வேதாகம வரலாறுகள்

எண்ணாகமம் – என்று அழைக்கப்படும் மோசேயின் நான்காம் புத்தகம்

தலைப்பு:

Numbers (எண்ணாகமம்) என்னும் ஆங்கில தலைப்பு கிரேக்க (LXX) மற்றும் லத்தீன் (Vg.) பதிப்புகளில் இருந்து வருகிறது. 1-4 மற்றும் 26-ம் அதிகாரங்களில் எண்ணித் தொகையேற்றுதலுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டதால் இப்பெயர் பெற்றது. எபிரேய வேதாகமத்தின் முதல் அதிகாரம், முதல் வசனத்தின் ஐந்தாம் வார்த்தை “வனாந்திரத்திலிருக்கிற” என்பதில் இருந்து பொதுவாக வழக்கத்தில் இருக்கும் பெயர் பெறப்பட்டது. வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர் என்பதைக் காட்டிலும் அதிக விளக்கத்தை இப்பெயர் தருகிறது. மற்றொரு எபிரேய தலைப்பு, ஆதித்திருச்சபை போதகர்களால் ஆதரிக்கப்பட்டது - எபிரேய பதிப்பின் 1:1ன் முதல் வார்த்தை “கர்த்தர் பேசினார்” என்பதனை அடிப்படையாகக் கொண்டது. இந்த தலைப்பு இஸ்ரவேலுக்கு தேவன் தந்த வார்த்தையை பதிவுசெய்துள்ளது என்பதை வலியுறுத்துகிறது. 

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

நியாயப்பிரமாண புத்தகங்கள் என்று அழைக்கப்படும் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களின் வரிசையில் எண்ணாகம புத்தகம் நான்காவதாக வருகிறது. இதன் ஆசிரியர் மோசே என்பதை வேதவாக்கியங்களில் காணலாம். (யோசுவா 8:31; 2இரா. 14:6; நெகேமியா 8:1; மாற்கு 12:26; யோவான் 7:19). எண்ணாகம புத்தகத்திலேயே 33:2 மற்றும் 36:13 ஆகிய வசனங்களில் ”மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே …. எழுதினான்) என்று காண்கிறோம்.

மோசேயின் வாழ்க்கையின் இறுதிகாலங்களில் எண்ணாகம புத்தகம் எழுதப்பட்டது. எகிப்தில் இருந்து வெளியேறி 40 வருடங்களுக்கு பிறகு 20:1-லிருந்து புத்தகத்தின் முடிவு வரை காணப்படும் சம்பவங்கள் நிறைவேறுகின்றன. எரிகோவை கடந்து யோர்தான் நதியின் கிழக்கு பக்கத்தில் இஸ்ரவேல் தயாராக இருப்பதோடு சம்பவங்கள் முடிவடைகின்றன (36:13), இங்கு தான் கானான் தேசத்தின் மீது பெறும் வெற்றி (யோசுவா 3-6) தொடங்குகிறது. எண்ணாகம புத்தகம் உபாகமம் புத்தகத்திற்கு அடிப்படையாக இருக்கிறது. உபகாமம் புத்தகம் எழுதிய காலகட்டம் எகிப்திலிருந்து வெளியேறியதில் இருந்து 40-வது வருடத்தின் 11-வது மாதத்தில் (உபாகமம் 1:3) என்று இருக்கிறபடியால், எண்ணாகம புத்தகம் எழுதப்பட்ட காலம் கிமு 1405-ஆக இருக்க வேண்டும்.

