கட்டுரைகள்

ஆராதனை என்றால் தேவனைத் துதித்தல் அல்லது மகிமைப் படுத்துதல் என்று பொருள்படும். தேவன் மோசேயை வனாந்திரத்தில் சந்தித்து, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்குக் அழைத்துவர, பார்வோனிடம் சென்று பேசச் சொன்னபொழுது, என் ஜனங்களை எனக்கு ஆராதனை செய்யும்படி அனுப்பிவிட வேண்டும் என்றே சொல்லச்சொன்னார். (யாத் 4:23). தேவன் தன்னுடைய பிள்ளைகளின் ஆராதனையில் மிகவும் பிரியப்படுகிறார். ஆனால் இன்றைக்கு கிறிஸ்தவ வட்டாரத்தில் ஆராதனை என்ற சொல் மிகவும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

தவறான ஆராதனை

ஆராதனை என்பதன் உண்மையான அர்த்தம் தெரியாததாலும், சரியான வேதஅறிவு இல்லாததாலும், இன்றைக்கு ஆராதனை என்ற சொல்லை மையமாக வைத்து பல கிறிஸ்தவ பாடல்கள் வந்துவிட்டன. அத்தகைய பாடல்கள் ஆராதனை என்ற சொல்லை திரும்பத்திரும்ப பாடவைத்து விசுவாசிகள் ஏதோ உண்மையாகவே தேவனை ஆராதிப்பது போன்ற மாயமான நம்பிக்கையை அவர்களில் ஏற்படுத்துகிறது. ஆராதனை நடத்துனர்களின் மையச் செய்தி இதுதான், நீங்கள் தேவனை ஆராதித்தால் உங்கள் நோய்கள் நீங்கும், ஆசீர்வாதம் கொட்டும், பணக் கஷ்டங்கள் தீரும், சாத்தானின் கட்டுகள் அகலும், வாழ்க்கையின் பிரச்சினைகள் தீரும் என்பதே! தேவனை நீங்கள் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க வேண்டும் என்ற வசனத்தைப் திரித்து, இசைக் கருவிகளை மிக வேகமாக சத்தமாக இசைத்து, வேகமான பாடல்களைப் பாடி, விசுவாசிகளை பரவச நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள். இதன் விளைவு திரைப்பட பாடல்கள் பாடுபவர்கள், திரைப்பட பாடல்களின் ராகத்தில் கிறிஸ்தவ பாடல்கள் பாடுபவர்கள் எல்லாம் ஆராதனை நடத்துனர்கள் ஆகிவிட்டார்கள்! திருச்சபை என்ன பரிதாபமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!

தவறான ஆராதனையின் அடுத்தநிலை, ஆவியானவர் இறங்கிவிட்டார், அந்நியபாஷை, அக்கினி அபிஷேகம் என்ற பெயரில் விசுவாசிகளை உளரவைத்து, கீழே விழத்தள்ளி வறுத்தெடுக்கிறார்கள். ஒரு மனிதன் விசுவாசியானபோது ஆவியானவர் நிரந்தரமாக அவனில் வந்து தங்குகிறார் (எபே 1:13) என்பதை திருச்சபை அறியும் நாள் எந்த நாளோ! இன்றைய பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷை வேதத்திற்கு புறம்பானது என்பதை திருச்சபை அறியும் நாள் எந்த நாளோ! விசுவாசிகள் கத்திக் கதறி அழுது கேட்கும் அக்கினி அபிஷேகமும் அக்கினி ஞானஸ்நானமும் (மத் 3:11) அவிசுவாசிகளுக்குதான் (நரகம்), விசுவாசிகளுக்கு அல்ல என்பதை திருச்சபையை அறியும் நாள் எந்த நாளோ!

 ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் என்ற பெயரில் புத்தகங்களை அச்சடித்து விற்று பெந்தேகோஸ்தே சபை போதகர்கள் நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள். இதுவும் கள்ள உபதேசம் மற்றும் கள்ள ஆராதனையே. தேவன் நாமாவளி ஸ்தோத்திர பலிகளை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. உங்கள் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான ஸ்தோத்திரங்களையே தேவன் ஏற்றுக்கொள்ளுகிறார்.

