்னார் என்பதுதான். இப்போது ஜெபத்தில் அந்நியபாஷையில் பிசாசை இவர்கள் விரட்டினால் பிசாசுக்கு எப்படி அந்த பாஷை விளங்கும்?. இந்த சின்ன விஷயத்தைக்கூட பெந்தேகோஸ்தே சபையினர் சிந்திக்க முயற்சி எடுக்கவில்லையே?. இதில் இவர்களின் அந்நியபாஷையின் பொய் வெளிபடுகிறதல்லவா? எத்தனை துணிகரம்?மக்கள் இப்படிப்பட்ட அந்நியபாஷையை உண்மையென்று நம்புவது எத்தனை பெரிய அறியாமை. பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் அவர்கள் அந்நியபாஷையில் பிசாசை விரட்டும் வீரர் ஆகிவிட்டார். பெந்தேகோஸ்தே சபையினரை பார்த்து இந்த விஷயத்தில் பரிதாபப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.

நான் ஆவியானவர் இல்லை என்று கூறவில்லை. நான் ஆவியானவருக்கு விரோதி அல்ல. பொய்யாய் அந்நியபாஷை பேசும் யாரையும் நான் நம்புவதில்லை. அவர்கள் அந்நியபாஷை பொய் என்றால் அவர்கள் ஊழியமும் பொய். கூடியவரை அந்நியபாஷை பேசும் யாரையும் வாசகர்கள் நம்பாதீர்கள்.

சரியான ஆவியின் நிறைவு:

ஆவியானவரின் துணை இல்லையென்றால் நம்மால் பரிசுத்தமாக வாழமுடியாது. சாட்சியாகவும் வாழமுடியாது. அதனால்தான் அப் 2ம் அதிகாரத்தில் பரிசுத்தாவி உங்களிடம் வரும்போது பெலப்பட்டு,புறப்பட்டு சாட்சியாய் வாழ்வீர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று காரியங்களும் நடக்க பரிசுத்த ஆவியானவர்; நம்மோடு நமக்குள் இருந்தால்தான் முடியும். பரிசுத்த ஆவியானவரால் ஒவ்வொரு முறையும் நிரப்பப்படவேண்டும் என்று கேட்பது பெட்ரோல் பங்க்(கேஸ் ஸ்டேஷனில்) பெட்ரோல் பிடிப்பதுபோல் ஆகும். பரிசுத்த ஆவியானவரால் தினசரி நிரப்பப்படவேண்டும் என்றால் இரவு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வேண்டாமா? காலை நிரப்பி பகல் முழுவதும் செல்ல நாம் ஒரு வாகனம் அல்ல. இரவில் பாவம் வராதா? தவறு செய்யமாட்டோமா? அதனால்தான் ஆவியானவரால் எப்போதும் நிறைந்திருங்கள் என்று வேதம்கூறுகிறது. எப்போதும் நிறைந்திருங்கள் என்றால் எல்லா நேரமும் எல்லா காலமும் எல்லா நாட்களும் ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை முழுவதுமாக விட்டுக்கொடுப்பது ஆகும். அதற்கு ஆவியானவர் நமக்குள் இருந்தால் அல்லது வாழ்ந்தால்தானே முடியும். எப்போதும், என்றென்றுமாய் நம்மோடு ஆவியானவர்கூட இருக்கும் திட்டத்தில் தான் இயேசுகிறிஸ்து நமக்கு உதவி செய்ய வாக்கு அருளியிருக்கிறார். யோ 14:16ல்,எபே 4:30,எபே 1:13, யோ 14:23,24ஆகிய வசனங்களில் எல்லாம் இதைத்தான் போதிக்கிறது. இதற்காகத்தான் இம்மானுவேல் என்று பிதா அளித்த பெயருடன் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்தார். இந்த அடிப்படை தத்துவத்தை விளங்கிக்கொண்டு சரியானப்படி நீங்கள் மனந்திரும்பினால்போதும் ஆவியானவர் உள்ளே வந்துவிடுகிறார். எபே 1:13ல் கூறுகிறது. ஆவியானவர் தினசரி நிரப்பப்பட வேண்டியவர் அல்ல. தினசரி எல்லா நேரமும் நம்மோடு,நமக்குள் இருப்பவர் ஆகும்.

எப்போதும் இரவும் பகலும் நம்மோடு நமக்குள் நிறைந்து இருந்து வழிநடத்துபவர். இந்த அனுபவம் உங்களுக்கு இருந்தால் ஆவியானவரே வாரும் என்று கெஞ்சமாட்டீர்கள். இயேசுவே ஆவியானவரை அனுப்பும் என்று முட்டாள்தனமாக கேட்கமாட்டீர்கள் மேலே குறிப்பிட்ட ஆழமான அனுபவத்தை பெற வாஞ்சியுங்கள். உங்கள் கவலை பயம் எல்லாம் நீங்கும். வேதனை அவமானம் யாவற்றிலும் நீங்கள் ஸ்தோத்திர பாட்டை பாடமுடியும். அதோடு எல்லா நேரமும் சந்தோஷமாகவும் இருக்கமுடியும்.

பெந்தேகோஸ்தே சபைகளில் குறிப்பிடப்படும் ஆவியின் நிறைவு என்பது, சாத்தானால் தோற்றுவிக்கப்பட்ட மாயை ஆகும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.