பின்னணி மற்றும் அமைப்பு

புத்தகத்தின் அனேக சம்பவங்கள் ”வனாந்திரத்தில்” நிறைவேறின. எண்ணாகம புத்தகத்தில் “வனாந்திரம்” என்னும் வார்த்தை 48 தடவை பயன்பட்டுள்ளது. சிறிய தாவரங்கள் மற்றும் மரங்கள் இருக்ககூடிய நிலப்பகுதியை இவ்வார்த்தை குறிக்கிறது; தொடர்ச்சியான மழைப்பொழிவு இல்லாததால், பயிர் சாகுபடி செய்ய முடியாது. இந்த நிலப்பகுதி விலங்குகளின் மேய்ச்சலுக்கு சிறப்பாக பயன்பட்டது. வசனம் 1:1-10:10, ”சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேலர் கூடாரமிட்டு தங்கியிருந்தனர்” என்று பார்க்கிறோம். சீனாய் வனாந்திரப்பகுதியில் தான் இஸ்ரவேலருடன் கர்த்தர் “மோசேயின் உடன்படிக்கையை” ஏற்படுத்தினார் (யாத்.19-24). வசனங்கள் 10:11 – 12:16-ல், இஸ்ரவேலர் சீனாய் வனாந்திரப்பகுதியில் இருந்து காதேஸ் வனாந்திரத்திற்கு பிரயாணப்பட்டனர் என்பதைப் பார்க்கிறோம். வசனங்கள் 13:1 – 20:13-ல் நிறைவேறின சம்பவங்கள் யாவும் காதேசை சுற்றியுள்ள ”பாரான் வனாந்திரப்பகுதிகள்” (12:16; 13:3,26), “சீன் வனாந்திரப்பகுதிகளில்” (13:21; 20:1, 20:14 -22:1) நிறைவேறின என்று பார்க்கிறோம். 20:4 -22:1 வசனங்களில், இஸ்ரவேல் மக்கள் காதேஸில் இருந்து புறப்பட்டு “மோவாபின் சமனான வெளிகளில்” பாளயமிறங்கினார்கள் என்று பார்க்கிறோம். 22:2 – 36:13-அல் சொல்லப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களும் இஸ்ரவேல் மக்கள் மோவாபின் வடக்கு பகுதியில் முகாமிட்டு இருந்த போது சம்பவித்தது. சமனானபகுதி என்பது தரிசுநிலத்தில் தட்டையானதாகவும் வளமானதாகவும் இருக்கும் பகுதியாகும் (21:20; 23:28; 24:1).

எகிப்தை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் வெளியேறினபின் இரண்டாம் மற்றும் நாற்பதாவது வருடத்தில் நடைபெறும் சம்பவங்களில் எண்ணாகம புத்தகம் கவனம் செலுத்துகிறது. இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறியபின் கி.மு. 1445-வில் நிறைவேறின சம்பவங்கள் 1:1 – 14:45 வசனங்களில் குறிக்கப்பட்டுள்ளன. 15:1 – 19:22-ல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களுக்கு தேதியிடவில்லை; ஒருவேளை கி.மு 1406/1405-ல் அதாவது எகிப்தில் இருந்து வெளியேறியதில் இருந்து 40-வது ஆண்டில் அனைத்தும் நிறைவேறி இருக்கலாம். 15:1 – 19:22-ல் காணும் சம்பவங்கள் மற்றும் பிரமாணங்களுக்கு தேதியிடவில்லை. ஒருவேளை கி.மு. 1443-ல் இருந்து கிமு 1407 கால இடைவெளிக்குள் எனக் குறிக்கலாம். எகிப்தில் இருந்து கானான் வரை பிரயாணம் செய்த காலகட்டத்தில் - ஏனைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த 37 ஆண்டுகளில் நடந்தவைகளுக்கு குறிப்பு இல்லாது இருப்பது – இஸ்ரவேல் ஜனத்தார் கர்த்தருக்கு விரோதமாக கலகம் செய்ததினால், அதனிமித்தம் விளைந்த நியாயத்தீர்ப்பினால் இத்தனை ஆண்டுகளை வீணாக்கினர்கள் என்று அறிகிறோம்.

