வேதாகம வரலாறுகள்

யோசுவா

தலைப்பு: 

பன்னிரெண்டு வரலாற்றுப் புத்தகங்களில் இப்புத்தகம் முதல் புத்தகம், மோசேயின் சேவகனாக இருந்து, பின், மோசே ஜெபித்து இஸ்ரவேலருக்கு தலைவனாக்கின (எண் 27:12-13) யோசுவாவின் சாதனைகளை குறித்து பேசுகிறபடியால் இப்புத்தகம்  யோசுவா என அழைக்கப்படுகிறது. யோசுவா என்றால் “யெகோவா இரட்சிக்கிறார்” அல்லது “கர்த்தரே இரட்சிப்பு” என்பதாகும். மேலும், புதியஏற்பாட்டின் “இயேசு” என்ற பெயருடன் தொடர்புடையது. தேவன் யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலருக்காக இரட்சிக்கும் தலைவனாக பொறுப்பேற்று யோசுவா யுத்தம் செய்தபோது, தேவன் இஸ்ரவேலரை விடுவித்தார் (5:14-62; 6:2; 10:42; 23:3,5; அப்.7:45).

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி:

இப்புத்தகத்தை எழுதின ஆசிரியரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை, எனினும் இதில் காணப்படும் சம்பவங்களை (உறுதிபடுத்தும் வசனங்கள் 18:9; 24:26) கண்களால் கண்ட முக்கிய சாட்சி - யோசுவா ஆக இருப்பதால், அவர்தான் இப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என்பது பிரபலமான கருத்து. யோசுவா வளர்த்த அவனது சேவகன், யோசுவாவின் மரணத்திற்குப் பின் இப்புத்தகத்தில் குறிப்பு (24: 29-35) எழுதி, இணைத்து இப்புத்தகத்தை நிறைவுசெய்திருக்க வேண்டும். வேறுசிலர் இந்த பகுதி பிரதான ஆசாரியன் எலேயாசர், அல்லது அவரது மகன் பினேகாஸ் இவர்களால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். யோசுவா 6:25 எழுதப்பட்ட நாட்களில் ராகாப் வாழ்ந்து கொண்டு தான் இருந்தாள். தாவீதின் அரசாட்சிக்கு முன் இப்புத்தகம் முற்றும் எழுதி முடிக்கப்பட்டது (15:63; உறுதிபடுத்தும் வசனம் 2சாமு 5:6-9). கி.மு 1405-1385-ம் ஆண்டுகளில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த நாட்களில் யோசுவா பிறந்து, மோசேயினால் பயிற்சி அளிக்கப்பட்டபின், தேவனின் தெரிந்தெடுப்பால் இஸ்ரவேலரை கானான் தேசத்திற்குள் வழிநடத்திச் செல்லும் தலைவனாக பின்நாட்களில் உயர்வு பெற்றவர்.  இவரை வேறுபிரித்துக் காட்டும்  அம்சங்கள்: 1) சேவகன் (எண் 17:10; 24:13; 33:11; எண் 11:28) 2) சேனை வீரன் (யாத் 17:9-13); 3) வேவுபார்த்தல் - இதன் அர்த்தம் எதிரியின் இடத்திற்குள் சென்று அவர்களைப்பற்றி அறிந்து வருவது (எண் 13,14); 4) மோசேயினால் வேண்டிக் கொள்ளப்படுதல் (எண் 27:15-17); 5) தேவனின் இறையாண்மை (எண் 27:18); 6) தேவ ஆவியானவரின் பிரசன்னம் (எண் 27:18; உபா 34:9); 7) மோசேயினால் பிரித்து எடுக்கப்படுதல் (எண் 27:18-23; உபா 31:7,8,13-15); மற்றும் 8) முழுமனதுடன் சுயநலம் பாராமல் கர்த்தரைப் பின்பற்றுதல் (எண் 32:12).

