வேதாகம வரலாறுகள்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

தலைப்பு: 

இத்தீர்க்கதரிசன புத்தகத்தினை எழுதின ஆசிரியர் “எரேமியாவினுடைய வசனங்கள்” (1:1) என்று ஆரம்பித்த வரிகளில் இருந்து இந்த புத்தகம் தன் தலைப்பைப் பெறுகிறது. எரேமியா ஏனைய தீர்க்கதரிசிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதாவது அவருடைய ஊழியம் பற்றி, அவர் பேசுவதைக் கேட்ட மக்களின் பிரதிபலிப்புகள், போதனைகள் மற்றும் அவரது தனிப்பட்ட உணர்வுகள் என தன்னை குறித்து அதிகமாக இப்புத்தகத்தில் விவரிக்கிறார். இவரது பெயர், அஸ்திபாரத்தைப் போடுகிறார் என்று அர்த்தப்படுத்தும் “யேகோவா போடுகிறார்” எனப் பொருள் தருகிறது அல்லது யேகோவா ஸ்திரப்படுத்துகிறார், நியமிக்கிறார் அல்லது அனுப்புகிறார் என அர்த்தம் தருகிறது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

எரேமியா, ஆசாரியராகவும் தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்தவர், இல்க்கியா என்னும் பெயருடைய ஆசாரியரின் குமாரன் (2ராஜா. 22:8-ல் நாம் காணும் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்த பிரதான ஆசாரியர் அல்ல இவர்). எருசலேமுக்கு ஏறக்குறைய 3 கி.மீ தூரத்தில், வடகிழக்கு பகுதியில் உள்ள ஆனதோத், இன்றைய நாட்களில் அனட்டா என அழைக்கப்படும் சிறிய ஊரிலிருந்து இருந்து (1:1), பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவர். யூதருக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை “இவ்விடத்தில் பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்” என்ற வார்த்தைக்கு இணங்க, எரேமியா விவாகம் செய்யாதிருந்தார் (16:1-4). அவருக்கு ஊழியத்தில் பாருக்கு என்னும் ஒரு வேதபாரகர் உதவி செய்து வந்தார். கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான் (36:4,32; 45:1). எரேமியா ”கதறிஅழும் தீர்க்கதரிசி” என்றும் அறியப்பட்டிருந்தார் (9:1; 13:17; 14:17) படையெடுத்து வந்த பாபிலோனியருக்கு அவர் நியாயத்தீர்ப்பு உண்டு என முன்னமே அறிவித்தபடியால் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார். அவர் அச்சுறுத்தப்பட்டார், அவரை கொலைசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது, கிடங்கில் அடைக்கப்பட்டார், யோயாக்கீமில் இருந்து தப்பிஓடும்படி துரத்த்தப்பட்டார், கள்ள தீர்க்கதரிசியால் வெளிப்படையாக அவமானப்படுத்தப்பட்டார் மேலும் ஒருமுறை குழியில் தள்ளப்பட்டார்.

எரேமியா யூதாவில் இருந்த தனது சொந்த ஜனங்களுக்கு நேராக ஏறெடுத்த ஊழியத்தையே பெரும்பாலும் செய்து வந்தார்; ஆனாலும், அது சில வேளைகளில் ஏனைய தேசங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அவர் தேவனின் நியாயத் தீர்ப்பாக படையெடுப்பவர் வந்து சேர்வதற்கு முன் மனம்திரும்பும்படி தன் சொந்த யூதா தேசத்தாரிடம் முறையிட்டுவந்தார் (7,26). யூதா தேசம் மனம்திரும்ப மறுத்த போது, பாபிலோனியர்கள் படையெடுப்பு உறுதியானவுடன், பாபிலோனியர் கைகளில் முழுவதும் அழிந்து போகாதபடிக்கு, தன் தேசத்தாரிடம் பாபிலோனியர்களை எதிர்க்க வேண்டாம் என்று அறுவுறுத்தினார் (27ஆம் அதிகாரம்). மற்ற தேசங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து, தன் ஆலோசனைக்குச் செவிகொடுக்கும்படிக்கும், பாபிலோனியருக்கு அடங்கிச் செல்லும்படிக்கும் கேட்டுக்கொண்டார் (27ஆம் அதிகாரம்). மேலும் மற்ற தேசங்கள் மீது வரவிருக்கும் தேவனுடைய நியாயத் தீர்ப்புகளை முன் அறிவித்தார் (25:12-38; 46-51 அதிகாரங்கள்).

