கட்டுரைகள்

எங்கோ கேட்ட பெயர்போல் இருக்கிறதா? இன்று பல கிறிஸ்தவர்களின் கைகளில் வேதப்புத்தகத்திற்கு இணையாக தவழ்ந்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று! மற்ற மதத்தவர்கள் பயன்படுத்தும் நாமாவளி புத்தகங்கள்போல, பேருந்துகளில் செல்லும்போதோ அல்லது பொது இடங்களில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கும்போதோ, இப்பொழுது கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நம்முடைய தேவன் துதிக்கப்படத்தக்கவர் தான். முழு துதிகன மகிமைக்குப் பாத்திரர் அவரே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனால் அந்த துதியானது, வேதப்புத்தகத்தைப்படிப்பதின் மூலமாக தேவனுடைய மகத்துவங்களை அறிந்து, நம்முடைய உள்ளத்திலிருந்து வருகிற அன்பு மற்றும் தேவன் நமக்கு கிருபையாக கொடுத்திருக்கும் இரட்சிப்பிற்காக நன்றி சொல்லும் துதியாக இருக்க வேண்டும். சங்கீதம் 9:1ல் சங்கீதக்காரன் சொல்வதுபோல, முழு இருதயத்தோடும் நாம் தேவனைத் துதிக்க வேண்டும். இந்த உண்மையான துதியையே தேவன் விரும்புவாரே தவிர, இதுபோன்ற நாமாவளிப் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கும் துதியை தேவன் நிச்சயமாக விரும்பமாட்டார்.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் (பிலி 4:6). இந்த வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டு கள்ள தீர்க்கதரிசிகள் அர்த்தமில்லாமல் எப்பொழுதும் ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே இருங்கள் என்று போதிக்கிறார்கள். 'ஸ்தோத்திரம்' என்று நாம் தமிழில் மொழிபெயர்த்துள்ள வார்த்தைக்கு 'நன்றி' என்று படும். எங்கெல்லாம் தமிழ் வேதாகமத்தில் 'ஸ்தோத்திரம்' என்ற வார்த்தை வருகிறதோ அங்கெல்லாம் 'Thanks' என்ற வார்த்தையை ஆங்கில வேதாகமத்தில் காணலாம். இப்பொழுது யோசித்துப்பாருங்கள் யாராவது எப்பொழுதும் அர்த்தமில்லாமல் நன்றி, நன்றி, நன்றி என்று சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? இப்படிதான் கள்ள ஊழியர்கள் அறியாமையில் உள்ள விசுவாசிகளை அல்லது புதிய விசுவாசிகளை கோமாளிகளாக்குகிறார்கள்! உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்திருக்கும் அதிசயங்களை, அற்புதங்களை எண்ணி நன்றி சொல்லுங்கள், ஸ்தோதரியுங்கள் அதில் தவறில்லை... ஆனால் இதுபோன்ற நாமாவளி புத்தகங்களை பயன்படுத்தாதீர்கள்.

தேவனைத் துதித்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கொட்டும், பாடுகள் பிரச்சனைகள் பறந்தோடும் போன்ற தவறான உபதேசங்களின் விளைவே இப்புத்தகங்களின் வருகைக்குக் காரணம். கிறிஸ்தவர்கள் இந்தப் புத்தகங்களிப் படிப்பதைப் பார்க்கும் மற்றவர்கள், ஒகோ! கிறிஸ்தவர்களுக்கும் இதுபோன்ற நாமாவளிப் புத்தகங்கள் இருக்கின்றன போலும்! வேதத்தைத் தவிர நம்மைப்போல இது போன்றப் புத்தகங்களையும் அவர்களும் படிக்கவேண்டும் போல என்று அவர்கள் எண்ணத் தோன்றும்! ரோமர் 12:1ல் உண்மையான ஆராதனை என்றால் என்ன என்பதை பவுல் சுட்டிக்காட்டுகிறார். “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ஆகவே நீங்கள் தேவனுக்கு உண்மையாகவே ஆராதனை செய்ய விரும்பினால், உங்கள் வாழ்க்கை சாட்சியுள்ளதாக மாறட்டும், அனுதின வாழ்க்கையில் பரிசுத்தம் மலரட்டும்! தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளூம்; என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங் 139: 23,24) என்று சங்கீதக்காரன் தேவனை மன்றாடிக் கேட்டுக்கொண்டானே, அது போல நீங்களும் ஜெபத்தில் மன்றாடுங்கள். பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்” (2கொரி 13:5) என்று கொரிந்தியர்களை எச்சரித்தாரே, அதைப்போல உங்களையும் சோதித்துப்பாருங்கள்.

தேவன் தவறு என்று சுட்டிக்காடுகிற காரியங்களை விட்டு மனந்திரும்புங்கள். தேவனிடத்தில் நீங்கள் ஒப்புரவாகும்பொழுது தேவனுடைய ஆசீர்வாதம் உங்களைத் தேடிவரும்! இதுபோன்ற நாமாவளிப் புத்தங்களைப்படித்து உங்களுக்கு நீங்களே சாபத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.