ஒரு பள்ளத்தாக்கில் நிலச்சுவான்தார் (பெரிய நில உரிமையாளர்) ஒருவர் இருந்தார். அவருக்குப் பரந்து விரிந்த விவசாய நிலங்களும், பல தோட்டங்களும், மரங்களும், வயல்களும் இருந்தன. அந்தச் செல்வந்தர் தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி வயல்களையும், பயிர்களையும் பார்வையிடுவது வழக்கம். அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே அவர்தான் மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்தார்.
அவருடைய நிலத்தில் பல கூலியாட்கள் உழைத்து வந்தனர். அவர்களில் "ஜான்" என்ற தேவபக்தியுள்ள ஒரு முதியவரும் இருந்தார். அந்த முதியவர் பல வருடங்களாக அந்தச் செல்வந்தருடைய தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.
ஒரு நாள் மதிய வேளையில், முதியவரான ஜான் தனது தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அவர் ஒரு பழைய தூக்குச்சட்டியைத் தன் முன்பாக வைத்து, கண்களை மூடி அந்த உணவுக்காகத் தேவனுக்கு நன்றி செலுத்தினார். அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவு மிகவும் குறைவாகவும், ஆறிப்போயும் இருந்தது. அந்தச் சமயத்தில் செல்வந்தர் அங்கு வந்து முதியவரைப் பார்த்து, "ஜான், நீ ஏன் தேவனுக்கு நன்றி சொல்லுகிறாய்? உனக்குத் தேவன் என்ன கொடுத்தார்? ஒன்றுமில்லையே! பின்பு ஏன் அவருக்கு நன்றி செலுத்துகிறாய்?" என்று ஏளனமாகக் கேட்டார்.
அதற்கு அந்த முதியவர் பணிவுடன், "ஐயா, தேவன் எனக்கு எண்ணற்ற உதவிகளையும், நன்மைகளையும் செய்துள்ளார். பல கோடி செலவழித்தும் கிடைக்காத பாவ மன்னிப்பையும், என் இருதயத்தில் சமாதானத்தையும், பரலோகப் பிரவேசத்தையும் எனக்குத் தந்துள்ளார். எனக்குத் தினமும் உணவளித்து என்னைப் போஷித்துக் காக்கிறார். எனவே, அவருக்கு நன்றி செலுத்துவதே எனக்கு உத்தமம்," என்று பதிலளித்தார்.
அதைக் கேட்ட செல்வந்தர், அந்த முதியவரை ஏளனமாகப் பார்த்து, 'பைத்தியக்காரன்' என்று மனதிற்குள்ளாகச் சொல்லிக்கொண்டு, தன்னுடைய குதிரையின் மீது ஏறி அந்த இடத்திலிருந்து புறப்பட்டார். செல்வந்தருடைய குதிரை சற்றுத் தூரம் சென்றதும், "ஐயா, ஒரு நிமிடம் நில்லுங்கள்!" என்ற சத்தத்தோடு ஜான் அவரை அழைத்தார். செல்வந்தர் திரும்பி வந்து, குதிரையின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி, வெறுப்போடு "என்ன?" என்று கேட்டார்.
முதியவர் செல்வந்தரிடம், "ஐயா, நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்," என்றார். "என்ன கனவு அது?" என்று செல்வந்தர் வினவினார். "இன்று இரவு 12 மணியளவில் இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் மிகப்பெரிய செல்வந்தர் மரணமடைவார் என்று நான் கனவு கண்டேன்," என்று அந்த முதியவர் உறுதியாகச் சொன்னார். செல்வந்தர் சிரித்துக்கொண்டே, "வயதானவர்களுக்கு இது போன்ற கனவுகள்தான் வரும்," என்று சொல்லிவிட்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு அலட்சியமாகக் குதிரையை ஓட்டிச் சென்றார்.
குதிரை அந்தப் பகுதியில் உள்ள அழகான மரங்களையும் வயல்களையும் கடந்து வெகுதூரம் ஓடியது. ஆனால், அந்த முதியவர் சொன்ன வார்த்தைகள் மட்டும் செல்வந்தனை விட்டு விலகவில்லை. "பள்ளத்தாக்கில் உள்ள செல்வந்தர் இன்று இரவு 12 மணிக்கு இறந்துவிடுவார்" என்ற வார்த்தைகள் அவரது மனதின் சமாதானத்தைக் குலைத்து, இருதயத்தைத் தவிக்கச் செய்தன. எவ்வளவு முயன்றும் அந்த வார்த்தைகளை அவரால் மறக்க முடியவில்லை.
