வேதாகம வரலாறுகள்

எரேமியாவின் புலம்பல்

தலைப்பு: 

பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு (செப்டுவாஜிண்ட்) லத்தீன் வுல்கேட்டில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டபோது “புலம்பல்” என்ற பெயர் வழங்கப்பட்டது; இது “சத்தமிட்டு கதறும்” என்ற கருத்தை தருகிறது. எபிரேய ஆச்சரியம் “ஏக்கா” என்ற வார்த்தை ”எப்படி” என்பது திகைப்பூட்டும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வார்த்தை 1:1, 2:1, 4:1 வசனங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளதிலிருந்து எபிரேய புத்தகத்தின் தலைப்பைக் கொடுக்கிறது. எப்படியாகிலும், ஆரம்ப நாட்களில் ரபீமார் (யூத குருமார்கள்) இந்த புத்தகத்தை ”கதறி அழும் புத்தகம்” அல்லது புலம்பல் என அழைக்க ஆரம்பித்துவிட்டனர் (எரேமியா 7:29). பழையஏற்பாடு முழுவதையும் நாம் பார்க்கும் போது, வேறு எந்தவொரு புத்தகத்திலும் ’புலம்பல்’ மட்டுமே உள்ளடக்கம் என நாம் காண்பதில்லை. ஒருகாலத்தில் பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான  நகரமாக இருந்த எருசலேமின் அடக்க ஆராதனையின் போது பாடியதாக இருக்கிற துயரம் நிறைந்த புலம்பல் பாட்டு ஒன்றை நாம் வேதாகமத்தில் வேறு எங்கும் காணமுடியாது (2:15). அந்த வீழ்ச்சியின் நினைவுகளை இந்த புத்தகம் உயிரோட்டத்துடன் அளித்து, விசுவாசிகள் துயரமான வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுத் தருகிறது.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

புலம்பல் புத்தகத்தில் ஆசிரியரின் பெயர் இந்த புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை, ஆனால், இதில் உட்பக்க மற்றும் வரலாற்று குறிப்புகள், எரேமியா தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் எனச் சுட்டிக்காட்டுகின்றன. கிரேக்க LXX மொழிபெயர்ப்பு (புலம்பல் 1:1) இவ்வாறாக அறிமுகம் செய்கிறது ”ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே!” எரேமியா உட்கார்ந்து புலம்பினான் (3:48,49) “கதறி அழுது”  சொன்னான். யூதா புத்திரருக்காக நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; என்று எரேமியாவிடம் தேவன் சொன்னார் (எரேமியா 7:29), மேலும் எரேமியா யோசியாவிற்காகவும் புலம்பல் பாடினான் (2நாளா 35:25).

கி.மு.586வில் எருசலேமின் வீழ்ச்சியின் போது அல்லது அதனைத் தொடர்ந்து எரேமியா புலம்பல்களை தன் கண்கண்ட சாட்சியாக எழுதினார் (1:13-15, 2:6,9; 4:1-12). இதனை எழுதுவதற்கு ஒருவேளை பாருக் எரேமியாவிற்கு உதவி செய்திருக்கலாம் (எரேமியா.36:4;45:1). ஜூலை மாதத்தின் மைய்ய நாட்களில் பட்டணம் வீழ்ச்சி அடைந்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மைய்ய நாட்களில் தேவாலயம் எரிக்கப்பட்டிருக்கலாம். எரேமியா, அலங்கம், கோபுரங்கள், வீடுகள், அரமணைகள் மற்றும் ஆலயங்கள் இடிக்கப்படுவதையும் கண்டான்; அவனது நினைவில் இச்சம்பவங்கள் வேதனை தருவதாக அப்படியே பதிந்திருக்கும் வேளையில், அவர் எகிப்துக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட கி.மு. 583-க்கு (எரேமியா 43:1-7) முன் எழுதினார். புலம்பலில் எரேமியா எழுதின வார்த்தைகள் அவர் எழுதிய பெரிய தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு இணையானதாகவே இருக்கின்றது (1:2-ஐ எரே.30:14 உடன்; 14:1-15-ஐ எரே.8:21 உடன்; 1:6 மற்றும் 2:11-ஐ எரே  9:1,18 உடன்; 2:22-ஐ எரே.6:25; 4:21-ஐ எரே. 49:12 உடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பிண்ணனி மற்றும் அமைப்பு