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

இஸ்ரவேல் தேசத்தாரின் இரண்டு தலைமுறையினரின் அனுபவங்களை எண்ணாகமம் வரிசைப்படுத்துகிறது. முதல் தலைமுறையினர் எகிப்தில் இருந்து வெளியேறிய சம்பவத்தில் பங்கேற்றனர், இவர்களின் அனுபவம் யாத்திராகமம் 2:23ல் தொடங்கி லேவியராகமம் ஊடாக கடந்துசென்று எண்ணாகமத்தின் முதல் 14 அத்தியாயங்கள் வரை தொடர்கிறது. வம்சங்களிலுள்ள புருஷர்களின் தலைகள் எண்ணப்பட்டு கானானை (1:1-46) மேற்கொள்ளும் யுத்தத்திற்கு என்று தொகையேற்றப்பட்டது. ஆனாலும், ஜனங்கள் கானானின் தென் முனைக்கு வந்த போது, கானான் தேசத்துக்குள் பிரவேசிக்க மறுத்தார்கள் (14:1-10). அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக கலகம் செய்தபடியால், 20 வயது முதல் மற்றும் அதற்கு  மேற்பட்டவர்கள் (யோசுவா மற்றும் காலேப்) தவிர அனைவரும் வனாந்திரத்தில் மடிந்து விழுந்தனர் (14:26-38). 15-25 அதிகாரங்களில், முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையினர் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றனர்; முதல் தலைமுறையினர் மரிப்பதும் இரண்டம் தலைமுறையினர் பெரியவர்களாக வளருவதையும் காண்கிறோம். இரண்டாம் தலைமுறையினரின் காலத்தில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களின் எண்ணப்படுதல் ஆரம்பிப்பதை 26:1-56 வசனங்களில் காண்கிறோம். எண்ணாகமம் 26:1-ல் தொடங்கும் இந்த இரண்டாம் தலைமுறையினர் குறித்த சம்பவங்கள் உபாகமம் மற்றும் யோசுவா புத்தகங்களின் ஊடாகக் கடந்து செல்கிறது.

எண்ணாகம புத்தகத்தில் மூன்று இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. 

முதலாம் கருப்பொருள்: கர்த்தர் தாமே மோசேயின் மூலமாக (1:1; 7:89, 12:6-8) பேசினார், அதினால் மோசேயின் வார்த்தைகள் தேவனின் அதிகாரத்தைக் கொண்டிருந்தன. மோசேயின் வார்த்தைகளுக்கு இஸ்ரவேல் தேசத்து மக்கள் அளித்த பதிலில் அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படிகிறார்களா அல்லது கீழ்ப்படியவில்லையா என்பது பிரதிபலித்தது. கர்த்தருடைய வார்த்தைக்கு இஸ்ரவேலர் எப்படியாக பதில் அளித்தனர் என்பதன் அடிப்படையில் எண்ணாகம புத்தகம் நன்கு வரையறுக்கப்பட்ட மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. கீழ்ப்படிதல் (அதிகாரம் 1-10), கீழ்ப்படியாமை (அதிகாரம் 11-25), மறுபடியும் புதுப்பித்த கீழ்ப்படிதல் (அதிகாரம் 26-36).

இரண்டாம் கருப்பொருள்: கர்த்தர் நியாயம் தீர்க்கும் தேவன். எண்ணாகம புத்தகம் முழுவதும் இஸ்ரவேலரின் பாவத்தினிமித்தம் கர்த்தருடைய ”கோபம்” மூண்டது எனக் காண்கிறோம் (11:1,10,33; 12:9; 14:18; 25:3,4; 32:10,13,14). 

மூன்றாம் கருப்பொருள்: ஆபிரகாமின் வித்திற்கு, கானான் தேசத்தை தந்திடுவேன் என்ற வாக்குதத்தம், கர்த்தர் வாக்கு பண்ணினதில் உறுதியாக இருந்தார் என்பதை வலியுறுத்தப்படுகிறது (15:2; 26:52-56; 27:12; 33:50-56; 34:1-29).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

