திருவிவிலியக் கதைகள்

இயேசுநாதர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவரது வித்தியாசமான மற்றும் கருத்துள்ள போதனைகளாலும் அவர் செய்த அற்புதங்களினாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் பலர் அவரைக் காண விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் அந்நாட்களில் வரி வசூல் செய்பவர்களுக்கெல்லாம் தலைவனும் பணக்காரனுமாய் இருந்த சகேயு என்பவர். அக்காலத்தில், வரி வசூல் செய்பவர்கள் மக்களை துன்புறுத்தி அதிக பணத்தை வசூல் செய்து, அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக் கொண்டு மற்றொரு பகுதியை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்துவார்கள். அதனால், வரி வசூல் செய்பவர்களை மக்களுக்கு பிடிப்பதில்லை. மேலும், வரி வசூல் செய்தவர்கள் பணக்காரர்களாகவும், அதே நேரத்தில் மக்களால் வெறுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.

இயேசுவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சகேயுவுக்கு ஒருநாள் அந்த அரிய வாய்ப்பு கிட்டியது! இயேசு அவரது ஊரின் வழியாய் கடந்து செல்கிறார் என்ற செய்தியை அவர் கேள்விப்பட்டார். சகேயு மிகவும் குள்ளமாணவராக இருந்தபடியாலும் இயேசு நாதரை சுற்றி எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியாலும், நெருங்கி அவரை பார்க்க முடியாது என்பதை சகேயு அறிந்து கொண்டார். அதனால், இயேசு வருவதற்கு முன்னரே அந்த வழியில் இருந்த ஒரு அத்தி மரத்தின் மீது ஏறி இயேசு அந்த வழியாக செல்லும்போது அவரை பார்க்க ஆயத்தமாக இருந்தார்.

அதிகமான மக்கள் கூட்டத்துக்கு நடுவே இயேசு தூரத்தில் வந்து கொண்டிருப்பதை பார்த்த சகேயுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி! நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேற போகிறது! இயேசுவை நேரடியாக பார்க்கப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் சகேயு. அதுவரை நடந்து வந்து கொண்டிருந்த இயேசு, சகேயு ஏறி இருந்த அத்தி மரத்தின் கீழ் வந்தவுடன் மரத்தின் கீழேயே நின்று விட்டார்! நின்ற இயேசு, தலையை அண்ணாந்து பார்த்து “சகேயுவே இறங்கி வா” என்று கூப்பிட்டதுமன்றி, “இன்றைக்கு உன் வீட்டில் தங்க போகிறேன்” என்றும் சொன்னார். இதைக் கேட்ட சகேயுவிற்கு, சந்தோஷத்தில் கையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இயேசுவை எப்படியாவது பார்த்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அவர் வீட்டிற்க்கே வந்து தங்க போகிறார் என்பதைக் கேட்தும் மகிழ்ச்சி கடல் பெருக்கெடுத்தது! மகிழ்ச்சியுடன் இயேசுவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற அவன், “என்னுடைய ஆஸ்தியில் பாதியை இப்பொழுதே ஏழைகளுக்கு நான் கொடுக்கப் போகிறேன்; நான் யாரிடமாவது அநியாயமாக பணம் வாங்கியது உண்டானால் அதை நான்கு மடங்காக திரும்ப கொடுக்கப் போகிறேன்” என்று சொன்னான். இதைக் கேட்ட இயேசு, “இன்றைக்கு இவனுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, இந்த வீட்டிற்கு மீட்பு வந்தது” என்று சொன்னார்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்களோ, இவர் என்ன பாவியான இந்த சகேயு வீட்டில் தங்கப் போகிறார் என்று முறுமுறுத்தார்கள். ஆனால் இயேசுவோ, பாவம் செய்து கடவுளின் அருளை இழந்து போனவர்களை நித்தியவாழ்வுக்கென்று மீட்டெடுக்கவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன் என்று தன்னை சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு சொன்னார்! மேலும், தங்களது குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் உண்மையாகவே மனம் வருந்தி ஆண்டவரின் இரக்கத்தை கேட்கும் யாவருக்கும் என்னுடைய அருளை கொடுப்பேன் என்றும் சொன்னார்!

இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, ஜூன் 15, 2023 அன்று வெளிவந்துள்ளது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.