எரேமியா ஊழியத்தின் காலகட்டம் யூத ராஜா யோசியாவின் 13ஆம் வருடத்தில் இருந்து (1:2; கி.மு. 627) பாபிலோனியர் கரங்களில் எருசலேம் வீழ்ந்த கி.மு. 586 வரையிலான (எரேமியா 39, 40, 52) - ஐந்து தலைமுறைகள் வரைச் செல்கிறது. கி.மு.586-விற்குப் பிறகு, யூதாவில் மீந்தவர்கள் எகிப்துக்கு (எரேமியா 43,44) தப்பிப்போனபோது அவர்களுடன் எரேமியாவும் தப்பி ஓடிப்போக வேண்டி நிர்ப்பந்தமானது. பாபிலோனியர் எகிப்தின் மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, எரேமியா பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டுச் சென்றார் என ராபானிக்கேயரின் குறிப்பு ஒன்று உரிமை கோருகிறது. கி.மு.597வில் யூதாவின் ராஜா யோயாக்கீம் பாபிலோனியாவில் சிறைப்பட்டுச் சென்றவர், தனது கடைசிகாலங்களில், அதாவது கி.மு.561-ல் பாபிலோனில் இருந்தபோது அவருக்கு சில சுதந்திரங்கள் கொடுக்கப்பட்டவராக (52:31-34) எரேமியா இப்புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களை எழுதியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எரேமியா அந்நாட்களிலும் உயிரோடு இருந்தார், அப்பொழுது அவருடைய வயது 85 லிருந்து 90 வருடங்களுக்குள் இருந்திருக்கலாம்.

பிண்ணனி மற்றும் அமைப்பு

எரேமியா காலத்தின் பிண்ணனி விபரங்களை 2ராஜா:22-25 மற்றும் 2நாளா:34-36 அதிகாரங்களில் வாசிக்கலாம். எரேமியா செய்திகளின் சித்திரத்தில் இப்படங்களைப் பார்க்கிறோம் 1) ஜனங்களின் பாவம்; 2) படையெடுத்து வருபவரை தேவன் அனுப்புவார்; 3) முற்றுகையின் கொடுமை; மற்றும் 4) நாசத்தினால் உண்டான பேரழிவுகள். எரேமியாவின் விக்கிரக ஆராதனை மற்றும் ஏனைய பாவங்களினால் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு குறித்த செய்தி 40 வருட கால இடைவெளிக்குள் பிரசிங்கிக்கப்பட்டது (கி.மு.627-586) யூதாவின் கடைசி 5 ராஜாக்களான: 1) யோசியா, கி.மு. 640-609, 2) யோவாகாஸ், கி.மு. 609, 3) யோயாக்கீம், கி.மு. 609-508. 4) யோயாக்கீன், கி.மு.598 -597, மற்றும் 5) சிதேக்கியா கி.மு. 597-586 காலங்களில் எரேமியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறினது. 