பிண்ணனி மற்றும் அமைப்பு:

மோசே மரிக்கும் முன், தலைமையின் கோலை யோசுவாவினிடத்தில் தருகிறார் (உபா 34). இஸ்ரவேல் வனாந்திரத்தில் அலைந்து திரிந்த 40 வருட கால இறுதியில் இருந்த வருடம் கி.மு.1405, யோசுவா இந்தவேளையில் 90 வயதை நெருங்கி இருந்தார், அவரது 110 வது வயதில் மரித்தார் (24:29), அவ்வேளையில், கானானியரில் அனேகரைத் துரத்திவிட்டு 12 கோத்திரங்களுக்கிடையில் தேசத்தைப் பிரித்து தந்திருந்தார். உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் (ஆதி: 12:7; 15:18-21) என்று வாக்குதத்தம் செய்திருந்த மோவாப் சமவெளி பூமியிலே, யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் இஸ்ரவேலர் அத் தேசத்தை கைப்பற்ற தேவன் தாமே வழிகாட்டும்படிக்கு காத்திருந்தனர். யோர்தானின் மேற்குபகுதியில் இருந்த மக்கள் அயோக்கியத்தில் திளைத்தவர்களாக இருந்தனர். அவர்களை தேவன் கட்டயமாக அந்த இடத்தில் இருந்து துரத்தி விடும் அளவுக்கும் அவர்களின் அயோக்கியத்தனம் இருந்தது (லேவி 18:24,25). ஆபிரகாமுக்கும் அவர் சந்தியினருக்கும் கொடுத்த வாக்குதத்தத்தை நிறைவேற்றும்படிக்கு தேவன் இஸ்ரவேலர் தேசத்தை கைப்பற்றி சுதந்தரிக்கும்படி செய்தார். அதேசமயத்தில் அந்த தேசத்தில் அக்கிரமத்தில் வாழ்ந்தவர்களின் அக்கிரமத்தை தண்டித்தார் (ஆதி 15:16). தேசத்தின் பல பகுதிகளில் கானானிய வம்சத்தார் குடியிருந்து நீண்ட காலமாக உடைமையாக்கி வைத்திருந்தனர், அது ஆபிரகாமின் நாட்களுக்கு முன்பே சம்பவித்திருக்க வேண்டும். (ஆதி 10:15-19; 12:6;13:7). அதில் குடியிருந்தவர்கள் யோசுவாவின் காலம் மட்டும் அந்நிய தேவர்களை வழிபட்டு அக்கிரமத்தில் திளைத்து வந்தனர். 

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்:

ஆபிரகாமின் வழித்தோன்றல்களுக்கு தேசத்தை தருவேன் என்று தான் செய்த வாக்குத்தத்ததை நிறைவேற்றி, தாம் சொன்ன வார்த்தைகளில் தேவன் எவ்வளவு சொல்லுறுதி உடையவராக இருந்தார் என்பதே இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் (ஆதி 12:7; 15:18-21; 17:8). அவரின் வழிநடத்துதலினாலே, இஸ்ரவேல் தேசத்தார் யோர்தானின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் குடியிருந்தனர். ”சுதந்தரித்துக் கொள்ளும்படி” என்ற வார்த்தை ஏறக்குறைய 20 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருப்பொருளுக்கு சம்பந்தப்பட்ட ஒன்று, இஸ்ரவேலர் தேசத்தின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்ற தவறியது (13:1). பின்வரும் நியாயாதிபதிகள் 1-2 அதிகாரம், இந்த பாவத்தினால் விளைந்த சோக முடிவுகளை விளக்குகிறது. கவனம் செலுத்த வேண்டிய முக்கிய வசனங்கள் 1) தேவன் தேசத்தில் குடியேறுவீர்கள் என வாக்குதத்தம் செய்வது (1: 3,6); 2) தேவனுடைய நியாயபிரமாணங்களை தியானிப்பது என்பது அவரது ஜனங்கள் யாவற்றிலும் முண்ணனியில் நிற்பதற்கு உதவும் (1:8); மேலும் 3) இஸ்ரவேல் தேசத்தின் சிலபகுதிகளை மட்டுமே இஸ்ரவேலர் கைப்பற்றுதல் (11:23; 21:45; 22:4). 

13-22-ஆம் அதிகாரங்களில் காணப்படுவதைப்போல குறிப்பிட்டு தேசத்தை பகிர்ந்து கொடுப்பது - யோசுவாவின் வேலை. இஸ்ரவேலர்கள் எங்கே வாழ்ந்தாலும், அவர்களுக்கு தேவனுடைய ஆராதனை சேவைகள் லேவியர்கள் மூலமாக எளிதில் கிடைக்கும்படி பட்டணங்களின் 48 முக்கியத்துவமான இடங்களில் லேவியர் குடியேற்றப்பட்டனர்.