எண்ணாகமம் புத்தகத்தை வாசிப்பவருக்கு விளக்கமளிப்பதில் நான்கு பெரிய சவால்கள் உள்ளன.. முதலாவது, எண்ணாகம புத்தகம் தனிப்பட்ட புத்தகமா அல்லது ஐந்து ஆகம புத்தகங்களில் ஒன்றா? என்ற கேள்வி. வேதாகமத்தின் தோரா என்னும் தோல்சுருள் - ஆகமபுத்தகங்களான, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், மற்றும் உபாகமம் என்னும் - இந்த ஐந்து புத்தகங்களை உள்ளடக்கியது. வேதவாக்கியங்களின் ஏனைய அனைத்து புத்தகங்களும் இந்த ஐந்து புத்தகங்களை - ஒரே தொகுப்பாக காண்கின்றன. ஐந்து ஆகம புத்தகங்களின் (Pentateuch) பிண்ணனி/சூழலை தவிர்த்து விட்டு எண்ணாகமத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. இந்த புத்தகத்தின் முதல் வசனம் கர்த்தர், மோசே, ஆசரிப்புக்கூடாரம் மற்றும் இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டதைக் குறித்து பேசுகிறது.  வாசிப்பவர் எண்ணாகம புத்தகத்திற்கு முன் உள்ள மூன்று ஆகம புத்தகங்களில் பழக்கமானவராக இருக்கிறார் என்பதைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறது. கிடைக்கப்பெறும் ஒவ்வொரு எபிரேய கையெழுத்துப் பிரதியும், இன்றைய நாட்களில் ஐந்தாகம புத்தகங்கள் எப்படி பிரிக்கப்பட்டு இருக்கின்றனவோ அதேவரிசையில் ஐந்து புத்தகங்களையும் பிரித்து வரிசைப்படுத்தி உள்ளன. இப்புத்தகங்களில் எண்ணாகம புத்தகம் நன்கு வரையறுக்கப்பட்டு தனக்கே உரிய விதத்தில் கட்டமைப்பில் ஒருமைப்பாட்டுடன் விளங்குகிறது. அது ஏனைய புத்தகங்களின் ஊடாக இருந்து செயல்படுவதாக இருந்தாலும், அதற்கென்று ஆரம்பம், இடைப்பட்ட மற்றும் இறுதி பிரிவு என்ற தெளிவான பிரிவைக் கொண்டுள்ளது. இதனால் தான் எண்ணாகமம் புத்தகத்தை தனிபுத்தகத்தகமாக அடையாளப்படுத்திப் பார்க்கின்றனர்.

விளக்கம் அளிப்பதில் கேட்கப்படும் இரண்டாவது கேள்வி, எண்ணாகம புத்தகத்தில் ஒத்திசைவு இருக்கிறதா? என்பதே. எண்ணாகமம் புத்தகத்தில் பலதரப்பட்ட இலக்கியங்கள் மற்றும் வடிவங்கள் இருக்கின்றன என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். மக்கள்தொகை வரிசைகள், வம்சவரலாறுகள், பிரமாணங்கள், வரலாற்று கதைகள், கவிதை, தீர்க்கதரிசனம் மற்றும் பிரயாண பட்டியல்கள் – என பல செய்திகள் இப்புத்தகத்தில் காணக் கிடைக்கின்றன. ஆனாலும், சீனாய் மலையில் இருந்து மோவாப் சமவெளி வரை சென்ற இஸ்ரவேலரின் பிரயாணத்தை இவைகள் ஒன்றுக்குள்ஒன்றாக கலந்து கூறுகின்றன. எண்ணாகமத்தில் உள்ள ஒத்திசைவை கீழ்க்காணும் சுருக்கத்தில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