யூதா தேசத்தின் ஆவிக்குரிய நிலை கொடிய விக்கிர ஆராதனகளால் நிறைந்திருந்தது (அதிகாரம்2) எசேக்கியா ராஜாவின் தகப்பன் ஆகாஸ் ராஜா அதாவது எரேமியாவின் காலத்திற்கு முன் ஏசாயாவின் காலங்களில், எருசலேமுக்கு வெளியில் இருந்த இன்னோம் பள்ளாத்தாக்கில் மோளேகுக்கு பிள்ளைகளை பலியிடும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தான் (கி.மு. 735-715). எசேக்கியா சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தான், பலிபீடங்களை அகற்றிப் போட்டான் (ஏசாயா 36:7); ஆனால், அவன் குமாரன் மனாசே வளர்ப்பு பிள்ளைகளை பலியிடுதலை விக்கிரக ஆராதனையுடன் சேர்த்து, இவ்வித அருவருப்புகளை தொடர்ந்து செய்துவந்தான் இது எரேமியாவின் காலங்களில் நடந்தது (7:31; 19:5; 32:35). அனேகர் ”வானராக்கினி” என்னும் அந்நிய தேவர்களை நமஸ்கரித்தார்கள் (7:18; 44:19). யோசியாவின் சீர்திருத்தங்கள் கி.மு.622-வில் உச்சிக்குச் சென்றது, அதில் வெளியரங்கமான தவறான ஆசரிப்புகள் ஒழிக்கப்பட்டது என்றாலும், பாவம் என்பது புற்றைப்போல் ஆழமாக பதிந்து இருந்தது, சிறிய கால இடைவெளி எழுப்புதலுக்குப்பின் மீண்டும் பாவம் தலைதூக்கியது. தேசத்தில் உண்மையின்மை, நேர்மையின்மை, விபச்சாரம், நீதியின்மை, உதவியற்றவர்களுக்கு விரோதமாக இழைக்கப்படும் கொடுமை மற்றும் அவதூறு இயல்பான ஒன்றாக காணப்பட்டது.

எரேமியாவின் காலத்தில் அரசியல் ரீதியாக முக்கியமான சம்பவங்கள் சில நிகழ்ந்தன.  அசீரியர்களின் அதிகாரம் படிப்படியாக குறைந்து, அஸ்னாப்பார் கி.மு.626-வில் மரித்தார். அசீரியா தன் பலத்தில் குறைந்து கொண்டே வந்து, இறுதியில் வெல்லவே முடியாத நினிவே, நிர்மூலமானது (நாகூம் புத்தகமும் இதனை உறுதிசெய்கிறது). புதிய பாபிலோனிய பேரரசின் ராஜா நாபோபொலொசர் (கி.மு.626-605) அசீரியர்களின் மீது தொடுத்த யுத்தங்கள் (கி.மு.612), எகிப்தின் மீது (கி.மு.609-605) மற்றும் (தானியேல் 1; கி.மு.605-ல் நாம் காண்பது போல; 2ராஜா. 24:10-16-ல் காண்பது போல கி.மு. 597-ல்; எரேமியா 39, 40, 52ல் கி.மு.586-ல் காண்பது போல இஸ்ரவேல் மீது 3 காலகட்டங்களில் போர் தொடுத்து, பல வெற்றிகளைக் கண்டு ராணுவத்தில் தன் அதீத ஆதிக்கத்தைச் செலுத்தினார்.

யூதா நியாயம் தீர்க்கப்படும் என்று முன்னமே யோவேல் மற்றும் மீகா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தாலும், யோசியாவின் காலத்தில் இருந்த தலைசிறந்த தீர்க்கதரிசிகள் – எரேமியா, ஆபகூக் மற்றும் செப்பனியா; பின்நாட்களில் எரேமியா வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் எசேக்கியேல், தானியேல் தீர்க்கதரிசன ஊழியத்தில் முக்கிய பங்கினை வகித்தனர்.  

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

எரேமியா புத்தகத்தின் முக்கிய கருப்பொருள் யூதா தேசத்தின் மீது உண்டாயிருக்கும் நியாயத்தீர்ப்பு (அதிகாரங்கள் 1-29) மற்றும் மேசியாவின் ராஜ்ஜியத்தில் அதன் மறுசீரமைப்பு (23:3-8;30-33) என்பதாகும். ஏசாயா தன் புத்தகத்தில் அதிகமான அதிகாரங்களை இஸ்ரவேல் தேசத்தின் எதிர்கால மகிமைக்கென்று (ஏசாயா 40-66) ஒதுக்கி இருந்த போது, எரேமியா இந்த தலைப்பிற்கு மிக குறைந்த அளவே இடம் தந்திருக்கிறார். தேவனுடைய நியாயதீர்ப்பு அண்மையில் நிகழப் போகின்ற ஒன்றாக இருந்தபடியால், அவர் நிகழ்கால பிரச்சினைகளில் கவனம் அதிகம் செலுத்தி, தேசத்தை அழிவில் இருந்து மீட்டு, தேசத்தை திருப்பிக்கொண்டு வருவதில் அதிகம் கவனம் செலுத்தினார். 