800 வருடங்களுக்கு முன்பதாகவே எருசலேமின் அழிவைக் குறித்த தீர்க்கதரிசன விதை யோசுவாவின் மூலம் விதைக்கப்பட்டது (யோசுவா 23:15,16). 40 வருடம் எரேமியா வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்து தீர்க்கதரிசனமாக உரைத்துவரும் வேளையில், ஜனங்கள் அழிவைக் குறித்து இவர் பிரசங்கிக்கிறார் என (கி.மு. 645-605) தூஷித்தனர். விசுவாசிக்காத ஜனங்கள் மீது நியாயத்தீர்ப்பு நெபுகாத்நேச்சார் மற்றும் பாபிலோனிய சேனையின் மூலம் வந்தபோது, பிடிவாதமான ஜனங்கள் அதேவேளையில் துயரப்படும் ஜனங்களைக் கண்டு மிகுந்த துக்கத்துடனும் மனவுருக்கத்துடனும் எரேமியா பதிலளித்துக் கொண்டே வந்தார். புலம்பல் புத்தகம் தங்கள் பாவத்தினின்று மனம் திரும்பாததினால் தேவனுடைய நியாயத் தீர்ப்பிற்கு உட்பட்ட ஜனங்களின் வேதனையை விவரிக்கும் எரேமியாவின் புத்தகத்துடன் மிகநெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. எரேமியாவின் பெயரைத் தாங்கியுள்ள புத்தகத்தில் அதிகாரம் 1-29ல் பேரிடர் குறித்து முன் கூட்டியே எரேமியா கூறியிருக்கிறார். எருசலேமின் அழிவினால் உண்டான கசப்பான துயரங்கள் மற்றும் மனவேதனைகளுக்கு முக்கியத்துவம் தந்து விரிவாக புலம்பல் புத்தகத்தில் எழுதியுள்ளார். (சங்கீதம் 46:4,5)  எருசலேமின் அழிவு மிகவும் மோசமானதாக இருந்ததால், பழைய ஏற்பாட்டு புத்தகத்தின், 4 அதிகாரங்களில், 2ராஜா. 25; எரேமியா 39:1-11,52; மற்றும் 2நாளா.36:11-21 தனிப்பட்ட கருத்தாக குறித்து தரப்பட்டுள்ளது. 

யூதர்களின் இரண்டாவது புனிதநூல் வரிசையில், இதில் வரும் 154 வசனங்கள் அனைத்தும் வேதவாக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. ”மெகிலோத்” அல்லது ’5 தோல்சுருள்கள்” என்று அழைக்கப்படும் பழைய ஏற்பாட்டு புத்தகங்களான ரூத், எஸ்தர், சாலொமோனின் உன்னதப்பாட்டு மற்றும் பிரசங்கியுடன் சேர்ந்த இந்த புலம்பல் புத்தகம் யூதர்களின் ஆலயங்களில் விசேஷித்த நாட்களில் வாசிக்கப்பட்டது. ஆப் மாதத்தின் ஒன்பதாவது நாள் - (ஜூலை/ ஆகஸ்ட் மாதம்) நெபுகாத்நேச்சார் ராஜா ஏற்படுத்திய எருசலேமின் பேரழிவின் நாளில் இப்புத்தகத்தை எடுத்து வாசிப்பார்கள். சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், ரோம சாராஜ்யத்தால் ஏரோதின் ஆலயம் இடிக்கப்பட்டதும் இந்த நாளிலே எனக் குறிக்கப்பட்டது.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

யூதாவின் பாவத்திற்குகான தேவ நியாயத்தீர்ப்பே புலம்பல் புத்தகத்தின் முக்கிய கவனம். இந்த கருப்பொருளை புத்தகம் முழுவதும் காணலாம் ( 1:5, 8,18,20; 3:42; 4:6,13,22; 5:16). தேவனுடைய மனதுருக்கத்தில் வைக்கப்படும் நம்பிக்கை இரண்டாவது கருப்பொருளாக இந்த புத்தகத்தில் மேலெழும்பி வருகிறது (3:22-24, 31-33; சங்கீதம் 30:3-5). தேசத்திற்கு நேர்ந்த அவமானத்தைக் குறித்து இடைபடுவதாக இருந்தாலும், இப்புத்தகம் தேவனின் பெரிதான வாக்குறுதியை காக்கும் பண்பினை (3:22-25) நோக்கி நம்மை வழிநடத்துகிறது. எரேமியா புலம்பலில் இருந்து ஆறுதலுக்கு (5:19-22) மாறுவதில்  இருந்து, இறுதியில் கிருபையுடன் இந்த புத்தகம் முடிவடைகிறது என்பதை நாம் அறிந்துக்கொள்கிறோம் (5:19-22).

