முகப்பு
images/banners/slider/john3-16.jpg

salvation on page

மனிதனுடைய இருதயம், இறைவனுடைய வழிகளையும், கற்பனைகளையும் விட்டு விலகி, எப்பொழுதும் இறைவனுடைய திட்டங்களுக்கும் செயல்களுக்கும் எதிராகவே இருக்கிறது. இதைத் தான் இறைவார்த்தை (வேதம் அல்லது பைபிள்) பாவம் என்று அழைக்கிறது. சரி… அப்படி யார் யாரெல்லாம் பாவம் செய்தது? நான், நீங்கள் மற்றும் உலகத்திலுள்ள அனைவரும்! “நீங்கள் எல்லாரும் பாவம்செய்து தேவ மகிமையற்றவர்களாகிவிட்டீர்கள்” (ரோமர் 3:23) என்று இறைவார்த்தைக் கூறுகிறது.

பாவத்தின் விளைவு மரணம் என்றும் நாம் அனைவரும் நம்முடைய பாவங்களுக்காக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் இறைவார்த்தைக் கூறுகிறது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவங்களுக்காக நித்திய நித்திய காலமாக தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

ஆனால், இறைவன் பாவிகளை நேசிக்கிறார். நம்மை அந்த பாவத்திலிருந்து பாதுகாத்து, தூய்மையாக்கி நமக்கு புதிய வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தருகிறார். “நானோ உங்களுக்கு ஜீவனைக் கொடுக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று இறைவன் தன்னுடைய வார்த்தையில் கூறுகிறார். இதைத்தான் பாவமீட்பு அல்லது பாவ மன்னிப்பு என்று அழைக்கிறோம்.

மனுகுலத்திற்கு இந்த பாவமீட்பாகிய மன்னிப்பை, இறைவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துமூலம் அவரை நம்பும் அனைவருக்கும் இலவசமாய் தருகிறார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8). பாவமில்லாத தூயவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை சிலுவையில் அனுபவித்துவிட்டார்.

இன்றைக்கு பலர் இந்த பாவ மன்னிப்பை பல நற்செயல்கள் செய்வதால் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். வேறுசிலர் நாம் நல்லவர்களாய் வாழ்வதால் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எபேசியர் 5:8,9 சொல்கிறது “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய பரிசு: ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல”. இறைவன் தரும் இந்த இலவச பாவ மன்னிப்பை நாம் நம்முடைய நற்செயல்களால் பெற்றுக்கொள்ள முடியாது.

இந்த விலைமதிப்பில்லா பாவ மீட்பைப் பெற்றுக்கொள்ளுவதற்காக ஒரே வழி, இயேசு கிறிஸ்துவின் மீது நம்பைக்கை (விசுவாசம்) வைப்பதின் மூலமே! “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோமர் 10:9) என்று இறைவன் சொல்லியிருக்கிறார்.

உண்மையான விசுவாசம் என்பது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இறைவன் என்று விசுவாசித்து, அவர் உங்களுடைய பாவங்களுக்காக மரித்து, பிறகு உயிர்த்தெழுந்தார் என்பதை நம்புவதே. இந்த நம்பிக்கை உங்களை ஒரு புதிய வாழ்க்கைக்கு நேராக வழி நடத்திச்செல்லும். இந்த உலக தரக்கூடாத சந்தோஷத்தையும் சமாதானத்தையும் உங்கள் உள்ளம் அனுபவிக்கும்! ஒரு புதிய இலக்கை நோக்கி உங்கள் வாழ்க்கைப் பயணம் தொடரும்!

இந்த இயேசுக்கிறிஸ்துவை நீங்கள் நம்புவீர்களானால், இந்த சிறிய ஜெபத்தை (வேண்டுதல்) செய்யவும். “அன்பான இறைவனே, நான் பாவி என்பதை அறிக்கையிடுகிறேன். இறைவனாகிய இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்தார் என்பதை நம்புகிறேன். எனக்காக நித்திய வாழ்க்கையை அவர் கொடுக்கப்போகிறார் என்பதை நம்புகிறேன். என்னுடைய பாவங்களை மன்னித்ததற்காக உமக்கு நன்றி. எனக்கு புதிய வாழ்க்கையை அளித்ததற்காக உமக்கு நன்றி. இந்த நாள் முதல் நான் உம்மை முழுமனதோடு பின்பற்றுவேன். அதற்கான வழிகளில் என்னை நடத்தும். இயேசு கிறிஸ்துவின் மூலம் கேட்கிறேன். ஆமென்.

 

 இந்த ஜெபத்தை உண்மையாகவே நீங்கள் செய்திருப்பீர்கள் என்றால், இயேசு உங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்துவிட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்! எப்படி இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ்வது என்பதைப் பற்றி மேலும் அறிய, எங்களைத் தொடர்புக்கொள்ளவும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.