அவர் தன் வீட்டிற்குச் சென்றதும், நகர்ப்புறத்திலிருந்து தன்னுடைய குடும்ப மருத்துவரை வரவழைத்தார். அவரிடம், "டாக்டர், என் உடல் முழுவதையும் பரிசோதனை செய்யுங்கள்," என்று பதற்றத்துடன் கூறினார். நீண்ட நேரமாக அனைத்து நவீன உபகரணங்களின் உதவியால் அவரைப் பரிசோதித்த மருத்துவர், "உங்கள் உடல்நிலை மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது, நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்," என்று சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு, "அப்படியானால் நான் கிளம்பலாமா?" என்று மருத்துவர் கேட்டார். ஆனால் அதற்குச் சம்மதிக்காத செல்வந்தர், "நீங்கள் இன்று இரவு முழுவதும் என்னுடனே இருக்க வேண்டும்," என்று மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார். மருத்துவரும் செல்வந்தரும் இரவு முழுவதும் விழித்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மாளிகையில் இருந்த கடிகாரம் மணிக்கொரு முறை கம்பீரமாக ஒலித்தது. ஒன்பது, பத்து, பதினொன்று என நேரம் கடந்தது. அந்தச் செல்வந்தர் அமைதியின்றித் தன்னுடைய படுக்கையறையைச் சுற்றிச் சுற்றி வந்தார். நேரம் நெருங்க நெருங்க அவர் முகத்தில் வியர்வை வடிந்தது. கவலை நிறைந்த முகத்தோடும், உயிரற்ற கண்களோடும், நடுங்கும் உடலோடும் படபடப்புடன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மருத்துவர் அவரைப் பார்த்து, "நீங்கள் அமைதியாக இருங்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது," என்று தேற்றினார். மரண பயத்தாலும், மரணத்தின் நினைவாலும் செல்வந்தர் நிம்மதியை இழந்தார். நேரம் பதினொன்றரையைத் தாண்டி, பன்னிரண்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. செல்வந்தரின் கால்களும் கைகளும் அதிகமாக நடுங்கின. அவர் அந்தப் பத்து நிமிடங்களை மிகவும் சிரமத்துடன் கழித்தார்.
மாளிகையின் கடிகாரம் சரியாக 12 முறை ஒலித்தது. "அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார் அந்தச் செல்வந்தர். கால்களின் நடுக்கமும் இதயத்துடிப்பும் சீரடைந்தது. 'கண்டம் தப்பியது' என்று நிம்மதி அடைந்தார்.
12:30 மணியளவில் அவருடைய வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். வீட்டில் இருந்த இருவரும், 'இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும்?' என்று திகைத்தனர். மருத்துவர் கதவைத் திறந்ததும், எதிரே ஒரு வேலையாள் நின்றிருந்தான். அவன் வருத்தத்துடன், "ஐயா, நம் நிலத்தில் வேலை செய்கிற முதியவரான ஜான் ஐயா சரியாக 12 மணிக்கு மரித்துவிட்டார்," என்றான்.
அதைக் கேட்ட செல்வந்தர், "அப்படியா!" என்று அதிர்ச்சியடைந்தார். ஆம், அந்தப் பள்ளத்தாக்கில் இருந்த 'உண்மையான செல்வந்தர்' சரியாக 12 மணிக்கு மரித்துப்போனார். அந்த முதியவரான ஜான், அளவிட முடியாத கிறிஸ்துவின் ஐஸ்வரியத்தையும், தேவனின் கிருபையின் மாபெரும் செல்வத்தையும் பெற்றிருந்தார்.
இன்றைய நாட்களில் நாம் பல உலகப்பிரகாரமான செல்வந்தர்களைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை. பாவம் அவர்களை நிம்மதியற்றவர்களாக மாற்றுகிறது. அவர்களில் பலர் மனநிம்மதி இல்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். அவர்கள் இவ்வுலகில் செல்வந்தர்கள்தான், ஆனால் பரலோகத்தில் ஏழைகள். மனிதன் பாவமன்னிப்பைப் பெற்று, இரட்சிக்கப்பட்டு, பரலோகத்தின் செல்வத்தைப் பெற வேண்டும் என்பதே தேவனின் விருப்பம். "பரலோகத்தின் செல்வம் அழியாதது, திருடர்களால் களவு போகாது, பூச்சியும் துருவும் அதை அழிக்காது," என்று தேவன் வேதத்தில் சொல்லியிருக்கிறார்.
வேதம் சொல்கிறது:
"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6:31-33).
"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9).