கள்ள உபதேசிகள்

பிரபல கள்ள உபதேசிகளான, சாது சுந்தர் செல்வராஜ், ஆலன் பால், ஜஸ்டின், ஆல்வின் தாமஸ், ஜான் ஜெபராஜ் மற்றும் ஆபிரகாம் சார்லஸ் போன்றவர்கள் ஆராதனை என்ற பெயரில் நடத்தும் களியாட்டுகளுக்கும் குழு நடனங்களுக்கும் நீங்கள் சென்றால் தேவக்கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடுமே தவிர எந்த ஆசீர்வாதமும் கிடைக்காது! காணிக்கை என்ற பெயரில் உங்கள் பணத்தை பிடுங்கி விட்டு வெறுங்கையாய் அனுப்பிவிடுவார்கள்! அதற்காக பாடல் பாடி தேவனை ஆராதிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஞானப் பாட்டுகளினாலும் கீர்த்தனைகளாலும் நாம் தேவனை ஆராதிக்க வேண்டும் என்பது வேதாகம உண்மையே! ஆனால் உங்கள் சாட்சியான வாழ்க்கை மூலம் தேவனை ஆராதிப்பது அதைவிட முக்கியம். உண்மையில் தேவனை ஆராதிப்பது என்பது தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழும் சாட்சியான வாழ்க்கையே. நான் மேலே குறிப்பிட்டுள்ள கள்ள உபதேசிகளும், பெயர் குறிப்பிடாத மற்ற கள்ள உபதேசிகளும் ஆராதனை நடத்துவதற்கான பிரதான காரணம் காணிக்கை! இரண்டாவது பிரதான காரணம் காணிக்கை! மூன்றாவது பிரதான காரணம் காணிக்கை! எச்சரிக்கையாக இருங்கள்! இவர்களுக்கு நீங்கள் காணிக்கை கொடுத்தால் ஆசீர்வாதம் வருமா வராதா என்பது அடுத்த கேள்வி. நீங்கள் கொடுத்த காணிக்கைக்கு தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்!

உண்மையான ஆராதனை

தேவனை உண்மையாகவே ஆராதித்தல் என்றால் என்ன என்பதை ரோமர் 12:1-2 வசனங்களில் நாம் தெளிவாக வாசிக்கிறோம். “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”. உங்கள் வாழ்க்கையே தேவனுக்கு உகந்த ஆராதனையாக மாறவேண்டும். எப்படி உங்கள் வாழ்க்கை மூலமாக தேவனை ஆராதிக்க முடியும்? தேவன் தன்னுடைய வேதபுத்தகத்தில் செல்லியிருக்கிற அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்தை செய்வதன் மூலமாக நாம் தேவனை ஆராதிக்க முடியும்.

தேவன் கேட்பதெல்லாம் நொறுங்குண்ட, நறுங்குண்ட ஆவிதான் (சங் 51:17). சங் 139: 24, 25 வசனங்களில், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும், வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்று சங்கீதக்காரன் தேவனை மன்றாடிக் கேட்டுக்கொண்டானே அதைப்போல நீங்களும் தேவனிடம் மன்றாடுங்கள். ஆராதனையின் உண்மையான நோக்கம் மனிதன் தன்னுடைய ஒன்றுமில்லாத நிலைமையை அறிந்து கொள்ளுதலே! நீங்கள் தேவனை ஆராதிப்பதால், அவர் தன்னுடைய நிலைமையிலிருந்து மேலும் உயர்த்தப்ப‌‍‌‌‌டுவதில்லை! நீங்கள் தேவனை ஆராதிக்காமல் இருப்பதால் அவர் தன்னுடைய நிலைமையை விட்டு தாழ்ந்து போவதுமில்லை! நீங்கள் தேவனை ஆராதித்து விட்டதால், அவர் உங்களுக்கு எதையாகிலும் கொடுக்கக் கடமைப்பட்டவரும் அல்ல! இன்றைக்கு பலருடைய எதிர்ப்பார்ப்புகள் என்ன என்றால், அவர்கள் தேவனை ஆராதித்துவிட்டதால், தேவன் ஏதோ அவர்களை ஆசீர்வதிக்கக் கடமைப்பட்டுள்ளவரைப்போல எண்ணிக்கொள்ளுகிறார்கள். உண்மையில் நீங்கள் தேவனை ஆராதிப்பதால் அவருக்கு எந்த லாபமும் இல்லை! மாறாக, அந்த உன்னதமான தேவனை ஆராதிக்கும் சிலாக்கியத்தை நீங்கள் பெற்றீர்கள் அவ்வளவே!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.