தேவனின் ராஜரீக நியாயத்தீர்ப்பு இப்புத்தகத்தின் ஊடாக கடந்து செல்லும் மூன்றாவது கருப்பொருள். யூதாவின் பாவத்திநிமித்தம் தேவன் கொண்ட கோபத்தினால் அவர் ஒரு பேரழிவை கொண்டுவந்தார். தேவகோபாக்கினைக்கு ஒரு கருவியாக பாபிலோன் தெரிந்தெடுக்கப்பட்டது (1:5,12,15; 2:1,17; 3:37,38; எரேமியா50:23). எரேமியா - 150 தடவைக்கும் மேலாக பாபிலோன் என்ற வார்த்தையை, எரேமியா 20:4 லிருந்து 52:34 வரையுள்ள வசனங்களில் எடுத்துப் பயன்படுத்துகிறார். ஆனால் புலம்பல் புத்தகத்தில் ஒருமுறைகூட வெளிப்படையாக பாபிலோன் என்றோ அதன் ராஜா நெபுகாத்நேச்சார் குறித்தோ குறிப்பிடவில்லை. யூதாவின் பாவங்களுக்காக அவர்களுடன் கர்த்தர் இடைபட்டார் என அவரைக் குறித்து மட்டுமே எடுத்துக்காட்டுகிறார்.

நான்காவதாக, இஸ்ரவேலரின் இரட்சிப்பு மற்றும் தேவனுடைய வாக்குதத்தங்கள் நிறைவேறுவதற்கான எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல்  அற்றுப்போகும் அளவிற்கு நியாயத்தீர்ப்பு பரந்து விரிந்து காணப்பட்டபடியால், இந்த புத்தகத்தின் அதிகப்படியான இடங்களில் ஜெபம் நிறைந்திருக்கிறது. 1) 1:11, பாவங்களை அறிக்கையிடும் புலம்பலாக இருக்கிறது (வசனம் 18லும் காணலாம்). 2) 3:43-54 எரேமியா 7:16-ல் ”ஜெபம் உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கு” இருந்ததால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிப் பேசுகிறது. 3) 3:55-59 வசனங்களில் எரேமியா நிவாரணத்திற்காக கதறி புலம்புவதைப் பார்க்கிறோம், அல்லது 3:60-66-ஆம் வசனங்களில் எதிரிகளின் சரிக்கட்டுதலை கோருகிறார் (எரேமியா 50,51-ஆம் அதிகராங்கள் அதற்கு உத்திரவாதம் அளிப்பதைக் காண்கிறோம்). 4) 5:1-22 கிருபையினை மீட்டெடுக்க வேண்டி பரலோகத்திற்கு நேராக வேண்டுதல் ஏறெடுக்கப்படுகிறது. எரேமியா:30-33 அதிகாரங்களில் உள்ள வசனங்கள்  தேவனின் வாக்குறுதியைக் காக்கும் தன்மையில் நம்பிக்கை கொண்டிருப்பதன் அடிப்படையில் இதற்குரிய நிச்சயத்தைத் தருகின்றன.(3:23).

ஐந்தாவது கருப்பொருள் கிறிஸ்துவுடன் தொடர்புள்ளது. எரேமியா வடித்த கண்ணீர்கள் (3:48,49), அதே எருசலேம் நகரத்திற்காக இயேசு வடித்த கண்ணீர். ”அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது” (மத்.23:37-39; லூக்கா 19:41-44) இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். தேவன் நியாயாதிபதி யாகவும் அதனை நிறைவேற்றுபவராக இருந்த போதிலும் இந்த பேரழிவை காண்பது அவருக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக இருந்தது. அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் (தேவன்) நெருக்கப்பட்டார் என்று நாம் ஏசாயா 63:9-ல் காணும் கூற்று இந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஒரு நாளில் தேவன் தாமே நம் கண்ணீர் யாவையும் துடைப்பார் (ஏசாயா:25:8; வெளி.7:17, 21:4) அந்நாளில் பாவம் என்பதே இல்லாமல் போய்விடும்.  ஆறாவது, கருப்பொருள் இந்த புத்தகத்தை வாசிக்கும் யாவருக்கும் மறைமுகமான எச்சரிக்கை: தேவன் தமது அருமையான ஜனங்களை (உபா.32:10) நியாயம் தீர்க்க தயங்கவில்லை என்றால், அவருடைய வார்த்தையை நிராகரிக்கின்ற தேசங்களைக் குறித்து அவர் என்ன செய்வார்?