தேசத்தின் ஜனங்கள் மனம்திரும்பி வரும்போது மட்டுமே தேவன் அவர்களை பாதுகாத்து ஆசீர்வதிப்பார் என்பது இரண்டாவது கருப்பொருள். இது அடிக்கடி வலியுறுத்தப்படும் கருப்பொருளாக இருந்தாலும்,  குயவன் வீட்டில் வைத்து மிக அழகாக சித்தரிகத்துக் காட்டப்பட்டுள்ளது (18:1-11). அடுத்து எரேமியா தேவனுடைய செய்தியை அதிகாரப்பூர்வமாகச் சொல்லியது மற்றும் அவர் தேவனுடைய சித்தம் செய்வதில் கொண்டிருந்த உறுதி போன்ற எரேமியாவின் வாழ்க்கையை குறித்து இப்புத்தகத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது (1:5-19; 15:19-21). ஏனைய கருப்பொருட்கள் 1) தேவன் இஸ்ரவேலுக்காக கொண்டிருந்த பிரியம், - நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (2:1-3) போன்ற வார்த்தைகளில் வெளிப்படுகிறது. 2) எரேமியா ”ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்குமென கதறி அழுகிறார் (கதறும் தீர்க்கதரிசி எனப்பெயர் பெற்றார் (9:1 14:17); 3) தேவன் தனது அன்பினை, கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன் என்னும் வார்த்தைகளினால் வெளிப்படுத்துகிறார் (13:11). 4) எரேமியாவின் சோதனைகளினால் விளைந்த பாடுகள், எரேமியாவின் பாடுகளின் வேளையில் தேவன் அவருக்கு போதுமானவராக இருந்தார் என்பது (11:18-23; 20:1-18). 5) உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என எரேமியா சொல்வதில் இருந்து தேவனுடைய வார்த்தை ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. 6) உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை (அதிகாரம் 32, விசேஷமாக வசனம் 17:27) என்ற வசனத்தின் மூலம் தேவன் இஸ்ரவேலை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்ப்பதில் விசுவாசத்தின் பங்கு என்ன என்பதை அறிகிறோம். 7) தேசத்தில் தேவனுடைய சித்தம் தேவனுடைய செயல்பாட்டுடன் ஒருங்கிணைப்பட ஜெபம்செய்தல் (33:3,6-18).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

எரேமியா புத்தகத்தில் கீழ்க்காண்பது போன்று அனேக கேள்விகள் எழுகிறது: 

1) மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது (15:1) என்றும் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம் (7:16) என்றும் யூத ஜனங்களுக்காக ஏறெடுக்கப்படும் ஜெபத்தை தேவன் விலக்கி வைப்பதற்கு ஒருவர் எப்படி விளக்கம் தரமுடியும்? 2) எரேமியா பல மைல் தூரம் உண்மையில் ஐப்பிராத்து நதி மட்டும் நடந்து சென்றாரா? அல்லது அவரது அரையிலிருந்த கச்சையை அருகிலேயே புதைத்து வைத்தாரா? (13:4-7) 3) அவருடைய் பிறந்த நாளை அறிவித்த மனுஷருக்கு விரோதமாக எரேமியா இவ்வளவு கடுமையான வார்த்தைகளை எப்படி கூற முடியும் (20:14-18)? 4) கோனியாவின் வம்சத்தை சபித்த சாபத்திற்கும் கிறிஸ்துவிற்கும் தொடர்பு உண்டா? (22:30) 5) அவர்களின் பண்டைய கால தேசத்திற்கு இஸ்ரவேலர் திரும்புவார்கள் எனறு அதிகாரம் 30-33-ல் நாம் காணும் வாக்குதத்ததிற்கு ஒருவர் எப்படி விளக்கம் அறிந்து கொள்ள வேண்டும்? மற்றும் 6) 31:31-34-ல் நாம் காணும் வார்த்தைகளின்படி இஸ்ரவேலுக்கும் சபைக்கும் ஏற்பட்டு இருக்கும் புதிய உடன்படிக்கையை தேவன் எப்படி நிறைவேற்றுவார்? போன்ற கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலான சவால், எரேமியா புத்தகம் காலவரிசைப்படி எழுதப்படாமல், கருப்பொருட்களுக்கு ஏற்றாற்போல் முன்னும் பின்னுமாக தொய்வான வரிசையிலேயே தொகுக்கப்பட்டுள்ளபடியால், தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசன செய்திகளை சரியான காலபிண்ணனியில் வைத்து புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு எதிர் அம்சமாக, எசேக்கியேல் தனது புத்தகத்தை காலவரிசைப்படி அமைத்திருப்பதைக் காணலாம்.