தேவன் தம்முடைய ஜனங்கள் பின்வரும் காரணங்களுக்காக தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். 1) அவருடைய வாக்குதத்ததை நிறைவேற்றும்படிக்கு (ஆதி.12:7); 2) அவருடைய ராஜ்ஜியத்தின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய ஓர் மேடையை அமைக்க (ஆதி.17:8; 49:8-12), உதாரணமாக, இராஜாக்கள் மற்றும் நியாயாதிபதிகளின் காலகட்டங்களில் நிறைவேற இருக்கும் சம்பவங்களுக்கு - இஸ்ரவேலை ஆயத்தப்படுத்த; 3) மிகுதியான பாவத்தினால் தேவனுக்கு அவமானமாக காணப்பட்ட ஜனங்களை தண்டிக்க (லேவி.18:25) மற்றும் 4) உடன்படிக்கை தேவனின் உள்ளம் அனைத்து தேசத்து ஜனங்களையும் நேசிக்கின்றபடியால், மற்ற ஜனங்களுக்கு முன்பதாக சாட்சியாக (யோசுவா 2:9-11) நிற்க வேண்டும்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்:

அற்புதங்கள் வாசிப்பவருக்கு – ஒருபக்கம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவன் (ஆதி.1:1) வேறு அற்புதங்களையும் செய்யக் கூடும் என விசுவாசிக்கச் செய்யும் அல்லது ஏதேனும் விளக்கம் அளித்து விட்டுச் செல்லச் செய்யும் ஒரு சவாலை எப்பொழுதும் முன்வைக்கிறது. மோசேயின் நாட்களில் காண்கிறது போல, இந்த புத்தகத்தில் இருக்கும் அற்புதங்கள் தேவனின் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன, உதாரணமாக, 1) யோர்தானின் நதியில் புரண்டுவரும் தண்ணீரை தடுத்து நிறுத்தியது (யோசுவா 3:7-17); 2) எரிகோவின் சுவர்கள் தகர்ந்து விழுந்தது (யோசுவா 6:1-27); 3) பெரிய கற்களை விழப்பண்ணினார் (யோசுவா 10:1-11); 4) நீண்ட பகல் வேளை (யோசுவா 10:12-15).  

இப்புத்தகத்தில் சவால்களாக இருக்கும் கேள்விகள் 1) தேவனுக்கு விசுவாசத்தினால் பதிலளித்த வேசியாகிய ராகாப் பொய்சொல்லிய போதும் அவளை ஆசீர்வதித்தது எப்படி? 2) ஆகானை கல்லெறிந்து கொன்ற போது, அவன் வீட்டாரையும் சேர்த்து கல்லெறிந்து கொன்றது ஏன்? (யோசுவா 7); 3) ஆயி தேசத்தாரிடம் இஸ்ரவேலர்களைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் ஆட்கள் இருந்த போதும், ஆயி பட்டணத்தாரை மேற்கொள்ள முடியாது போனது ஏன்? (யோசுவா: 7,8); 4) “உங்கள் முன்பாக குளவிகளை அனுப்பினேன்” என இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னதன் அர்த்தம் என்ன?

சுருக்கம்

I. வாக்குதத்தமாக பெற்ற தேசத்தில் பிரவேசித்தல் (1:1 -5:15)
II. வாக்குதத்த தேசத்தை வெற்றி கொள்ளல் (6:1 -12:24)
அ. மத்திய பகுதியில் கூடாரமிடுதல் (6:1 - 8:35)
ஆ. தெற்கு பகுதியில் கூடாரமிடுதல் (9:1 - 10:43)
இ. வடக்கு பகுதியில் கூடாரமிடுதல் (11:1-5)
ஈ. ஜெயம் பெற்ற பகுதிகளின் சுருக்கம் (11:16 – 12:24)
III. வாக்குதத்த தேசத்தை பங்கிட்டு கொடுத்தல் (13:1 -22:34)
அ. கட்டளைகளின் சாராம்சம் (13:1-33)
ஆ யோர்தானின் மேற்கு பகுதி (14:1 – 19:51)
இ. அடைக்கலப் பட்டணங்கள் (20:1-9)
ஈ. லேவியரின் பட்டணங்கள் (21: 1-45)
உ. யோர்தானின் கிழக்கு பகுதி (22:1-34)
IV. வாக்குதத்த தேசத்தை தக்கவைத்துக் கொள்ளல் (23:1-24:28)
அ. யோசுவாவின் முதல் பேச்சு (231-16)
ஆ. யோசுவாவின் இரண்டாம் பேச்சு (24:1-28)
V. பின்குறிப்பு (24:29-33)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.