மூன்றாம் கேள்வி, இஸ்ரவேலரின் மாபெரும் மக்கள் தொகை 1:46 மற்றும் 26:51 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இஸ்ரவேலில் யுத்தம் செய்யவல்ல மனிதரின் எண்ணிக்கை இரண்டுமுறை 39 வருட இடைவெளியில் கணக்கிடப்பட்டு இரண்டு முறையும் எண்ணிக்கை 6,00,000க்கும் மேல் எனக் கண்டறியப்பட்டது. இவ்வளவு எண்ணிக்கையில் யுத்தவல்ல மனிதர் இருந்தனர் எனக் கண்டறியப்பட வேண்டுமானால், இஸ்ரவேல் தேசத்து மக்களின் மொத்த ஜனத்தொகை எப்பொழுதும் 25 இலட்சக்கும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். இயற்கையான கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், வனாந்திர வெளி இவ்வளவு பெரிய ஜனக் கூட்டம் வாழ்வதற்கு ஏற்றதாக இருந்திருக்காது. ஆனாலும், கர்த்தர் தாமே இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இஸ்ரவேல் ஜனத்தை 40 வருடங்கள் (உபா.8:1-5) பராமரித்தார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். எனவே மிகப்பெரிய தொகையை அப்படியே முகமதிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம் அளிப்பதில் உள்ள நான்காவது சவால் புறஜாதியாரின் தீர்க்கதரிசி பாலாம்; இவரைப் பற்றி வசனம் 22:2 – 24:25 ல் காண்கிறோம். நான் கர்த்தரை அறிவேன் என பாலாம் உரிமை பாராட்டினாலும் (22:18) வேதவாக்கியங்கள் இவர் கள்ள தீர்க்கதரிசி (2பேது 2:15,16; யூதா 11) என்றே தொடர்ச்சியாகக் கூறுகிறது. கர்த்தர் தாம் பேச வேண்டிய வார்த்தைகளை பாலாம் வாயில் அவர் தாமே பாலாமின் வாயில் போட்டு அவரின் வாயாக மட்டுமே அவரைப் பயன்படுத்தினார். 

புத்தகத்தின் சுருக்கம்
I இஸ்ரவேல் தேசத்து முதல் தலைமுறையினரின் வனாந்திர அனுபவம்: (1:1 - 25:18)
அ. இஸ்ரவேலர் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் (1:1 – 10:36)
1. கர்த்தரின் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி இஸ்ரவேலர் ஒன்றுசேர்தல் (1:1-6:27)
2. கர்த்தருடைய ஆசரிப்புக் கூடாரத்தின் நிலைப்பாட்டிற்கு தக்கவாறு அமைத்துக் கொள்ளுதல் (7:1 -10:36)
ஆ. இஸ்ரவேலர் கர்த்தருக்குக் கீழ்ப்படியாதிருத்தல் (11:1 – 25:18)
இஸ்ரவேலர் வழிப்பிரயாணத்தின் போது குறைகூறுதல் (11:1-12:16)
2. காதேஸ் பகுதியில் இஸ்ரவேல் ஜனங்களும் அதின் தலைவர்களும் கலகம் செய்தல் (13:1 -20:29)
   *இஸ்ரவேலர் கலகம் செய்ததும் அதன் விளைவுகளும் (13:1-19:22)
   *மோசே மற்றும் ஆரோனின் எதிர்ப்பு மற்றும் அதன் விளைவுகள் (20:1-29)
3. புதுப்பிக்கப்பட்ட இஸ்ரவேலரின் கலகம் (21:1 – 22:1)
4. இஸ்ரவேலரை பாலாம் ஆசீர்வதித்தல் (22:2 -24:25)
5. பாகால்பேயோரைப் பற்றிக்கொள்ளுதலால் இஸ்ரவேலர் மீது கர்த்தருடைய கோபம். (25:1-18)
 
II இஸ்ரவேல் தேசத்து இரண்டாம் தலைமுறையினரின் மோவாப் சமவெளி அனுபவம்:
கர்த்தரிடத்தில் இஸ்ரவேலர் தங்கள் கீழ்ப்படிதலைப் புதுப்பித்துக் கொள்ளுதல். (26:1 – 36:13)
அ. தேசத்தைக் கைப்பற்ற ஆயத்தப்படுதல் (26:1 – 32:42)
ஆ. வனாந்திரத்தில் பிரயாணம் குறித்து மதிப்பாய்வு செய்தல் (33:1-49)
இ. தேசத்தைச் சுதந்தரிக்கும்படி எதிர்பார்த்தல் (33:50 – 36:13) 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.