சுருக்கம்

I. எரேமியாவின் ஆயத்தம் (1:1-19)

அ. எரேமியாவின் சூழ்நிலை (1:1-3)
ஆ. எரேமியாவின் தெரிந்தெடுப்பு(1:4-10)
இ. எரேமியா பொறுப்பெடுத்தல் (1:11-19)

II. யூதா விற்கு அதிகாரப்ப்பூர்வமாக அறிவித்தல் (2:1-45:5)

அ. யூதாவிற்கு கண்டனம் தெரிவித்தல் (2:1 – 29:32)

1. முதல் செய்தி (2:1 -3:5)
2. இரண்டாம் செய்தி (3:6 – 6:30)
3. மூன்றாம்செய்தி (7:1 – 10:25)
4. நான்காவது செய்தி (11:1 – 13:27)
5. ஐந்தாவது செய்தி (14:1 – 17:18)
6. ஆறாவது செய்தி (17:19 -27)
7. ஏழாவது செய்தி (18:1 -20:18)
8. எட்டாவது செய்தி (21:1-4)
9 ஒன்பதாவது செய்தி (22:1 – 23:40)
10. பத்தாவது செய்தி (24:1 -10)
11. பதினொன்றாவது செய்தி (25:1-38)
12. பன்னிரண்டாவது செய்தி (26:1 -24)
13. பதின்மூன்றாவது செய்தி (27:1 – 28:17)
14. பதினான்காவது செய்தி (29:1-32)

ஆ. யூதாவை ஆறுதல்படுத்தல் – புதிய உடன்படிக்கை (30:1 -33:26)

1. மறுசீர்செய்வேன் என்பதனை முன்கூட்டியே அறிவித்தல் (30:1 -31:40)
2. மறுசீர்செய்யப்படும் என்பதில் விசுவாசம் காட்டுதல் (32:1-44)
3. மறுசீர்செய்வேன் என்பதனை முன்கூட்டியே அறிவித்தல் பாகம் -2 (3:1-26)

இ. யூதா வின் பேரிடர் (34:1 -45:5)

1.யூதாவின் வீழ்ச்சிக்கு முன் (34:1 45:5)
2.யூதாவின் வீழ்ச்சியின் போது (39:1 -18)
3. யூதாவின் வீழ்ச்சிக்குப் பின் (40:1 -45:5)

III.  தேசங்களின் மீது வரப்போகும் நியாயத்தீர்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தல் (46:1 – 51:64)

அ. அறிமுகம் (46:1; 25:15-26)
ஆ. எகிப்திற்கு விரோதமாக (46:2 -28)
இ. பெலிஸ்தியா விற்கு விரோதமாக (47:1-7)
ஈ. மோவாப் ற்கு விரோதமாக (48:1-47)
உ. அம்மோனியருக்கு விரோதமாக (49:1-6)
ஊ. ஏதோம் ற்கு விரோதமாக (49:7-22)
எ. தமஸ்கு விற்கு விரோதமாக (49:23-27)
ஏ. கேதார் மற்றும் ஹஸோர் (அரபியா) விற்கு விரோதமாக (49:28-33)
ஐ. ஏலாம் ற்கு விரோதமாக (49:34 -39)
ஒ. பாபிலோனிற்கு விரோதமாக (50:1 – 51:64)

IV. எருசலேமின் வீழ்ச்சி (52:1-34)

அ. எருசலேம் அழிக்கப்படுதல் (52:1-23)
ஆ. யூதர்கள் நாடு கடத்தப்படுதல் (52:24-30)
இ. கோனியா விடுவிக்கப்படுதல் (52:31-34)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.