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

சில விவரங்கள் ஆரம்பத்தில் கடினமானதாக தோன்றுகின்றன. அவைகளில் சில:   1) மற்ற பாவிகள் நியாயத்தீர்க்கப்படும்படி சாபமிட்டு வேண்டுதல் செய்தல் ஏன்? (1:21,22; 3:64-66); 2) நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப் போட்டார் (3:8) என்பதைக் காணும்போது - தேவன் பதில் அளிக்க மறுப்பதற்கு தரும் காரணம் என்ன? மற்றும்  3) இவ்வளவு கடினமான நியாயத்தீர்ப்பு தரப்பட்டதன் அவசியம் என்ன (1:1,14; 3:8).

சுருக்கம்

முதல் 2 அதிகாரங்களின் வசனங்கள் எபிரேய மொழியின் 22 எழுத்துக்களின் ஏறுமுக வரிசை முதல் எழுத்தாக அமைய எழுதப்பட்டுள்ளன. அதிகாரங்கள் 1,2,4-ல் நாம் 22 எழுத்துக்களும் முதல் எழுத்தாக அமைய எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரம் 3ல்- 22 எழுத்தில் ஒவ்வொன்றும் 3 வரிகளை சேர்த்து வரும் மாதிரியைப் பின்பற்றுகிறது. இதனால், 66 வரிகள் காணப்படுகிறது. நாம் சங்கீதம் 119-ல் காண்பது போல, மனனம் செய்ய வசதியாக, 22 எபிரேய வார்த்தைகளும் முதல் வார்த்தையாக 8 வசனங்களின் அணிவரிசையாக அமைக்கப்பட்டுள்ளது. 

கீழ்க்காணும் மிகச்சிறந்த அறிக்கையை நாம் புலம்பல் 3:22-24-ல் காண்கிறோம். 

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்; இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்புத்தகம் ஏறுவதும் இறங்குவதுமாக எழுதப்பட்டுள்ளது.

”உமது உண்மை பெரிதாயிருக்கிறது” என்பதே இந்த புத்தகம் எழுதப்பட்டதன் மைய்ய கருத்து.

I. முதல் புலம்பல்: எருசலேம் பாழ்க்கடிக்கப்படுதல் (1:1-22)
அ. எரேமியாவின் துக்கம் (1:1-11)
ஆ. எரேமியாவின் துக்கம் (1:12-22)
 
II. இரண்டாவது புலம்பல்: கர்த்தரின் கோபத்திற்கு விளக்கம் தருதல் (2:1-22)
அ. கர்த்தருடைய பார்வையில் இருந்து (2:1-10)
ஆ. மனுஷ பார்வையில் இருந்து (2:11-19)
இ. எரேமியாவின் ஜெபம் (2:20-22)
 
III. மூன்றாவது புலம்பல்: 
எரேமியா தன் துக்கத்தினை வெளிப்படுத்தினது  (3:1–66)
அ. எரேமியாவின் துயரம் (3:1-20)
ஆ. எரேமியாவின் நம்பிக்கை (3:21-38)
இ. எரேமியாவின் ஆலோசனை / ஜெபம் (47:1-7)
 
IV. நான்காவது புலம்பல்: தேவனுடைய கோபாக்கினைக்கு விளக்கம் (4:1-22)
அ. எருசலேமுக்காக (4:1-20)
ஆ. ஏதோமிற்காக (4:21,22)
 
V. ஐந்தாவது புலம்பல் :மீந்திருந்தோரின் விண்ணப்பங்கள் (5:1-22)
அ. கர்த்தரால் நினைவுகூரப்பட இருக்கும் (5: 1-18)
ஆ. கர்த்தரால் முன்நிலைமையில் வைக்கப்படுதல் (4:19-22)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.